வனவிலங்குகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வனவிலங்குகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 செப்டம்பர், 2026

 "விவசாய நிலத்தில் 12 அடி நீள ராஜநாகம்" ;  அலறி ஓடிய தொழிலாளர்கள் - அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்த மேட்டுப்பாளையம் வனத்துறை!

"விவசாய நிலத்தில் 12 அடி நீள ராஜநாகம்" ; அலறி ஓடிய தொழிலாளர்கள் - அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்த மேட்டுப்பாளையம் வனத்துறை!

தேக்கம்பட்டியில் சுற்றிய கொடிய விஷப்பாம்பு: காரமடை அருகே பரபரப்பு!


கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள காரமடை தேக்கம்பட்டி பகுதியில் விவசாய நிலத்தில் பதுங்கி இருந்த சுமார் 12 அடி நீளமுள்ள கொடிய விஷமுடைய ராஜநாகம்  உயிருடன் மீட்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விடுவிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பகுதி பவானி ஆற்றின் கரையோரத்திலும் வனப்பகுதியை ஒட்டியும் அமைந்து உள்ளதால், காட்டு யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இங்கு அதிகமாகக் காணப்படும். தென்னை, வாழை, பாக்கு மற்றும் காய்கறி விவசாயம் இங்குப் பிரதானமாக நடைபெற்று வருகிறது.

​இந்நிலையில், தேக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் (55) என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று வழக்கம் போல் தொழிலாளர்கள் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு இருந்த புதர் பகுதிக்குள் பிரம்மாண்டமான நாகப்பாம்பு ஒன்று சீறிக்கொண்டு இருப்பதைக் கண்ட பணியாளர்கள், அதிர்ச்சியிலும், அச்சத்திலும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

உடனடியாக இது குறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்தவுடன் மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிகுமார் தலைமையிலான வனப்பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

​புதருக்குள் பதுங்கி இருந்த அந்தப் பாம்பைப் பரிசோதித்த போது, அது மிகவும் கொடிய விஷத்தன்மை கொண்ட சுமார் 12 அடி நீளமுள்ள ராஜநாகம் என்பது தெரியவந்தது.

 வனத்துறையினர் சாதுரியமாகச் செயல்பட்டு, நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் அந்த ராஜநாகத்தைப் பாதுகாப்பான முறையில் உயிருடன் பிடித்தனர்.

பிடிபட்ட 12 அடி ராஜநாகத்தைப் பிளாஸ்டிக் பேரலில் பாதுகாப்பாக அடைத்த வனத்துறையினர், அதைத் தேக்கம்பட்டி வனப்பகுதியை ஒட்டியுள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று பத்திரமாக விடுவித்தனர்.

​விவசாய நிலத்திற்குள் கொடிய விஷமுடைய 12 அடி ராஜநாகம் புகுந்து பிடிபட்ட சம்பவம், அப்பகுதி விவசாயிகளிடையேயும் பொதுமக்களிடையேயும் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


புதன், 9 செப்டம்பர், 2026

"நள்ளிரவில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கிய தகரக் கொட்டகையை நொறுக்கிய ஒற்றை யானை" ; அலறி அடித்து ஓடி உயிர் தப்பிய தொழிலாளர்கள் - கோவையில் பரபரப்பு!

"நள்ளிரவில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கிய தகரக் கொட்டகையை நொறுக்கிய ஒற்றை யானை" ; அலறி அடித்து ஓடி உயிர் தப்பிய தொழிலாளர்கள் - கோவையில் பரபரப்பு!

2 மணி நேரம் போராடி வனத்துறையினர் விரட்டினர்: தொடரும் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அச்சம்!

 கோவை, துடியலூர் அருகே நள்ளிரவில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகையை உடைத்துச் சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை, வனக்கோட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று உணவு தேடி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது.

​கதிர் நாயக்கன்பாளையம் மற்றும் லட்சுமி நகர் (பேஸ் 3) ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்த அந்த யானை, அங்கு இருந்த ஒரு விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு மாடுகளுக்காகச் சேமித்து வைக்கப்பட்டு இருந்த பசுந்தீவனங்களைச் சாப்பிட்டதுடன், அங்கே குரைத்த நாய்களையும் ஆக்ரோஷமாகத் துரத்தியது.

இதனைத் தொடர்ந்து, நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் அருகில் உள்ள கட்டிடக் கட்டுமானப் பணிக்காக வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகையை நோக்கி அந்த ஒற்றை யானை நகர்ந்தது. கொட்டகையின் தகரங்களை உடைத்து நொறுக்கிய யானை, உள்ளே வைக்கப்பட்டு இருந்த அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுச் சேதப்படுத்தியது.

​யானை கொட்டகையைத் தாக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த வடமாநிலத் தொழிலாளர்கள், உயிருக்குப் பயந்து அலறி அடித்தபடி ஓடிச் சென்று அருகில் இருந்த மற்றொரு கட்டிடத்திற்குள் தஞ்சம் புகுந்து உயிர் தப்பினர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாகப் பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள், குடியிருப்புப் பகுதியில் நின்று இருந்த ஒற்றை யானையைக் பட்டாசுகள் வெடித்தும் மேளங்கள் அடித்தும் காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அதிகாலை வேளையில் யானை மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது.

கதிர் நாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளான மணி நகர், கணபதி நகர், கணபதி கார்டன், போஸ்டல் காலனி, ஆர்.வி.நகர், பூச்சியூர், வெற்றிவேலவா நகர், ரேணுகாபுரம் மற்றும் லட்சுமி நகர் ஆகிய இடங்களில் இந்த ஒற்றை யானையின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவில் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

​அதேவேளையில், இரவில் இப்பகுதிகளில் அடிக்கடி அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டு ஏற்படுவதால், இருளில் யானை வருகையைக் கண்காணிக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த பீதியில் உறைந்து உள்ளனர். எனவே, மின்வாரியமும் வனத்துறையும் இணைந்து தகுந்த நடவடிக்கை எடுத்து, அப்பகுதியில் தெருவிளக்குகள் தடையில்லாமல் எரிய வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

செவ்வாய், 8 செப்டம்பர், 2026

 "பாரதியார் பல்கலைக் கழகத்தில் சர்வ சாதாரணமாக உலா வரும் காட்டுப் பன்றிகள்" ; பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் அதிர்ச்சி வீடியோ!

"பாரதியார் பல்கலைக் கழகத்தில் சர்வ சாதாரணமாக உலா வரும் காட்டுப் பன்றிகள்" ; பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் அதிர்ச்சி வீடியோ!

தண்ணீர், உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறும் வனவிலங்குகள்: மாணவர்களுக்கு வனத்துறை தீவிர எச்சரிக்கை!

​ கோவை, பாரதியார் பல்கலைக் கழக வளாகத்திற்குள் காட்டுப் பன்றி ஒன்று சர்வ சாதாரணமாக உலா வந்து, பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பழங்களை உண்ணும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, மருதமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள அமைதியான சூழலில் பாரதியார் பல்கலைக் கழகம் அமைந்து உள்ளது. அடர்ந்த மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருப்பதால், பல்கலைக் கழக வளாகத்திற்குள் சர்வ சாதாரணமாக மான், முயல், காட்டுப்பன்றி, யானைகள் மற்றும் சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது நுழைவது வழக்கமாகும்.

​தற்போது கோடை மழை போதிய அளவு பெய்யாததால், அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால், உணவையும் தண்ணீரையும் தேடி வனவிலங்குகள் இரவு நேரங்களிலும், ஆள் நடமாட்டம் குறைந்த நேரங்களிலும் வன எல்லையை விட்டு வெளியேறி பல்கலைக் கழக வளாகத்திற்குள் படையெடுத்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று மாலை சுமார் 7 மணி அளவில் பாரதியார் பல்கலைக் கழக வளாகத்திற்குள் நுழைந்த காட்டுப்பன்றி ஒன்று, அங்கு கொட்டப்பட்டு இருந்த பிளாஸ்டிக் கழிவுகளையும், அழுகிய பழங்களையும் சர்வ சாதாரணமாகத் தேடி உண்ணும் காட்சிகள் பதிவாகி உள்ளன. வனவிலங்குகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பது அவற்றின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால், இது இயற்கை ஆர்வலர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வளாகத்திற்குள் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதைக் கருத்தில் கொண்டு, வனத்துறையினர் மற்றும் பல்கலைக் கழக நிர்வாகம் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

​பல்கலைக் கழக விடுதிகளில் தங்கி உள்ள மாணவ, மாணவிகள் இரவு நேரங்களில் தேவையற்ற முறையில் வெளியே சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.

​இரவு நேரக் காவல் பணியில் ஈடுபடும் பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

​வளாகத்திற்குள் வனவிலங்குகளைக் கண்டால் அருகில் செல்லவோ, அவற்றுக்கு உணவு வழங்கவோ கூடாது.

​மேலும், பல்கலைக் கழக வளாகத்தில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்படுவதைத் தடுத்து, வனவிலங்குகள் உள்ளே நுழைவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பேராசிரியர்களும் மாணவர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திங்கள், 7 செப்டம்பர், 2026

 "காலில் இரும்புக் கம்பியுடன் தவித்த பெண் யானை" - ட்ரோன் மூலம் கண்காணித்து வனத்துறை அதிரடி சிகிச்சை!

"காலில் இரும்புக் கம்பியுடன் தவித்த பெண் யானை" - ட்ரோன் மூலம் கண்காணித்து வனத்துறை அதிரடி சிகிச்சை!

சிறுமுகை காப்பக்காடு பகுதியில் கும்கிகள், 5 மருத்துவர்கள் உதவியுடன் மீட்பு : மயக்க ஊசி செலுத்திப் புதுவாழ்வு!

கோவை மாவட்டம், சிறுமுகை வனப்பகுதியில் காலில் ஆழமாக இரும்புக் கம்பி சிக்கி வலியால் தவித்துக் கொண்டு இருந்த பெண் யானையை, வனத்துறையினர் மற்றும் சிறப்பு மருத்துவக் குழுவினர் ட்ரோன் மூலம் கண்காணித்து வெற்றிகரமாக மயக்க ஊசி செலுத்திச் சிகிச்சை அளித்துக் காப்பாற்றி உள்ளனர். 

கோவை, வனக்கோட்டத்திற்கு உட்பட்ட சிறுமுகை வனச்சரகத்தைச் சேர்ந்த பெத்திக்குட்டை, உளியூர் காப்பக்காடு பகுதியில் கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி வனப் பணியாளர்கள் வழக்கம் போல் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அங்கு சுற்றித் திரிந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்கப் பெண் யானை ஒன்று நடப்பதற்குச் சிரமப்பட்டு மெதுவாக நடந்து செல்வதைக் கவனித்தனர். உன்னிப்பாகப் பார்த்த போது, அந்த யானையின் இடது முன்னங்காலில் தடிமனான இரும்புக் கம்பி ஒன்று ஆழமாகச் சிக்கி, அது காயத்தை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்தது. இது குறித்து வனப்பணியாளர்கள் உடனடியாகக் கோவை மாவட்ட வன அலுவலருக்கு (DFO) விரிவான தகவல் அளித்தனர்.

காயம் அடைந்த யானைக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க வனத்துறை உயர் அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெறப்பட்டது. கோவை மாவட்ட வன அலுவலர் தலைமையில், சிறுமுகை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர்கள், 60-க்கும் மேற்பட்ட வனப் பணியாளர்கள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் கொண்ட சிறப்பு மீட்புக் குழு அமைக்கப்பட்டது.

யானைக்குப் பாதுகாப்பாகச் சிகிச்சை அளிப்பதற்காக ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்களைச் சேர்ந்த 5 கால்நடை மருத்துவக் குழுவினரும், யானைப் பாகன்களும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

அடர்ந்த வனப்பகுதிக்குள் காயம் அடைந்த யானை எங்குச் செல்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய நவீன ட்ரோன் (Drone) கேமராக்கள் வான்வழியாகப் பயன்படுத்தப்பட்டன. யானையின் நடமாட்டத்தைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்த குழுவினர், அதற்குச் சிகிச்சை அளிக்கச் சரியான வாய்ப்புக்காகக் காத்து இருந்தனர்.

சரியான சூழல் அமைந்ததும், நேற்று அடர்ந்த வனப்பகுதிக்கு உள்ளேயே வைத்து அனுபவம் வாய்ந்த கால்நடை மருத்துவர்கள் லாவகமாக யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.

மயக்க ஊசி செலுத்தப்பட்டு யானை நிலைகுலைந்து சாய்ந்ததும், சுற்றிலும் பாதுகாப்பை ஏற்படுத்திய மருத்துவக் குழுவினர், யானையின் இடது முன்னங்காலில் ஆழமாகப் பதிந்து இருந்த இரும்புக் கம்பியைச் கவனமாக வெளியே எடுத்தனர். பின்னர் காயம் அடைந்த பகுதிக்குக் கிருமிநாசினி மற்றும் தீவிர நிவாரண மருந்துகளை அளித்துச் சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சை முழுமையாக முடிந்த பிறகு, யானைக்கு மயக்கம் தெளிவிப்பதற்கான மாற்று மருந்து செலுத்தப்பட்டது. சில நிமிடங்களிலேயே மயக்கம் தெளிந்து இயல்பு நிலைக்குத் திரும்பிய அந்தப் பெண் யானை, ஆரோக்கியத்துடன் மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் நடந்து சென்றது.

 வனத்துறையினரின் இந்தச் சமயோசிதமான மற்றும் துரிதமான மீட்பு நடவடிக்கை வன உயிரின ஆர்வலர்கள் இடையே பெரும் பாராட்டைப் பெற்று உள்ளது.

சனி, 5 செப்டம்பர், 2026

 "கோவையில் இருந்து கூடலூர் சென்ற சுற்றுலா பயணிகள் திக் திக்" ; ஜீப்பை ஆக்ரோஷமாகத் துரத்திய ஒற்றைக் காட்டு யானை - பரபரப்பு வீடியோ!

"கோவையில் இருந்து கூடலூர் சென்ற சுற்றுலா பயணிகள் திக் திக்" ; ஜீப்பை ஆக்ரோஷமாகத் துரத்திய ஒற்றைக் காட்டு யானை - பரபரப்பு வீடியோ!

கூடலூர் வனப்பகுதியில் அரங்கேறிய அதிர்ச்சி: சாதுரியமாகச் செயல்பட்டுத் தப்பிய ஓட்டுநர்!

 கோவையில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிக்குச் சுற்றுலா சென்ற பயணிகளின் ஜீப் வாகனத்தை ஒற்றைக் காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாகத் துரத்திய அதிர்ச்சி வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வார விடுமுறையை முன்னிட்டு, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சுற்றிப் பார்ப்பதற்காக இன்று காலை திறந்தவெளி ஜீப் வாகனத்தில் சென்று உள்ளனர்.

​கூடலூரை அடுத்த அடர்ந்த வனப்பகுதிச் சாலையில் வாகனம் சென்று கொண்டு இருந்த போது, வனப்பகுதியில் இருந்து திடீரென வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று, சுற்றுலா பயணிகள் பயணித்த ஜீப் வாகனத்தைக் கண்டு கடும் ஆத்திரம் அடைந்தது. பிளிறியபடி அந்த வாகனத்தை நோக்கி ஆக்ரோஷமாகப் பாய்ந்து துரத்தத் தொடங்கியது.

யானை மிக அருகில் ஆக்ரோஷமாகத் துரத்தி வந்ததைக் கண்டு ஜீப்பில் இருந்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்துக் கூச்சலிட்டனர். இருப்பினும், ஜீப்பை இயக்கிய ஓட்டுநர் பதற்றம் அடையாமல் சாதுரியமாக வாகனத்தை வேகப் படுத்திப் முன்னோக்கியும் நகர்த்தி யானையிடம் இருந்து பாதுகாப்பாகத் தப்ப வைத்தார்.

​யானை ஜீப்பை நீண்ட தூரம் ஆக்ரோஷமாகத் துரத்தி வரும் இந்தக் காட்சியை வாகனத்தில் இருந்த சுற்றுலா பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவிட்டு இணையத்தில் பகிர்ந்து உள்ளார். 

இந்தத் திக் திக் நிமிடங்கள் அடங்கிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.