உதவிப் பேராசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர் !!!
2025-26 ஆம் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யயப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டு வள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளது:
தமிழ்நாட்டில் உயர் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர் கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப் படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலை வாய்ப்பினை உறுதி செய்தல், “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர் கல்வி பயில “புதுமைப் பெண்” திட்டம் மற்றும் மாணவர்கள் உயர் கல்வி பயில “தமிழ்ப் புதல்வன்” ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித் தொகை வழங்குதல், அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு இளநிலை தொழிற் கல்வி படிப்புகளுக்கான சேர்க்கையில் 7.5 விழுக்காடு முன்னுரிமையின் அடிப்படையில் இடஒதுக்கீடு, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் தமிழ்நாடு உயர் கல்வி மாணவர்கள் சேர்க்கையில் 47 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணி இடங்களில் 2,708 பணி இடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நியமனம் செய்வதற்கு அரசால் அனுமதித்து ஆணை வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில், உதவிப் பேராசிரியர் காலிப் பணி இடங்களை நிரப்பிட ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 16.10.2025 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையின்படி, பணி நாடுநர்களால் இணையவழி வாயிலாக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 61 பாடப் பிரிவுகளுக்கான 2,708 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எழுத்துத் தேர்வு 27.12.2025 அன்று நடத்தப்பட்டு, முதற்கட்டமாக 4 பாடப் பிரிவுகளுக்கு மட்டும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் பணிகள் நிறைவு பெற்று, பணி நாடுநர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நான்கு பாடப் பிரிவுகளில் 5 நபர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி இடத்திற்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.
மீதமுள்ள பணி இடங்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நடத்தி, தெரிவு செய்யப்படும் நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் விரைவில் வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில், உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


0 கருத்துகள்: