தமிழக - கேரளா எல்லையான ஆனைக்கட்டி வனப்பகுதியில் சோகம் : மகனைப் பார்க்க வந்த தந்தை - யானை தாக்கி உயிரிழப்பு !!!
10 நாட்களுக்குப் பின் அழுகிய நிலையில் உடல் மீட்பு; சட்டையை வைத்து அடையாளம் காட்டிய மகன் - தடாகம் போலீஸ் விசாரணை !!!
கோவை, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், ஆனைக்கட்டி அருகே கோழிக்கண்டி வனப் பகுதிக்குள் யானை தாக்கியதில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மயிலன் (56) என்பவர் உயிரிழந்தார். காணாமல் போன 10 நாட்களுக்குப் பிறகு அவரது உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்த மயிலன், ஆனைக்கட்டியில் தங்கிப் படித்து வரும் தனது மகன் மணிகண்டனை (25) காண்பதற்காக கடந்த மார்ச் 15-ம் தேதி கோவை வந்து உள்ளார். அதன் பிறகு அவர் திடீரென மாயமானார். மயிலனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அவர் வழக்கம் போல எங்காவது சென்று இருப்பார் என்று கருதிய குடும்பத்தினர், அவர் நீண்ட நாட்களாகத் திரும்பாததால் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், கடந்த 23-ம் தேதி ஆனைக்கட்டி வடக்கு சுற்றுக்கு உட்பட்ட கோழிக்கண்டி வனப்பகுதியில் வனக்காப்பாளர் மணிவண்ணன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் சந்திரன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து தடாகம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணிகண்டன், சடலத்தின் மீது இருந்த சட்டையை வைத்து அது தனது தந்தை மயிலன் தான் என்பதை உறுதிப்படுத்தினார். மயிலன் காட்டுப் பாதை வழியாகச் சென்ற போது எதிர்பாராதவிதமாக ஒற்றை யானையிடம் சிக்கி, அது தாக்கியதில் உயிரிழந்து இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இது குறித்துத் தடாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். மயிலின் உடல் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
யானைகள் நடமாட்டம் உள்ள ஆனைக்கட்டி மற்றும் தடாகம் வனப் பகுதிகளில் பொதுமக்கள் தனியாகவோ அல்லது இரவு நேரங்களிலோ காட்டுப் பாதைகளைப் பயன்படுத்த வேண்டாம் என வனத்துறையினர் மீண்டும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

0 கருத்துகள்: