கோவையில் ரூ. 24 லட்சம் பறிமுதல் ; தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி வேட்டை !!!
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடிசியா அருகே தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத 24 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
துணை வட்டார வளர்ச்சி அலுவலரும், தேர்தல் பறக்கும் படை அதிகாரியுமான சுவாமிநாதன் தலைமையில் இன்று மதியம் 12 மணியளவில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது பீடம்பள்ளியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் விஷ்ணுபிரசாத் பயணித்த வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 24 லட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட தொகை கோவை தெற்கு துணை தாசில்தார் கருணாநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, மேலதிக நடவடிக்கைக்காக அந்த பணம் வருமான வரித்துறை துணை இயக்குனரிடம் அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த பணம் குறித்து விஷ்ணுபிரசாதிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்: