இந்தியாவுக்கான 2 எல்.பி.ஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம் !!!
இந்தியாவுக்கு வரவிருந்த சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையில் முடக்கப்பட்டு உள்ள நிலையில், எல்.பிஜி எரிபொருள் நிரப்பிக் கொண்டு இந்தியாவுக்கு வர இருந்த சரக்கு கப்பல்களில் இரண்டு இன்று அதிகாலையில் ஹோர்முஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்து பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதாக மத்திய அரசு இன்று தெரிவித்தது.
இது குறித்து, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை சிறப்புச் செயலர் ராஜேஷ் குமார் சின்ஹா செய்தியாளர்களுடன் இன்று பேசுகையில் :-
“அவை (சரக்கு கப்பல்கள்) ஹோர்முஸ் நீரிணையை அதிகாலையில் கடந்து இந்தியாவுக்கு வந்து கொண்டு இருக்கின்றன” என்று தெரிவித்தார்.
இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகத்தின்(எஸ்.சி.ஐ) ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி என்ற அந்த இரு கப்பல்கலில் சுமார் 92,712 மெட்ரிக் டன் எரிவாயு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவை முறையே முந்த்ரா மற்றும் கந்த்லா துறைமுகங்களை மார்ச் 16, 17-இல் சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் இடையே, இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபதாலி இன்று பேசும்போது,
‘ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து செல்ல இந்திய சரக்கு கப்பல்கள் சிலவற்றுக்கு ஈரான் அரசால் சிறப்பு விலக்களிக்கப்பட்டு உள்ளது’ என்று தெரிவித்தார். ஆனால், எத்தனை கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க அனுமதிக்கப்பட்டு இருக்கின்றன என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.

0 கருத்துகள்: