வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

ஊழல்கள் எல்லாம் தனக்குத் தெரியாமல் நடந்தது என்று கூறப் போகிறாரா ? : கே.என்.நேரு மீதான ஊழல் வழக்கு குறித்து ஸ்டாலின் என்ன கூறப் போகிறார் ?’’ - அண்ணாமலை கேள்வி ...

SHARE

 ஊழல்கள் எல்லாம் தனக்குத் தெரியாமல் நடந்தது என்று கூறப் போகிறாரா ? : கே.என்.நேரு மீதான ஊழல் வழக்கு குறித்து ஸ்டாலின் என்ன கூறப் போகிறார் ?’’ - அண்ணாமலை கேள்வி ...

தி.மு.க அமைச்சர் கே.என்.நேரு ரூ.888 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ள நிலையில், இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் என்ன கூறப் போகிறார், இந்த ஊழல்கள் எல்லாம் தனக்குத் தெரியாமல் நடந்தது என்று கூறப் போகிறாரா ? என்று பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

https://x.com/i/status/2024734573050155075


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ‘‘தி.மு.க அமைச்சர் திரு. கே.என்.நேருவின் துறையான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில், ரூ.888 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், அமைச்சர் கே.என்.நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதை வரவேற்கிறோம்.

கடந்த அக்டோபர் மாதம், தமிழக அரசு தலைமைச் செயலாளர், தமிழக காவல்துறை தலைவர், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியோருக்கு, இந்த ரூ.888 கோடி ஊழலில், அமைச்சர் திரு. கே.என்.நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி, கடிதம் மூலம் அமலாக்கத் துறை வலியுறுத்தி இருந்தது. அதே போல, கடந்த டிசம்பர் மாதம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்தங்கள் வழங்குவதில் சுமார் ரூ.1,020 கோடி ரூபாய் லஞ்ச ஊழல் நடந்து இருக்கிறது எனக் கூறி, அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்யக் கோரி இருந்தது.

இது தவிர, இந்த ஆண்டு ஜனவரி மாதம், இதே துறையில், பணியிட மாற்றம் வழங்க லஞ்சம் பெற்ற வகையில் ரூ.365.87 கோடி லஞ்ச ஊழல் நடைபெற்று இருப்பதாகக் கூறி, மூன்றாவது முறையும், அமலாக்கத்துறை ஆதாரங்களை அனுப்பி இருந்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மூன்று கடிதங்களையும் இத்தனை மாதங்களாக தி.மு.க அரசு கிடப்பில் போட்டு இருந்தது.

தெளிவான ஆதாரங்களுடன், அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியும், அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் தற்போது என்ன பதில் கூறப் போகிறார் ?

தி.மு.க ஆட்சியில், ஒரு ஆண்டில், ஒரு துறையில் மட்டுமே, சுமார் ரூ.2,300 கோடி ஊழல் நடந்து இருக்கிறது என்றால், தமிழகம் என்ன நிலையில் இருக்கிறது ? இந்த ஊழல்கள் எல்லாம் தனக்குத் தெரியாமல் நடந்தது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறப் போகிறாரா ?


உடனடியாக, அமலாக்கத்துறை கடந்த டிசம்பர் மாதம் அனுப்பிய ரூ.1,020 கோடி பணி ஒப்பந்தங்கள் வழங்கியதில் நடைபெற்ற லஞ்ச ஊழல் வழக்கிலும், ரூ.365.87 கோடி பணியிட மாற்ற லஞ்ச வழக்கிலும், அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இல்லையேல், இந்த அனைத்து ஊழல்களும், முதல்வர் ஸ்டாலினுக்குத் தெரிந்தே நடந்து இருக்கிறது என்ற முடிவுக்கே, மக்கள் வருவார்கள்’’ என தெரிவித்து உள்ளார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: