மத்திய அரசுக்கு நற்பெயர் கிடைத்துவிடும் : தமிழக வளர்ச்சி திட்டங்களை முடக்குகிறது தி.மு.க - பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு !!!
மத்திய அரசுக்கு நற்பெயர் கிடைத்துவிடும் என, தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றாமல் தி.மு.க தாமதப்படுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
ஊரகப் பகுதிகளில் ஏழைகளுக்கு வீடுகள், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் நகரங்களில் புல்லட் ரயில் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் தி.மு.க மெத்தனமாக செயல்பட்டதாகக் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைவது மிகவும் முக்கியமானது எனவும் கூறினார்.
திருச்சி மாவட்டம் பஞ்சபூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
கூட்டத்தில் நரேந்திர மோடி பேசும்போது:
''2021-ல் ஆட்சி அமைத்த திமுக அதன் கடமைகளைச் செய்ய தவறி விட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்து உள்ளன.
தமிழகத்தின் உணவு பாதுகாப்புக்கு டெல்டா விவசாயிகளே முதுகெலும்பாக உள்ளனர். ஆனால், நெல்லுக்கான ஆதரவு விலையை தி.மு.க உயர்த்தவில்லை. நெல்லை பாதுகாக்க உரிய கிடங்குகளும் தமிழ்நாட்டில் இல்லை.
தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும் என தி.மு.க அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது ? என விவசாயிகள் கேட்கின்றனர். ஆனால், இதற்கு காரணமானவர்களை தி.மு.க பாதுகாக்கிறது. மக்கள் நலனை விட அரசியல் நலனே தி.மு.க வுக்கு முக்கியம். ஆனால், தே.ஜ.கூட்டணிக்கு மக்கள் நலனே முக்கியம்.
திருச்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்தார். வேலைகள் பணத்திற்கு விற்கப்பட்டால், ஏழை, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களின் கனவு நசுக்கப்படும்
மத்திய அரசுக்கு பாராட்டு கிடைக்கும் என்பதற்காக திட்டங்களை நிறைவேற்றுவதை தாமதப்படுத்துகிறது. தி.மு.க அரசு. ஊரகப் பகுதிகளில் ஏழைகளுக்கு வீடுகள், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் நகரங்களில் புல்லட் ரயில் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் தி.மு.க மெத்தனமாக இருந்தது.
தமிழ்நாட்டிற்கு ரூ. 16 லட்சம் கோடி மத்திய அரசு கடன் அளித்து உள்ளது.
தி.மு.க ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் உள்ளது. தி.மு.க வைச் சேர்ந்தவர்களே பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதை செய்திகளில் பார்த்தோம். பெண்களுக்கு தீங்கிழைத்து விட்டு குற்றவாளிகள் சுதந்திரமாக உள்ளனர்.
ஆனால், பெண்கள் அச்சமின்றி வாழ்வதை தேஜ கூட்டணி உறுதி செய்யும். குற்றவாளிகள் தான் பயத்தில் வாழ வேண்டுமே தவிர, மக்கள் அல்ல'' எனக் குறிப்பிட்டார்.


0 கருத்துகள்: