காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்: சட்டமன்றத்தில் உதயநிதி பேச்சு !!!
காவிரி விவகாரத்தில் நாம் அனைவரும் இணைந்து தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.
மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் சிறப்பு தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். இந்த சிறப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.அவர் பேசுகையில்,
"நமது தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயலும் மேகதாது அணை கட்டப்படக் கூடாது என்பது தி.மு.க வின் உறுதியான நிலைப்பாடு. காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமை பறிபோக நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு, மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட அனைத்துக்கும், மறைந்த முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு எடுத்த ஆக்கப் பூர்வமான நடவடிக்கை தான் முழு காரணம்.
ஒரு நீண்ட நெடிய சட்டப்போராட்டம், அரசியல் போராட்டம் எல்லாவற்றையும் நடத்தி தான், காவிரி மீதான உரிமையை போராடி தான் பெற்று இருக்கிறோம். ஆனால், அதனை நிர்மூலமாக்கும் வகையில், இன்றைக்கு கர்நாடகா அரசு, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அந்த முயற்சியை எடுத்தபோது அந்த சமயத்தில் எங்கள் கூட்டணியில் இருக்கக் கூடிய கட்சி, கர்நாடகாவில் ஆட்சியில் இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் மேகதாது அணை திட்டத்தை எங்களுடைய தலைவர் அப்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார்கள்.
இன்றைக்கு முதலமைச்சர் அவர்கள், மேகதாதுவில் அணைக் கட்டும் கர்நாடகா அரசின் முயற்சிக்கு எதிராக இந்த தீர்மானத்தை இன்றைக்கு கொண்டு வந்து உள்ளார். இதனை தி.மு.க சார்பில் நாங்கள் மனதார வரவேற்கிறோம். மேகதாது அணைக் கட்ட நினைக்கின்ற கர்நாடகா அரசுக்கு எதிராக எங்களுடைய தலைவர்கள், எங்கள் அரசு நடவடிக்கைகள் சிலவற்றை ஆளுங்கட்சிக்கும், முதலமைச்சருக்கும், அவைக்கும் நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
2021- ஆம் ஆண்டு மே மாதம் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே ஜூன் மாதமே மேகதாது அணைக் கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.
பிறகு அதே கருத்தை வலியுறுத்தி ஜூலை மாதத்தில் ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சருக்கும் எங்களுடைய தலைவர் அன்றைக்கு கடிதம் எழுதினார்கள். இதை அடுத்து, அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களைக் கூட்டி, எந்த காலத்திலும் அணையைக் கட்டக் கூடாது; அனுமதி அளிக்கக் கூடாது என்ற தீர்மானத்தையும் நாங்கள் நிறைவேற்றினோம்.
இப்படி, நம்முடைய தொடர் எதிர்ப்பின் காரணமாக தான், மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கையை, கடந்த பிப்ரவரி மாதம் மத்திய நீள்வள ஆணையத்திற்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது. தி.மு.க அரசின் தொடர் எதிர்ப்பின் காரணமாக திட்டப் பட்டியலில் இருந்து ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் நீக்கினார்கள்.
மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசு, விரிவான திட்ட அறிக்கை சமர்பிக்கப்படவில்லை என்பது தான் எங்களுடைய தி.மு.க அரசு இருந்த வரையிலான நிலைமை. தி.மு.க அரசும், அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தைரியமாக தமிழ்நாட்டின் எதிர்ப்பை பதிவுச் செய்ததால் தான் இது சாத்தியமானது என்பதை இந்த மாமன்றத்தில் மீண்டும் பதிய வைக்க விரும்புகிறேன்.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், மத்திய நீர்வள ஆணையம், 2018- ஆம் ஆண்டு நவம்பர் 22 தேதியிட்ட கடிதம் மூலமாக கர்நாடகா அரசுக்கு சில முக்கியமான நிபந்தனைகளை அறிவித்து இருக்கிறார்கள்.
இதில் முதலாவது நிபந்தனை என்னவென்றால், மேகதாது அணை கட்ட மத்திய நீர்வள ஆணையம் நிபந்தனையற்ற அனுமதி எதுவும் கொடுக்கப்படவில்லை. இரண்டாவதாக அணை கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகா அரசு தயாரிப்பதற்கு முன்பாக தமிழ்நாடு அரசு தெரிவிக்கின்ற பல்வேறு ஆட்சேபனைகளை அவர்கள் பரிசீலனை செய்ய வேண்டும், மூன்றாவதாக மத்திய மின்வாரிய ஆணையத்திடமும், சம்மந்தப்பட்ட மாநிலத்தில் இருக்கக் கூடிய மத்திய நீர்வள ஆணையக் குழுவுடன் இணைந்து ஆலோசனை செய்ய வேண்டும்.
இது எல்லாவற்றுக்கும் மேலாக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முன் அனுமதியையும் பெற வேண்டும் என்று கடிதத்தில் தெளிவாக எழுதி இருந்தனர். இந்த அரசு இதையெல்லாம் ஒன்றிய அரசிடம் எடுத்துக் கூறி காவிரியில் நமது தமிழ்நாட்டின் உரிமையை நாம் அனைவரும் சேர்த்து நிலைநாட்ட வேண்டும்.
மேகதாது பிரச்சனை தொடர்பாக கடந்த 2025- ஆம் ஆண்டு நவம்பர் 13- ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான பிறகு 2026- ஆம் ஆண்டு மார்ச் 04- ஆம் தேதி அன்று அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி, தமிழ்நாடு நீர்வளத்துறை செயலாளர், ஒன்றிய ஜல்சக்தி துறையின் செயலாளருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
கர்நாடகா அரசு, மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க சட்ட ரீதியாக இந்த அரசு எடுக்கின்ற அனைத்து முயற்சிகளுக்கும் திமுக நிச்சயமாக துணைக்கு நிற்கும். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தடுத்து நிறுத்துவோம் என்று கூறி இந்த தீர்மானத்திற்கு எங்களது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த தீர்மானத்தை ஒன்றிய அரசுக்கு கடிதம் மூலம் அனுப்பி வைப்பதற்கு பதிலாக, தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து ஒரு குழுவாகச் சென்று ஒன்றிய அரசிடம் வழங்கி நமது ஒற்றுமையை நாள் வெளிப்படுத்த வேண்டும். அதற்கு திமுக தயாராக உள்ளது" எனத் தெரிவித்து உள்ளார்.
பதில் அளித்து பேசிய முதலமைச்சர் விஜய்,
"எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது அரசின் தனித் தீர்மானத்தில் ஒரு கருத்தை சேர்க்க கோரி உள்ளார். அதுகுறித்து கீழ்க்கண்ட கருத்தினை பேரவைக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
மேகதாது பிரச்சனை சம்மந்தமாக எனது தலைமையில் 26/05/2026 அன்று பிரத்யேகமாக தனிநடுவர் மன்றம் அமைப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து தனி நடுவர் மன்றம் அமைக்க ஏற்கனவே தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே எதிர்க்கட்சித் தலைவரால் அளிக்கப்பட்ட கருத்தினை நான்காவது பத்திக்கு அடுத்து கூடுதலாக சேர்க்கலாம் என்று பேரவைத் தலைவரைக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.