தமிழக இடைக்கால பட்ஜெட்: அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துக்கள் ...
தமிழக அரசின் பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றும், விமர்சித்தும் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் தொடங்கி, வேளாண்மையில் அறிவியலைப் பயன்படுத்துவது வரையிலான நம்முடைய முன்னெடுப்புகளால், உழவர் வாழ்வில் உதய சூரியனின் ஒளி பரவுகிறது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: தமிழின தொன்மையை விளக்கும் அருங்காட்சியகங்கள் முதல் நவீன உலகுக்கான செயற்கை நுண்ணறிவு அறிவுசார் பொருளாதார வளர்ச்சி வரை அனைத்திலும் கவனம் செலுத்தி உள்ள திராவிட மாடல் பட்ஜெட்.
ம.தி.முக பொதுச் செயலாளர் வைகோ: தமிழகத்தின் வளர்ச்சியில் எவரையும் பின்தங்கி விட அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதை செயல்படுத்தும் வகையில் இடைக்கால நிதி நிலை அறிக்கை வரவேற்கத்தக்கதாக இருப்பது பாராட்டத்தக்கது.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை 3 சதவீதமாக கட்டுப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது. மத்திய அரசின் கொள்கைகளால் வேளாண் துறை பல்வேறு சவால்களைச் சந்தித்து வரும் வேளையில், தமிழக விவசாயிகளுக்குப் பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது இந்த பட்ஜெட்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பெண்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கான நேரடி நிதி உதவித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. கடும் நிதிச் சுமைகளுக்கு இடையே சாமானிய மக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் இந்த அறிக்கையை மாநில அரசு வழங்கியுள்ளது.
விமர்சனங்கள்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: வரும் மார்ச் 31, 2027-க்குள் தமிழகத்தின் மொத்தக் கடன் ரூ.10,62,248 கோடியாக உயரும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சிப் பணிகள் முடங்கிக் கிடக்கும் நிலையில், இந்த நிதி எங்கே சென்றது? தமிழகத்தை ஒரு தீராத கடன் படுகுழியில் தள்ளியதே இந்த அரசின் வரலாற்றுச் சாதனை.
பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்: இது தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் அல்ல. வெற்றுப் பெருமை பத்திரம். ஐந்தாண்டுகளாக ஏமாற்றத்துக்குப் பழகிய மக்களுக்கு இந்த ஏமாற்றமும் புதிதில்லை. மாற்றமும் தொலைவிலில்லை.

0 கருத்துகள்: