சனி, 21 மார்ச், 2026

ஈரான் போர் எதிரொலி : 9 நாடுகளின் வான்வழியை தவிர்க்க இந்திய விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் !!!

SHARE

 ஈரான் போர் எதிரொலி : 9 நாடுகளின் வான்வழியை தவிர்க்க இந்திய விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் !!!

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட 9 நாடுகளின் வான்வெளியில் செல்வதை தவிர்க்குமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில், மத்திய கிழக்கு மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது. இதன் காரணமாகவே ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜோர்டான், குவைத், லெபனான், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பெஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளின் வான்வெளியில் பறப்பதை இந்திய விமான நிறுவனங்கள் தவிர்க்குமாறு இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

டி.ஜி.சி.ஏ-வின் அறிவிப்பில், ஓமன் மற்றும் சவுதி அரேபியா வான்வெளிகளில் விமானங்கள் பறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எனினும், குறிப்பிட்ட வான்வெளிகளில் விமானங்கள் செல்லும் போது, அவை 32,000 அடிக்கு கீழே பறக்கக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவுறுத்தல் உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் டி.ஜி.சி.ஏ தெரிவித்து உள்ளது. மார்ச் 28-ஆம் தேதி வரை அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை இது நடைமுறையில் இருக்கும் எனவும் காலக்கெடு வழங்கப்பட்டு உள்ளது.

ஒருவேளை பிரச்சினைக்குரிய விமான நிலையங்களுக்குச் செல்ல வேண்டி இருந்தால், முறையான பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் அவசர காலத் திட்டங்களை விமான நிறுவனங்கள் வைத்து இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. விமானிகள் மற்றும் ஊழியர்களுக்கு அவ்வப் போது வழங்கப்படும் நோட்டீஸ் டூ ஏர்மென் தகவல்களையும் தொடர்ந்து கண்காணிக்குமாறு விமான நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேற்கூறிய 9 நாடுகளின் வான்பரப்பைத் தவிர்த்து விட்டு, மாற்றுப் பாதையில் செல்ல வேண்டி இருப்பதால், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா செல்லும் விமானங்களின் பயண நேரம் 1 முதல் 2 மணி நேரம் வரை அதிகரிக்கக் கூடும். இதனால் எரிபொருள் செலவு கூடி, விமானக் கட்டணங்கள் உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது.

ஏர் இந்தியா போன்ற நிறுவனங்கள் அதிகளவில் இந்த வான்பரப்பைப் பயன்படுத்துகின்றன. குறிப்பாக டெல் அவிவ் போன்ற நகரங்களுக்கான விமானச் சேவைகள் ஏற்கனவே தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளன. தற்போது இந்திய விமானங்கள் பெரும்பாலும் சவுதி அரேபியா மற்றும் ஓமன் வான்பரப்பைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

ஆனால், அங்கேயும் 32,000 அடிக்குக் கீழே பறக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளதால், பாதுகாப்பு கருதி மிக உயரமான பாதைகளையே விமானங்கள் தேர்ந்தெடுக்கும் நிலை உள்ளது. பயணிகள் விமானங்கள் மட்டுமல்லாது, இந்த வழியாகச் செல்லும் சரக்கு விமானங்களும் ஈரான் போரால் பாதிக்கப்பட்டு உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: