லெபனானின் குடியிருப்புப் பகுதியில் இஸ்ரேல் திடீர் தாக்குதல் : 12 பேர் பலி - 41 பேர் படுகாயம் !!!
லெபனானின் குடியிருப்புப் பகுதியின் மீது இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள குடியிருப்புப் பகுதியின் மீது இஸ்ரேல் ராணுவம் அதிகாலை வான்வழித் தாக்குதல்களை நடத்தி உள்ளது.
மக்கள் குடியிருப்புகள் நிரம்பிய சுகாக் அல்-பலாட் பகுதியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 41 பேர் படுகாயம் அடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், அங்கு கைப்பற்றப்பட்ட உடல் பாகங்களின் மூலம் டிஎன்ஏ பரிசோதனைகள் செய்யப்பட்ட பிறகே கொல்லப்பட்டவர்களின் அடையாளங்கள் கண்டறியப்படும் என லெபனானின் சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்து உள்ளது.
ஏற்கெனவே, தெற்கு லெபனானில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் அறிவித்து இருந்தது. ஆனால், பெய்ரூட்டின் மத்திய பகுதியில் இன்று நடைபெற்ற தாக்குதல் முன் அறிவிப்பின்றி நடத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டார். இதை அடுத்து, ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: