மதுக்கரை மேம்பாலம் அருகே துப்பாக்கியுடன் துரத்திய மர்ம நபர்கள்: தப்பிய 2 பேரைத் தீவிரமாகத் தேடும் போலீஸ்!
கோவை, மதுக்கரை பகுதியில் டூரிஸ்ட் வேனை வழி மறித்து ஓட்டுநரைத் துப்பாக்கியால் சுட முயன்று விட்டுத் தப்பியோடிய மர்ம நபர்கள் இருவரைப் பிடிப்பதற்காகக் காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை, மதுக்கரை அடுத்த பாலத்துறை பகுதியில் 'அரேபினியா' (Arabenia) என்ற கறுப்பு நிற டூரிஸ்ட் வேன் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள், திடீரென அந்த வேனை வழி மறித்து ஓட்டுநரைத் துப்பாக்கியால் சுட முயற்சித்து உள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக வேன் ஓட்டுநர் காரை அதிவேகமாகச் செலுத்தி அங்கு இருந்து தப்ப முயன்றார்.
இருப்பினும் விடாமல் துரத்திய அந்த மர்ம நபர்கள், வேனைப் பின்தொடர்ந்து சினிமா பாணியில் விரட்டி வந்தனர். மதுக்கரை மேம்பாலம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதி வரை அந்த நபர்கள் வேனைத் துரத்தி வந்தனர்.
அப்போது மதுக்கரை மேம்பாலம் அருகே அந்த டூரிஸ்ட் வேன் பள்ளத்தில் சிக்கிக் கொண்டது, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வேன் மேற்கொண்டு செல்ல முடியாமல் நின்றது. உடனடியாகச் சூழலை உணர்ந்த ஓட்டுநரும் அப்பகுதி மக்களும் இது குறித்துக் காவல் துறையினருக்கு அவசரத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குப் போத்தனூர் மற்றும் மதுக்கரை காவல்துறையினர் விரைந்து வந்தனர். போலிசார் வருவதைக் கண்டதும், துப்பாக்கியால் சுட முயன்ற அந்த இரு நபர்களும் தங்களது இருசக்கர வாகனத்தில் அங்கு இருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடினர்.
இச்சம்பவம் குறித்து மதுக்கரை மற்றும் கோவை எல்லைப் பகுதிகளில் தீவிர வாகனத் தணிக்கை மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி (CCTV) கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பிய இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நடுரோட்டில் டூரிஸ்ட் வேனை மறித்துத் துப்பாக்கியால் சுட முயன்ற இந்தச் அதிர்ச்சி சம்பவம், மதுக்கரை மற்றும் கோவை மக்களிடையே பெரும் பரப்பரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.