புதன், 25 மார்ச், 2026

வியட்நாமில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் : வடமாநில இளைஞர் கைது !!!

SHARE

 வியட்நாமில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் : வடமாநில இளைஞர் கைது !!!

வியட்நாமில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சாவை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, தமிழ்நாட்டில் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. சென்னை விமான நிலையத்திலும் சுங்கத் துறையினருக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறது. அதன் பேரில், கூடுதலாக சுங்கத்துறை அதிகாரிகளை நியமித்து சென்னைக்கு வரும் அனைத்து விமான பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், புரூனே நாட்டில் இருந்து ராயல் புரூனே ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த விமானத்தில் வந்த பயணி ஒருவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். இதில், அந்த பயணி முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்து உள்ளார்.

இதனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுக்கவே, அந்த பயணியை தனியாக அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தியதில், அவர் வடமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் என்பதும், அவர் டெல்லியில் இருந்து வியட்நாம் நாட்டிற்கு சுற்றுலா சென்று விட்டு, அங்கிருந்து புரூனே நாடு வழியாக சென்னைக்கு வந்ததும் தெரியவந்தது. அவருடைய உடைமைகளை அதிகாரிகள் சோதித்த போது, சூட்கேஸில் 10 பார்சல்கள் இருந்தன.

அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பிரித்துப் பார்த்து சோதித்தனர். அதனுள் மிகவும் விலை உயர்ந்த பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். 10 பார்சல்களிலும் மொத்தம் 4.938 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததை அடுத்து, அதன் சர்வதேச மதிப்பு ரூ. 5 கோடி என்று கணக்கிடப்பட்டு உள்ளது. இதை அடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் வட மாநில பயணியை கைது செய்து, ரூ. 5 கோடி மதிப்புடைய ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அந்த நபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர் கடத்தல் குருவியாக செயல்பட்டது தெரியவந்தது. இதை அடுத்து, அவர் போதைப் பொருளை யாருக்காக சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்தார் என்று அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ரூ. 5 கோடி மதிப்பிலான சுமார் 5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை கடத்தி வந்த வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்ட தகவலை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: