குற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 செப்டம்பர், 2026

அரசு அலுவலகங்களுக்குத் தொடர் வெடிகுண்டு மிரட்டல் ; அமெரிக்காவில் பணியாற்றிய நெல்லை என்ஜினீயர் கைது!

அரசு அலுவலகங்களுக்குத் தொடர் வெடிகுண்டு மிரட்டல் ; அமெரிக்காவில் பணியாற்றிய நெல்லை என்ஜினீயர் கைது!

விசாரணை முடிந்த பின் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைப்பு!

 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்குத் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த அமெரிக்காவில் பணியாற்றிய என்ஜினீயரைக் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை முடிந்த பின்பு சிறையில் அடைப்பு

கோவை மாநகரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம், முதன்மைத் தபால் நிலையம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்குக் கடந்த சில நாட்களாக மின்னஞ்சல் மூலமாகத் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன.

ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு மற்றும் மோப்ப நாய் படை போலீசார் அங்குச் சென்று தீவிர சோதனை மேற் கொண்ட போது, அது வெறும் போலி மிரட்டல் (Hoax Threat) என்பது தெரியவந்தது. இது குறித்துக் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மிரட்டல் விடுத்த மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இதே பாணியில் தமிழகம் முழுவதும் உள்ள பல முக்கிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இது தொடர்பாகச் சென்னை பெருநகர சைபர் கிரைம் போலீசார் தீவிர தொழில்நுட்ப விசாரணை மேற்கொண்டனர்.

அதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சரத் சுப்பிரமணியம் சங்கர் என்பதும், இவர் அமெரிக்காவில் மென்பொருள் என்ஜினீயராக (Software Engineer) பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

 இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து அண்மையில் சென்னை திரும்பிய சரத் சுப்பிரமணியம் சங்கரைச் சென்னை போலீசார் கையும், களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

கோவை மாநகரில் மட்டும் இவருக்கு எதிராகத் தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக 3 சைபர் கிரைம் வழக்குகள் நிலுவையில் இருந்தன.

இதனைத் தொடர்ந்து, சென்னைக்குச் சென்ற கோவை மாநகர சைபர் கிரைம் தனிப்படை போலீசார், சரத் சுப்பிரமணியம் சங்கரை முறைப்படி கைது செய்தனர். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, நீதிபதியின் உத்தரவின் பேரில் சென்னை மத்திய சிறையில் அடைத்தனர்.

 இச்சம்பவம் அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதன், 9 செப்டம்பர், 2026

"விமான நிலையப் பின்பகுதியில் கெமிக்கல் கழிவுகள் வீச்சு" ; வழுக்கி விழுந்து படுகாயமடையும் வாகன ஓட்டிகள் -கோவையில் பரபரப்பு!

"விமான நிலையப் பின்பகுதியில் கெமிக்கல் கழிவுகள் வீச்சு" ; வழுக்கி விழுந்து படுகாயமடையும் வாகன ஓட்டிகள் -கோவையில் பரபரப்பு!

இரசாயனத்தை அப்புறப்படுத்தவும், வீசிச் சென்ற மர்ம நபர்களைக் கைது செய்யவும் பொதுமக்கள் கொந்தளிப்பு!

​கோவை சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் உள்ள மண் சாலையில் மர்ம நபர்கள் கழிவு கெமிக்கல் பாக்கெட்டுகளை வீசிச் சென்றதால், அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வழுக்கி விழுந்து படுகாயம் அடைந்து வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தினசரி பயன்படுத்தும் மண் சாலை உள்ளது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், அப்பகுதியில் ஆபத்தான கெமிக்கல் பாக்கெட்டுகளைச் சாலையில் கொட்டி விட்டுத் தப்பிச் சென்று உள்ளனர்.

​அந்தப் பாக்கெட்டுகளில் இருந்து இரசாயனக் திரவம் கசிந்து சாலை முழுவதிலும் பரவியதால், மண் சாலை முற்றிலும் வழவழப்பாக மாறி உள்ளது.

இந்நிலையில் அவ்வழியாகச் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து சென்ற பொதுமக்கள் பலர், சாலையில் கெமிக்கல் கொட்டப்பட்டு இருப்பதை அறியாமல் சென்று திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து வழுக்கி விழுந்தனர். இதில் பலருக்குக் கை, கால்களில் படுகாயங்கள் ஏற்பட்டு உள்ளன.

​தொடர்ந்து அடுத்தடுத்து வாகனங்கள் வழுக்கி விழுவதைக் கண்ட அப்பகுதி வாசிகள் உடனடியாக ஓடிவந்து காயம் அடைந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

 ஆபத்தான முறையில் கெமிக்கலைச் சாலையில் கொட்டிச் சென்ற நபரைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

​மேலும், அந்த மண் சாலையில் பரவி உள்ள இரசாயனக் கழிவுகளைத் மாநகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 நகரின் பாதுகாப்பு மண்டலமான விமான நிலையப் பகுதியிலேயே கெமிக்கல் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 "உருவக்கேலி செய்ததால் ஆத்திரம்" ; கோவையில் நேபாள இளைஞர் செங்கல்லால் அடித்துக் கொலை : ஜார்க்கண்ட் வாலிபர் கைது!

"உருவக்கேலி செய்ததால் ஆத்திரம்" ; கோவையில் நேபாள இளைஞர் செங்கல்லால் அடித்துக் கொலை : ஜார்க்கண்ட் வாலிபர் கைது!

ஈ-காமர்ஸ் நிறுவன ஊழியர்கள் இடையே போதையில் மோதல்: தப்பியோடிய முதன்மை குற்றவாளிக்குச் சூலூர் போலீஸ் வலை!

 கோவை அருகே பாப்பம்பட்டி பகுதியில் நேபாளத்தைச் சேர்ந்த வாலிபர் கொடூரமான முறையில் செங்கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நபரைச் சூலூர் காவல் துறையினர் கைது செய்து உள்ளனர்.

கோவை, பாப்பம்பட்டி நந்தினி நகர் பகுதியில் உள்ள தனியார் நிலத்தின் வெற்றுச் செங்கல் கொட்டகை ஒன்றில், வாலிபர் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாகக் கிடப்பதாகச் சூலூர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 விசாரணையில், இறந்து கிடந்தவர் பாப்பம்பட்டி பகுதியில் உள்ள பிரபல ஈ-காமர்ஸ் (E-Commerce) நிறுவனத்தின் கிடங்கில் (Warehouse) பணியாற்றி வந்த நேபாள நாட்டைச் சேர்ந்த ராஜன் எ (எ) ராமேஸ்வர் சா என்பது தெரியவந்தது.

இக்கொலை சம்பவம் குறித்துச் சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, உடன் பணி புரியும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், ராஜனின் உடல் தோற்றத்தைக் குறித்து அவருடன் பணி புரியும் சக ஊழியரான ஜெகதீஷ் என்பவர் அடிக்கடி கேலி செய்து வந்ததும், இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்து வந்ததும் அம்பலமானது.

கடந்த 5-ஆம் தேதி இரவு, ராஜன் அளவுக்கு அதிகமாக மது அருந்தி உள்ளார். அப்போது, அவரைத் தங்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, ஜெகதீஷ் மற்றும் அவரது நண்பரான ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மத்தயாஸ் மல்டோ ஆகியோர் அழைத்துச் சென்று உள்ளனர்.

செங்கல் கொட்டகை அருகே சென்ற போது, உருவக்கேலி தொடர்பாக ராஜனுக்கும், ஜெகதீஷுக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. ஆத்திரம் அடைந்த ஜெகதீஷ், அங்கு இருந்த செங்கல்லை எடுத்து ராஜனின் தலையில் சரமாரியாகத் தாக்கி உள்ளார். 

இதில் பலத்த காயம் அடைந்த ராஜன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்தத் தாக்குதலுக்கு மத்தயாஸ் மல்டோ முழுமையாக உடந்தையாக இருந்து உள்ளார்.

இதை அடுத்து தலைமறைவாக முயன்ற ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மத்தயாஸ் மல்டோவைச் சூலூர் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கொலையில் தொடர்புடைய முதன்மை குற்றவாளியான ஜெகதீஷைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

கோவையில் போதை மாத்திரைகள் & கஞ்சா பறிமுதல்" ; 2 வாலிபர்களைப் பிடித்துப் கைது செய்த போலீசார்!

கோவையில் போதை மாத்திரைகள் & கஞ்சா பறிமுதல்" ; 2 வாலிபர்களைப் பிடித்துப் கைது செய்த போலீசார்!

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற அம்பலம் : 400 'டைடால்' மாத்திரைகள் மற்றும் மொபைல்கள் பறிமுதல்!

 கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே நரசிம்மநாயக்கன்பாளையத்தில் சட்ட விரோதமாகப் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞர்களைப் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் கையும், களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நமச்சிவாயம் போதைப் பொருட்கள் விற்பனை குறித்து ரகசியத் தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் அடிப்படையில், நரசிம்மநாயக்கன்பாளையம் பகவான் கார்டன் பகுதியில் உள்ள செல்வமாரியம்மன் கோவில் அருகே உள்ள வாட்டர் டேங்க் பகுதியில் போலீசார் தீவிரக் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குச் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று இருந்த இரு வாலிபர்கள், போலீசாரைக் கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். சுதாரித்துக் கொண்ட காவல் துறையினர் அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினர்.

பிடிபட்ட நபர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், நரசிம்மநாயக்கன்பாளையம், குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தஆனந்தகுமார் (23), புதுப்பாளையம் ரோடு, அங்காளம்மன் நகரைச் சேர்ந்த கௌசிகன் (26) எனத் தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களைச் சோதனை செய்த போது, ஆனந்தகுமாரின் பேண்ட் பாக்கெட்டில் ஜிப்லாக் கவரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 400 ஆரஞ்சு நிற 'டைடால்' (Tydol) போதை மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. அதேபோல, கௌசிகனின் பாக்கெட்டில் 120 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவை வாங்கி வந்து, தங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும், அப்பகுதியில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் அதிக விலைக்குச் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது அம்பலமானது.

இதை அடுத்து, 400 டைடால் மாத்திரைகள், 120 கிராம் கஞ்சா மற்றும் அவர்களிடம் இருந்த Vivo Y39, Samsung ஆகிய 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போதைப்பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதாள சாக்கடை குழியில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த இளம் பெண்!" - ஜே.சி.பி இயந்திரம் மூலம் அதிரடி மீட்பு: கோவையில் பரபரப்பு வீடியோ!

பாதாள சாக்கடை குழியில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த இளம் பெண்!" - ஜே.சி.பி இயந்திரம் மூலம் அதிரடி மீட்பு: கோவையில் பரபரப்பு வீடியோ!

வடவள்ளி மருதமலை சாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: உயிர்த்தப்பிய அதிர்ஷ்டசாலி!

 கோவை, வடவள்ளி, மருதமலை சாலையில் பாதாள சாக்கடை பணிக்காகத் தோண்டப்பட்ட பெரிய குழிக்குள் இருசக்கர வாகனத்துடன் இளம் பெண் ஒருவர் தவறி விழுந்த நிலையில், ஜேசிபி (JCB) இயந்திர உதவியுடன் மீட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வடவள்ளி மருதமலை சாலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காகப் பல்வேறு இடங்களில் குழிகள் தோண்டப்பட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.

 இந்நிலையில், அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் இளம் பெண் ஒருவர் சென்று கொண்டு இருந்தார்.

​போதுமான பாதுகாப்பு எச்சரிக்கைக் பலகைகளோ அல்லது தடுப்புகளோ முறையாக அமைக்கப்படாததால், எதிர்பாராத விதமாக அந்த இளம் பெண் தனது இருசக்கர வாகனத்துடன் சாலையில் தோண்டப்பட்டு இருந்த ஆழமான பாதாள சாக்கடை குழிக்குள் தலைகுப்புற விழுந்தார்.

 திடீரென நடந்த இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

குழிக்குள் விழுந்த இளம் பெண் வெளியே வர முடியாமல் தவித்ததைக் கண்ட அப்பகுதி பொதுமக்களும், மீட்புப் பணியாளர்களும் உடனடியாக அங்குத் திரண்டனர்.

​தொடர்ந்து, அருகில் அந்தப் பணிக்காக நின்று இருந்த ஜேசிபி (JCB) இயந்திரத்தின் உதவியுடன் அப்பெண்ணைப் பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். 

 நல்வாய்ப்பாகப் பெரிய காயங்கள் ஏதுமின்றி அப்பெண் உயிர் தப்பினார்.

நகரின் முக்கியப் பகுதியான மருதமலை சாலையில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளோ, ஒளிரும் பட்டைகளோ இன்றி ஆபத்தான முறையில் தோண்டப்பட்டு உள்ள குழிகளால் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.


​இரவு நேரங்களில் இதுபோன்று குழிகள் தெரிவதில்லை எனவும், மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு முக்கியக் காரணம் எனவும் கூறி அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் ஆத்திரம் வெளிப்படுத்தி உள்ளனர். மேலும், இது தொடர்பான செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.