முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !!!
முதியோர் உதவித் தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைக்கப்பட்டு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அந்தப் பதிவில், “விளிம்பு நிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ. 2,000 வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளதோடு, சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித் தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன.
நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றி உள்ளோம் நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக ரூ. 2,000-ஐ மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்து உள்ளோம்
இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29.29 லட்சம் பயனாளிகளுக்கு தலா ரூ. 3,200-ஐயும், 5.92 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ. 3,500-ஐயும், பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2.58 லட்சம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா ரூ. 4,000-ஐயும் இன்று காலை வழங்கி இருக்கிறோம்.
இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன் - தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5,000 வழங்கியது போலவே, எந்தவித அறிவிப்பும் இல்லாமல் விளிம்பு நிலையில் இருப்போர்க்கு சிறப்பு நிதியாக ரூ.2,000-ஐ வரவு வைத்திருப்பது பயனாளர்கள் இடையே வரவேற்பை பெற்று உள்ளது.

0 கருத்துகள்: