வண்ணங்களோடு மனிதாபிமானமும் ; கோவையில் 'சஹேலி' மகளிர் குழுவின் நெகிழ்ச்சியான ஹோலி கொண்டாட்டம் - நலத்திட்ட உதவிகள் வழங்கி, பூக்களால் ஹோலி கொண்டாடி சாதனைப் பெண்கள் அசத்தல் !!!
கோவையின் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டம், வெறும் வண்ணத் திருவிழாவாக மட்டுமின்றி, ஒரு மகத்தான சேவைத் திருவிழாவாகவும் மலர்ந்தது.
கோவையைச் சேர்ந்த 'சஹேலி' (Saheli) மகளிர் சமூகக் குழுவினர் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வு, சமூகப் பொறுப்புணர்வோடு பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்தது.
இந்த ஹோலி பண்டிகையை முன்னிட்டு, தேவை உள்ளவர்களுக்குச் சக்கர நாற்காலிகள் (Wheelchairs) மற்றும் ஏழை மாணவர்களின் கல்விக்கான நிதியுதவிகள் வழங்கப்பட்டன.
உரிமை கோரப்படாத மற்றும் அநாதை உடல்களைக் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 10 ஆண்டுகளாக முறையாகத் தகனம் செய்வதற்குச் சஹேலி குழுவினர் செய்து வரும், தன்னலமற்ற சேவை குறித்து இந்த நிகழ்வில் நெகிழ்ச்சியுடன் நினைவு கூரப்பட்டது.
மேலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாகவும், பாதுகாப்பான கொண்டாட்டத்தை உறுதி செய்யவும், செயற்கை வண்ணங்களுக்குப் பதிலாக மலர்களைத் தூவி (Phoolon ki Holi) ஹோலி கொண்டாடப்பட்டது.
16 வயது முதல் 60 வயது வரையிலான பெண்கள் இதில் உற்சாகமாகப் பங்கேற்றனர். மொழி, மதம், சாதி என எவ்வித பாகுபாடும் இன்றி, மகிழ்ச்சியும் உதவியும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை அவர்கள் பறைசாற்றினர்.
சஹேலி மண்டலத்தைச் சேர்ந்த 26 உறுப்பினர்கள் ஒருங்கிணைத்த இந்த விழாவில், சுமார் 600-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

0 கருத்துகள்: