எல்.பி.ஜி நிலையங்கள் மூடல் : ஆட்டோ, கார் சேவை முடங்கும் அபாயம் !!!
தமிழ்நாட்டில் ஆட்டோக்கள், வாடகை கார்களுக்கு விநியோகிக்கப்படும் எல்பிஜி எரிவாயு நிலையங்கள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன.
மத்திய கிழக்கு போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் எரிப்பொருள்கள் முடங்கி உள்ளன.
வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எரிப்பொருள்கள் கொண்டு வரப்படும் ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தை கடந்த 10 நாள்களாக ஈரான் மூடியுள்ளது. இதனால் கையிருப்பில் இருக்கும் எரிவாயு, பெட்ரோல், டீசல்கள் படிப்படியாக குறைந்து வருகின்றன.
முதல்கட்டமாக வணிகப் பயன்பாட்டுக்கு விநியோகிக்கப்படும் சமையல் சிலிண்டர்களை நிறுவனங்கள் நிறுத்தி வைத்து இருக்கும் நிலையில், 5 நட்சத்திர உணவகங்கள் முதல் டீக்கடைகள், தட்டுக்கடைகள் வரை படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இன்று காலைமுதல் ஆட்டோ, வாடகை கார்களுக்கு விநியோகிக்கப்படும் எல்பிஜி நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன.
நகரின் சில பகுதிகளில் மட்டுமே எல்.பி.ஜி நிலையங்கள் திறக்கப்பட்டு வரும் நிலையில், மணிக் கணக்கில் ஆட்டோக்களும், கார்களும் வரிசையில் நிற்கின்றன.
படிப்படியாக எல்.பி.ஜி நிலையங்கள் அனைத்தும் மூடப்படும் பட்சத்தில் ஆட்டோ சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் மூலம் இயங்கும் ஆட்டோக்களின் கட்டணம் பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளது.

0 கருத்துகள்: