அ.தி.மு.க வின் ரூ.10,000 வாக்குறுதியால் எந்த தாக்கமும் ஏற்படாது” - திருமாவளவன் !!!
அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கருணைத் தொகை ரூ.10,000 வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார். இது, வரும் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது:
“அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கருணைத் தொகை ரூ.10,000 வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார். இது தேர்தல் காலத்து வாக்குறுதிகள். வழக்கமான வாக்குறுதிகள் தான். தி.மு.க ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் இந்த அறிவிப்பை செய்து இருக்கலாம் என்று நினைக்கிறேன். இருந்தாலும் கூட இது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
தி.மு.க வுக்கு எதிராக அ.தி.மு.க வாக்குறுதிகளை அறிவித்து இருக்கிறது என்கிற புரிதல் மக்களுக்கு இருக்கும். எனவே, அ.தி.மு.க வின் தேர்தல் வாக்குறுதிகள் வரும் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இலவசங்கள் கூடாது என்ற கருத்தை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்து உள்ளோம். கல்வி, மருத்துவத்தை தவிர வேறு எதனையும் இலவசமாக வழங்கக் கூடாது எனக் கூறி உள்ளோம். தி.மு.க மகளிர் மேம்பட்டுக்காக, மாணவச் செல்வங்களை மேம்படுத்துவதற்காக உரிமை தொகையை வழங்குகிறது. சமூகத்தில் மிகவும் தாழ்த்தப்பட்ட நிலையில் இருக்கிற அல்லது காலகாலமாக வஞ்சிக்கப்பட்ட நிலையில் இருக்கின்ற, அதிகாரம் இல்லாமல் இருக்கின்ற நிலையில், அவர்களை மேம்படுத்தும் என்ற நிலையில் அந்தத் திட்டத்தை விடுதலை சிறுத்தை கட்சி வரவேற்றது. இதனால் ஏற்படுகிற நிதிச்சுமை என்பது சமாளிக்கதக்க கூடிய ஒன்றாக இருக்கிறது என்ற நம்பிக்கையில் தான் இந்த நிலைப்பாட்டை தி.மு.க மேற்கொண்டு இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
கடந்த காலத்தில் கடுமையாக நிதி நெருக்கடி சூழ்நிலையிலும் மத்திய அரசு, மாநிலத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி பங்கீட்டை ஒதுக்காமல் தவிர்த்தும் கூட, தமிழகத்தின் மொத்த உற்பத்தி ஜி.டி.பி யை தமிழக அரசு உயரச் செய்து இருக்கிறது. பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்து இருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது. மீண்டும் தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று தி.மு.க ஆட்சி அமைக்கும்.
விஜய் மீது விமர்சனம்:
த.வெ.க தலைவர் விஜய் யார் கூறுவதையோ, எழுதிக் கொடுப்பதையோ பேசுகிறார். தி.மு.க எதிர்ப்பை மட்டுமே அவர் பேசுகிறார். கட்சி தொடங்கிய நாள் முதல் இதுவரை வரை அவருக்கு அஜெண்டாவாக உள்ளது, தி.மு.க எதிர்ப்பு மட்டும் தான். தி.மு.க எதிர்ப்பு என்றாலும் மாற்றுக் கருத்து இல்லை. செயல் திட்டம் என்ன, யாருக்காக கட்சி தொடங்கினார் என்று எந்த இடத்தை நோக்கி அவர் பயணிக்கிறார் என தெரியவில்லை. இதுவரை அரசியல் களத்தில் இருக்கிற என்னைப் போன்றோர் புரிந்து கொள்ள முடியவில்லை” என்றார்.
ஓ.பி.எஸ்ஸுக்கு வரவேற்பு:
விடுதலை சிறுத்தைகள் கட்சி பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு இருக்கிறதா? என்ற கேள்விக்கு, “ஒவ்வொரு கட்சியாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள். தொகுதியைப் பொறுத்தவரை அதனை தற்போது கூற முடியாது.
எது எப்படி இருந்தாலும் எங்கள் கூட்டணியில் எந்த சிக்கலும் இயலாதவாறு பார்த்துக் கொள்வது எங்களுக்கான பொறுப்பு, கடமை. விமர்சனம் ஆயிரம் இருக்கலாம். ஆனால், எங்களது கூட்டணி கட்டுக் கோப்பாக இருக்கும். தொகுதிப் பங்கிட்டால் எந்த சிக்கலும் இருக்காது.
ஓ.பன்னீர்செல்வம் மிகவும் உறுதியானவர். சகிப்புத் தன்மை உள்ளவர். சூழலுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கும் பக்குவம் அவரிடத்தில் உண்டு. விட்டுக் கொடுத்துப் போகும் இடத்தில் அவர் இருக்கிறார். அ.தி.மு.க வில் மீண்டும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். ஆனால், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதற்கு ஏன் ?முன்வரவில்லை என்று விளங்கவில்லை. ஓ.பி.எஸ் தி.மு.க அணியில் இணைந்தால், அதை வரவேற்கிறேன்” என்று தெரிவித்தார்.

0 கருத்துகள்: