அ.தி.மு.க வின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதி : ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு !!!
ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொங்கல் தொகுப்புடன் இனி ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும் என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
அதேபோல வரும் தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது பேசியவர்,
"மு.க. ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க அரசில் அத்தியாவசியப் பொருள்களின் விலை விஷம் போல ஏறி உள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் ஆகியவை இந்த அரசால் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் மக்களின் குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்து விட்டது.
மக்களின் சுமையைக் குறைக்கும்பொருட்டு வரும் தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக ரூ. 10,000 வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்து இருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும். 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ. 1,000 வழங்கப்படும்.
மீன் பிடித் தடை காலங்களில் மீனவர்களுக்கு தற்போது ரூ. 8,000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் இது அ.தி.மு.க ஆட்சி அமைத்த பிறகு ரூ.12,000 ஆக உயர்த்தப்படும்.
விசைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா மின்சாரம் 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாக உயர்த்தப்படும்.
நகரப் பகுதிகளில் நடைபாதையில் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்" என்று அறிவித்தார்.
முதல் கட்ட வாக்குறுதிகள்:
சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட குலவிளக்குத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரருக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும். இந்தத் தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
அதேபோல் ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து திட்டம் செயல்படுத்தப்படும்.
தற்போது இருக்கும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
கிராமப்புறங்களில் வீடுகள் இல்லாதவர்களுக்கு அம்மா இல்லம் திட்டம் மூலம் அரசு சார்பில் இடம் வாங்கி வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.
நகர்ப்புறங்களில் வசிக்கும் வீடுகள் இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் இடம் வாங்கி அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித்தரப்படும்.
ஒரே வீட்டில் வசிக்கும் பட்டியலின மக்கள், மகன்கள் திருமணம் செய்து தனிக்குடித்தனம் செல்லும்போது அரசு சார்பில் இடம் வாங்கி கான்க்ரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
100 நாள்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாள்களாக உயர்த்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இந்தத் திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும்.
அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் மகளிருக்கு ரூ. 25,000 மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.
2 ஆம் கட்ட அதிமுகவின் வாக்குறுதிகள்
அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் முதியோர் ஓய்வூதியத் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கான மாத உதவித் தொகை ரூ. 1,200-இல் இருந்து ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.
மாணவர்களின் வங்கிக் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். அந்த தொகையை அரசே ஏற்கும்.
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசமான வழங்கப்படும்.
ஜல்லிகட்டில் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ. 10 லட்சமும், காயம் அடைந்தோருக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப்படும். அரசாணை வெளியிட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அரசு சார்பில் ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இஸ்லாமிய உள்ளிட்ட சிறுபான்மையின பெண்கள் சுயதொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும்” எனத் தெரிவித்து உள்ளார்.

0 கருத்துகள்: