தேக்கம்பட்டியில் சுற்றிய கொடிய விஷப்பாம்பு: காரமடை அருகே பரபரப்பு!
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள காரமடை தேக்கம்பட்டி பகுதியில் விவசாய நிலத்தில் பதுங்கி இருந்த சுமார் 12 அடி நீளமுள்ள கொடிய விஷமுடைய ராஜநாகம் உயிருடன் மீட்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விடுவிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பகுதி பவானி ஆற்றின் கரையோரத்திலும் வனப்பகுதியை ஒட்டியும் அமைந்து உள்ளதால், காட்டு யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இங்கு அதிகமாகக் காணப்படும். தென்னை, வாழை, பாக்கு மற்றும் காய்கறி விவசாயம் இங்குப் பிரதானமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தேக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் (55) என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று வழக்கம் போல் தொழிலாளர்கள் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு இருந்த புதர் பகுதிக்குள் பிரம்மாண்டமான நாகப்பாம்பு ஒன்று சீறிக்கொண்டு இருப்பதைக் கண்ட பணியாளர்கள், அதிர்ச்சியிலும், அச்சத்திலும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர்.
உடனடியாக இது குறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்தவுடன் மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிகுமார் தலைமையிலான வனப்பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
புதருக்குள் பதுங்கி இருந்த அந்தப் பாம்பைப் பரிசோதித்த போது, அது மிகவும் கொடிய விஷத்தன்மை கொண்ட சுமார் 12 அடி நீளமுள்ள ராஜநாகம் என்பது தெரியவந்தது.
வனத்துறையினர் சாதுரியமாகச் செயல்பட்டு, நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் அந்த ராஜநாகத்தைப் பாதுகாப்பான முறையில் உயிருடன் பிடித்தனர்.
பிடிபட்ட 12 அடி ராஜநாகத்தைப் பிளாஸ்டிக் பேரலில் பாதுகாப்பாக அடைத்த வனத்துறையினர், அதைத் தேக்கம்பட்டி வனப்பகுதியை ஒட்டியுள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று பத்திரமாக விடுவித்தனர்.
விவசாய நிலத்திற்குள் கொடிய விஷமுடைய 12 அடி ராஜநாகம் புகுந்து பிடிபட்ட சம்பவம், அப்பகுதி விவசாயிகளிடையேயும் பொதுமக்களிடையேயும் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.