சனி, 21 பிப்ரவரி, 2026

எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிக்கு இடம் தரக் கூடாது : தி.மு.க ஐடி அணி நிர்வாகிகள் கூட்டம் - மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் !!!

SHARE

 எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிக்கு இடம் தரக் கூடாது என்று தி.மு.க ஐடி அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.

சென்னையில் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் நடைபெற்ற ஐடி விங் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றுகையில், 

நாம் செய்தது மக்களுக்கு தெரிய வேண்டும் என்றால் முதலில் நாம் அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். அதனால், என்னுடைய பேஜை ஃபாலோ செய்வது போன்றே, முதலமைச்சர் அலுவலகப் பக்கம், நம்முடைய கட்சியின் பக்கங்கள், அரசு செய்தித் துறையின் பக்கங்கள் அனைத்தையும் தொடர்ந்து ஃபாலோ செய்யுங்கள். நம்முடைய ஐ.டி.விங்-கின் வாட்ஸ்அப் சேனலை மற்றவர்களை ஃபாலோ செய்ய வையுங்கள். ஏன் என்றால், சாதனைகளையே ஈசியாகச் செய்யும் நாம், அதை மக்களிடம் கொண்டு செல்வதில் மெத்தனமாக இருக்கக் கூடாது. அனைத்து ஊரிலும் தினமும், தி.மு.க.வின் செயல்பாடுகள், திட்டங்கள், சாதனைகள் தான் பேசுபொருளாக இருக்க வேண்டும். தேர்தல் வரைக்கும் இடைவெளியே விடாதீர்கள்.

அதேபோன்று, இன்றைக்கு நாம் எதிர்கொண்டு வீழ்த்த வேண்டிய முதல் விஷயமே ‘ஃபேக் நியூஸ்’தான். தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது கலவரத்தை உண்டு பண்ண வேண்டும். அந்தக் கலவரத் தீயில் குளிர் காய வேண்டும் என்று எதிரிகள் நினைக்கிறார்கள். 

கடந்த 5 ஆண்டுகளில் டிசைன், டிசைனாக பொய்ச் செய்திகளைப் பரப்பிப் பார்த்தார்கள். ஆனால், அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அவர்களின் பிளான் எல்லாம் அம்பலப்பட்டு, அவமானப்பட்டு நிற்கிறார்கள். இந்த பொய்ச் செய்திகள் எனும் சவால்களை நாம் முறியடித்தாக வேண்டும். அதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் மிக விழிப்புடன் ஆன்லைனில் செயலாற்ற வேண்டும்.

பொய்ச் செய்திகளைப் பரப்புவதற்கென்றே, நிறைய ‘ரைட் விங்’ அக்கவுண்ட்களை பா.ஜ.க. நடத்திக் கொண்டு வருகிறார்கள். அதில் பாதி அதிகாரப்பூர்வ பக்கங்கள், மீதியெல்லாம் மீம்ஸ் பேஜ் போன்று இருக்கும் பக்கங்கள். இவ்வாறு எதுவாக இருந்தாலும், நம்மைப் பற்றி ஒரு பொய்ச் செய்தி பரப்புகிறார்கள் என்றால், உடனே ஆதாரத்துடன் கமெண்ட்ஸ், ரிப்ளைஸ்-இல் நீங்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.

அந்தப் பொய்ச் செய்தியைப் படிப்பவர்களில் பாதி பேர் நம்முடைய விளக்கத்தைப் படித்தால் கூட அது உங்களுக்குக் கிடைத்த வெற்றிதான். இதை ஒருவர் செய்தால் போதாது. ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். அப்போது தான் பொய்ச் செய்தி பரப்புபவர்களுக்கு பயம் இருக்கும். நம்முடைய ஆட்கள் நூற்றுக்கணக்கில் போடும் ரிப்ளையில் அவர்கள் அந்தப் பொய்ச் செய்தியையே டெலிட் செய்துவிட்டு ஓட வேண்டும்.

 நம்மைச் சீண்டிப் பார்ப்பது போன்று நிறைய பதிவுகளைப் போடுவார்கள். ஆனால், நாம் அதை முதிர்ச்சியுடன் அணுக வேண்டும். காமெடியாக பதிலடி கொடுங்கள். கிண்டலாகப் பேசுங்கள். ஆனால், எதுவாக இருந்தாலும் பொறுமையாக, கூலாக டீல் செய்யுங்கள்.

அவர்களுக்கு வந்தால் ரத்தம், நமக்கு வந்தால் தக்காளி சட்னி” என்ற நினைப்பில் தான் செய்தி சேனல்களும், தேர்தல் ஆணையமும் கூட செயல்படுகிறது. அதனால், நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லையும், உருவாக்கும் ஒவ்வொரு கன்டென்டையும் பொறுப்புடன் உருவாக்குங்கள். 

நம்முடைய எதிரிகளுக்கு இருக்கும் ஊடக சொகுசு நமக்கு என்றைக்குமே இருந்தது கிடையாது. அதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். தோழமைச் சக்திகளுடன் சிண்டு முடியும் வேலைகளில் எதிர்க்கட்சியினர் ஈடுபடுவார்கள். அவர்களின் சூழ்ச்சிக்கு நாம் இடம் தரக் கூடாது. கட்சியில் இருந்து வரும் அஃபிசியல் செய்திகளை மட்டும் நம்பிச் செயல்படுங்கள். 

இஷ்டத்திற்குப் பரப்பப்படும் புரளிகளுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: