வியாழன், 26 மார்ச், 2026

ஆந்திரா - தமிழக மீனவர் மோதல்: போலீஸ் காவலில் இருந்த 4 படகுகள் ஒரே இரவில் மாயம் !!!

SHARE

 ஆந்திரா - தமிழக மீனவர் மோதல்: போலீஸ் காவலில் இருந்த 4 படகுகள் ஒரே இரவில் மாயம் !!!

கடந்த வாரம் நெல்லூர் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழகப் படகுகளை ஆந்திர மீனவர்கள் சுற்றி வளைத்தனர். அந்தப் படகுகளும், அதில் இருந்த ஊழியர்களும் ஜூவ்வாலதின்னே மீன் பிடித் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஆந்திரா மற்றும் தமிழக மீனவர்களுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் கடல் எல்லைப் பிரச்சினை, இப்போது ஒரு பெரும் அரசியல் புயலாக மாறி உள்ளது. நெல்லூர் அருகே சிறைபிடிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த நான்கு மீன் பிடிப் படகுகள், நள்ளிரவில் மர்மமான முறையில் மாயமானதைத் தொடர்ந்து, ஆளும் தெலுங்கு தேசம் கட்சி (TDP) மற்றும் எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் (YSRCP) இடையே கடும் வார்த்தை போர் மூண்டு உள்ளது.

கடந்த வாரம், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த நான்கு விசைப்படகுகள் ஆந்திரப் பிரதேச கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நெல்லூர் மாவட்ட மீனவர்கள், அந்தப் படகுகளையும் அதில் இருந்த தொழிலாளர்களையும் சிறைபிடித்தனர். பின்னர் அவை ஜூவ்வாலதின்னே (Juvvaladinne) மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டன. இது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை நள்ளிரவு அந்த நான்கு படகுகளும் துறைமுகத்தில் இருந்து திடீரென காணாமல் போயின.

இந்தச் சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்து உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நெல்லூர் மாவட்டத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான காக்காணி கோவர்தன் ரெட்டி, இது ஆளும் அரசின் திட்டமிட்ட நாடகம் என்று குற்றம் சாட்டி உள்ளார்.

அவர் கூறுகையில், "தமிழக மீனவர்களுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்திய ஆளும் டி.டி.பி தலைவர்கள், மாநிலங்களுக்கு இடையேயான சிக்கலைத் தவிர்க்கவே இந்தப் படகுகளைத் தப்பிக்க விட்டு உள்ளனர். நெல்லூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தே இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, அமைச்சர் கொல்லு ரவீந்திரா மற்றும் எம்.பி பீடா மஸ்தான் ராவ் ஆகியோருக்கு இதில் நேரடித் தொடர்பு உள்ளது. உள்ளூர் மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் துறையினர், இப்போது அவர்களை மிரட்டி வருவது வேதனை அளிக்கிறது," என்று சாடினார்.

தன் மீதான புகார்களை முற்றிலுமாக மறுத்து உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பீடா மஸ்தான் ராவ், "இந்த விவகாரத்தில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. எல்லை தாண்டி மீன்பிடிக்கும் விவகாரத்தைத் தீர்க்க ஆந்திர அரசு ஏற்கனவே தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் படகுகள் காணாமல் போனது குறித்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்," என்று வீடியோ மூலம் விளக்கம் அளித்து உள்ளார்.

அமைச்சர் ஆனம் ராமனாராயண ரெட்டியும் இது குறித்துப் பேசுகையில், "படகுகள் காவல் துறையின் கண்காணிப்பில் இருந்த போதிலும், சில நபர்களின் உடந்தையால் அவை தப்பிச் சென்று உள்ளன. கடல் எல்லை தொடர்பான சட்டங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், மாநில அரசுகள் சில நேரங்களில் நடவடிக்கை எடுக்க முடியாமல் போகிறது. எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும்," என்று கோரிக்கை விடுத்தார்.

காரைக்கால் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வரும் நவீன விசைப் படகுகள், ஆந்திர மீனவர்களின் வலைகளைச் சேதப்படுத்துவதாகவும், கடல் வளங்களைச் சூறையாடுவதாகவும் சுமார் 160-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் கவலை தெரிவித்து உள்ளனர். பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் தான், மீனவர்களே நேரடியாகக் களம் இறங்கிப் படகுகளைப் பிடித்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது இந்தப் பதற்றத்தைத் தணிக்க, நெல்லூர் கடற்கரையில் ஆந்திர மீன்வளத் துறை அதிவேக ரோந்துப் படகுகளை நிறுத்தி உள்ளது. இருப்பினும், மாயமான படகுகள் எங்கே சென்றன? என்பது குறித்த மர்மம் இன்னும் நீடிக்கிறது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: