தனி விமானத்தில் விஜய் மும்பை பயணம் : தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு - ஜனநாயகன் சென்சார் விவகாரம் காரணமா ?
த.வெ.க தலைவர் விஜய் தனி விமானத்தில் சென்னையில் இருந்து மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.
நடிகர் விஜய் தனி விமானத்தில் இன்றிரவு மும்பை புறப்பட உள்ளதாக நேற்று காலை முதல் தகவல் வெளியாகி வந்தது. ஆனால், அவர் என்ன காரணத்திற்காக மும்பை செல்கிறார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், நடிகர் விஜய் நேற்று இரவு 7.10 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். சென்னை பழைய விமான நிலையம் கேட் எண் 6 பகுதிக்கு காரில் வந்த அவர், அங்கு இருந்து தனி விமானம் நிற்கும் பகுதிக்கு நடந்து சென்றார். அங்கு அவருக்கு பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், தனி விமானத்தில் ஏறினார். அதைத்தொடர்ந்து அந்த தனி விமானம் நேற்று இரவு 7.24 மணிக்கு சென்னையில் இருந்து மும்பைக்கு புறப்பட்டு சென்றது.
விஜய் உடன் வழக்கமாக தனி விமானத்தில் செல்லும் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் த.வெ.க கட்சியினர் உள்ளிட்ட யாரும் அந்த தனி விமானத்தில் பயணிக்கவில்லை. இதன் இடையே, விஜய் ஜனநாயகன் திரைப்பட தணிக்கைச் சான்று சம்பந்தமாக மும்பை சொல்வதாக ஒரு தரப்பில் கூறப்படுகிறது.
மற்றொரு தரப்பில் விஜய் தனது குடும்ப நண்பர் ஒருவரின் இல்லம் சம்பந்தப்பட்ட விழா மும்பையில் நடக்க இருப்பதாகவும், அதில் கலந்து கொள்வதற்காக விஜய் செல்வதாகவும் கூறுகின்றனர். மேலும், இன்று மாலை விஜய் மும்பையில் இருந்து சென்னை திரும்பி விடுவார் என்றும் கூறப்படுகிறது.
விஜய்யின் இந்த திடீர் மும்பை பயணம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: