செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து... கால்களை இழந்த இளைஞர்கள்...

SHARE

 மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து... கால்களை இழந்த இளைஞர்கள்...


ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி, விபத்து ஏற்படுத்திய போதை ஆசாமியை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி - குண்டாறு கரையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திய மூவர், காரில் அங்கு இருந்து புறப்பட்டு உள்ளனர். போகும் வழியில் கமுதி பேருந்து நிலையம் அருகே போதையில் மூவருக்குள்ளும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, காரை பாதியில் நிறுத்தியவர்கள், போதையில் வாய் தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.

அதில் பின்னால் அமர்ந்து இருந்த இருவர், காரை விட்டு கீழிறங்கி அங்கு இருந்து பெட்டிக் கடைக்குச் சென்று உள்ளனர். அப்போது காரின் டிரைவர் சீட்டில் அமர்ந்த போதை ஆசாமி, சண்டை போட்டு சென்ற கூட்டாளிகள் மீது காரை ஏற்றி கொடூரச் செயலில் ஈடுபட்டு உள்ளார். அதில் இருவரில் ஒருவருக்குக் கால் உடைந்து துண்டானது. தொடர்ந்து போதை வெறியில் காரை நிறுத்தாமல் தாறுமாறாக ஓட்டி அங்கு இருந்த கடைகளில் மோதி ஆக்ரோஷத்தில் ஈடுபட்டு உள்ளார். சாலையோரம் நின்ற பொதுமக்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள அங்கு இருந்து தலைதெறிக்க ஓடினர்.

பேருந்து நிலையத்தில் பாதுகாப்புப் பணிக்காக நின்று இருந்த ஒரே ஒரு காவலர் எவ்வளவோ முயற்சி செய்தும், குடிபோதையில் காரை இயக்கிய நபரை தடுக்க முடியாமல் போராடினார். ஒரு கட்டத்தில் பழக்கடையின் கூடாரத்தில் மோதி நின்ற காரின் கண்ணாடிகளை சுக்குநூறாக உடைத்து காரை ஓட்டியவரை கீழே இழுத்துப் போட்டு அடித்து உடைத்து வெளுத்தெடுத்தனர்.

பின்னர், தகவல் அறிந்து வந்த போலீசார் போதை ஆசாமி மீது காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். கால்களை இழந்து, வலியால் தவிக்கும் இருவரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து உள்ளனர். இப்பெரும் கோர சம்பவம் கமுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: