வியாழன், 19 மார்ச், 2026

சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்புப் பணி: தமிழகம் வந்தடைந்த 20,000 துணை ராணுவ படையினர் !!!

SHARE

 சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்புப் பணி: தமிழகம் வந்தடைந்த 20,000 துணை ராணுவ படையினர் !!!

தமிழகம் வந்தடைந்த 20,000 துணை ராணுவ படையினர்

20 ஆயிரத்திற்கு மேற்பட்ட துணை ராணுவ படையினர் தமிழ்நாடு வந்தடைந்து உள்ள நிலையில், தேவைப்பட்டால் கூடுதலாக வரவழைக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி வெளியாகி உள்ள நிலையில், அரசியல் களமும் விறுவிறுப்பு அடைந்து உள்ளது. நான்கு முனைப் போட்டியை சந்திக்க உள்ள தமிழ்நாடு தேர்தல், ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 30 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

தொடர்ந்து, வேட்பு மனு பரிசீலனை ஏப்ரல் 7 ஆம் தேதியும், வேட்பு மனுக்களை ஏப்ரல் 9 ஆம் தேதியும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அதை அடுத்து ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப் பதிவும், மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் நியாயமாகவும், அமைதியாகவும் நடப்பதை உறுதி செய்ய, பதற்றமான வாக்குச் சாவடிகள் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

அதன்படி, ஒவ்வொரு மாவட்டங்களிலும் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசுப் பொருள் விநியோகம் செய்யப்படுவதை தடுக்கும் வகையில், ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக 234 தொகுதிகளிலும், தொகுதிக்கு தலா 9 பறக்கும் படைகள், 9 நிலை கண்காணிப்புக் குழுக்கள் என்ற விகிதத்தில், தமிழ்நாடு முழுவதும் 2,160 பறக்கும் படைகள், 2,160 நிலை கண்காணிப்புக் குழுக்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும், தமிழ்நாட்டில் 5.69 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், 75,032 வாக்குச்சாவடிகள் ஓட்டுப் போடுவதற்காக ஏற்பாடு செய்யப்படும். அவை அனைத்திற்கும் பாதுகாப்பு தரும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், சட்டமன்றத் தேர்தலுக்கு 3,00 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே, 50 கம்பெனி துணை ராணுவ படையினர் வந்து உள்ள நிலையில், இன்று 250 கம்பெனி துணை ராணுவ குழுவினர் தமிழகம் வந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு கம்பெனிக்கு தோராயமாக 70 முதல் 90 வீரர்கள் இருப்பார்கள். அதன்படி, தமிழக சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட துணை ராணுவ படையினர் தமிழ்நாடு வந்து அடைந்து உள்ளதாகவும், தேவைப்பட்டால் கூடுதல் துணை ராணுவ படையினர் வரவழைக்கப்படுவார்கள் எனவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்து உள்ளார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: