கரூர் பலி : சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் விஜய் !!!
கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராக த.வெ.க தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
விஜய்யுடன் தனி விமானத்தில் 7 பேர் டெல்லி செல்கின்றனர். த.வெ.க நிர்வாகி சி.டி.ஆர் நிர்மல்குமார், உதவியாளர் ஜெகதீஷ், ஓட்டுநர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் சென்று உள்ளனர். தேஜ கூட்டணிக்கு பா.ஜ.க அழைக்கும் நிலையில் விஜய்யின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் 27-ஆம் தேதி த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஜனவரி 12, ஜன. 19 ஆகிய தேதிகளில் சி.பி.ஐ அனுப்பிய அழைப்பாணையின்படி டெல்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் விஜய் ஆஜராகி வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். மூன்றாவது முறையாக விஜய் கடந்த (மாா்ச் 10) ஆஜராக சி.பி.ஐ அழைப்பாணை அனுப்பியது.
இந்த அழைப்பாணையின்படி செவ்வாய்க்கிழமை அவரால் ஆஜராக இயலவில்லை என்றும், த.வெ.க வேட்பாளர்கள் நேர்காணல் இருப்பதால் 10 நாள்களுக்குப் பிறகு வேறொரு தேதியில் டெல்லிக்கு பதிலாக சென்னையில் ஆஜராக புதிதாக அழைப்பாணை அனுப்பினால் ஆஜராகி வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க விரும்புவதாகவும் விஜய் சார்பில் சி.பி.ஐ க்கு தெரிவிக்கப்பட்டது.
இதைப் பரிசீலித்த சி.பி.ஐ, விஜய் செவ்வாய்க்கிழமை ஆஜராகாமல் இருக்க விலக்கு அளித்தது. இதன் இடையே இந்த வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் மாா்ச் 15-ஆம் தேதி நாளை மீண்டும் ஆஜராக விஜய்க்கு சி.பி.ஐ அழைப்பாணை அனுப்பி உள்ளது. குறிப்பிட்ட தேதியில் சி.பி.ஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராக இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

0 கருத்துகள்: