வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் - இ.பி.எஸ் விளக்கம் !!!
நிதித்துறை நிபுணர்கள் மூலமாக வரியை உயர்த்தி வருமானத்தை பெருக்கி வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார்.
அப்போது, “தி.மு.க ஆட்சியில் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டதால் மக்களின் சுமை அதிகரித்து உள்ளது. அதனை குறைக்கும் பொருட்டு தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க ஆட்சி அமைத்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக ரூ. 10,000 வழங்கப்படும்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதனிடையே, இலவசங்களால் நிதிப் பற்றாக்குறை ஏற்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்ததை குறிப்பிட்டு செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த
இ.பி.எஸ், "வருவாயை உயர்த்தி பெருக்கி, அதன் மூலமாக நாங்கள் அறிவித்த திட்டங்களை மக்களுக்கு வழங்குவோம்” என்றார்.
தொடர்ந்து, வருவாய் உயர்த்துவது என்றால் வரியை உயர்த்தப் போகிறீர்களா ? என்று மீண்டும் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இ.பி.எஸ்,
“அதனை தற்போது சொல்ல முடியாது. வரியை உயர்த்துவதில் பல்வேறு வழிகள் இருக்கின்றது. நிதித்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் மூலமாக ஆய்வு செய்து எந்தெந்த வகையில் வரியை உயர்த்த முடியுமோ ? அவ்வாறு உயர்த்தி, நிதியைப் பெற்று அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவோம்” எனத் தெரிவித்தார்.

0 கருத்துகள்: