சனி, 28 பிப்ரவரி, 2026

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் : துபாய், புர்ஜ் கலிஃபாவை அவசரமாய் காலி செய்த மக்கள் !!!

SHARE

 அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் : துபாய், புர்ஜ் கலிஃபாவை அவசரமாய் காலி செய்த மக்கள் !!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரம் அடைந்து உள்ள நிலையில், மத்திய கிழக்கு முழுவதும் பாதுகாப்பு பதற்றம் அதிகரித்து, சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

துபாய் நகரம் முழுவதும் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு அமைந்து உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா, காலி செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் தலைநகர் டெஹ்ரானில்

தாக்குதல்களுக்கு பதிலடியாக, வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலின் போது ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி மற்றும் துபாய் நகரங்கள், கட்டாரின் தோஹா மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 

துபாயில் வசிக்கும் பொதுமக்கள் பலத்த வெடி சத்தங்கள் கேட்டதாகவும், வானில் ஏவுகணைகள் பாய்வதை நேரடியாக கண்டதாகவும் தெரிவித்து உள்ளனர். 

வெடிப்பின் அதிர்வால் கட்டிடங்களின் ஜன்னல்கள் கூட அதிர்ந்ததாக சாட்சிகள் கூறி உள்ளனர்.

அபுதாபியில் உள்ள குடியிருப்பு பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பை அச்சுறுத்தும் இந்த தாக்குதல் மிகவும் ஆபத்தான பதற்ற நிலையை உருவாக்கி உள்ளதாகவும், இது பிராந்திய அமைதிக்கு எதிரான செயலாகவும் அமைச்சகம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதற்கு முன்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் பல முக்கிய இடங்களை குறி வைத்து ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு இருந்தன. டெஹ்ரானில் அமைந்து உள்ள ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனெய் வசிக்கும் வளாகம் தாக்குதலின் இலக்காக இருந்ததாக தகவல்கள் வெளியானது. தாக்குதல் நடைபெற்ற போது அவர் அங்கு இருந்தாரா ?என்பது தெளிவாக தெரியவில்லை.

தாக்குதலுக்கு பின்னர் டெஹ்ரான் நகரின் பல பகுதிகளில் புகை மூட்டம் எழுந்தது காணப்பட்டது. இந்த ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை “ஆபரேஷன் எபிக் ஃப்யூரி” என்று பெயரிட்டதாக கூறப்படுகிறது. 

இந்த தாக்குதலில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தளபதி முகமது பக்பூர் உயிரிழந்ததாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்து உள்ளது.

அதற்கு பதிலடியாக இஸ்ரேலை நோக்கி பல ஏவுகணைகளை ஒரே நேரத்தில் ஈரான் ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்கு முழுவதும் பதற்ற நிலை அதிகரித்து உள்ளது. அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது படைத்தள தலைமையகம் அமைந்து உள்ள பஹ்ரைனில் ஏவுகணை அச்சுறுத்தல் காரணமாக அவசர எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.


அமெரிக்க ராணுவத்தினர் தங்கி உள்ள வளைகுடா நாடுகளின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கட்டார் அரசு வெளியிட்ட அறிக்கையில், தங்களைக் குறி வைத்து வந்த தாக்குதல்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் வெற்றிகரமாக தடுக்கப்பட்டதாகவும், உயிர்ச்சேதம் அல்லது சொத்து சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: