நாடாளுமன்றத்தை விட்டு ஓடி விட்டார் மோடி : மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா ? - ராகுல் காந்தி !!!
மேற்காசியப் போர் விவகாரம் முக்கியமானது இல்லையா ? அதுபற்றி விவாதிக்கத் தேவையில்லையா ? என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் போரால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எரிசக்தி துறையில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ள சூழலில் அதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாடாளுமன்ற அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இதன் பின்னர் வெளியே வந்த ராகுல் காந்தி செய்தியாளர்களுடன் பேசுகையில்,
"இஸ்ரேல் - ஈரான் போரால் ஏற்பட்டு உள்ள மேற்காசிய நெருக்கடி எவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தும் ? ஒரு மாற்றத்தை நோக்கி போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. இது நமது பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். இன்று பங்குச்சந்தை நிலவரத்தை நீங்கள் பார்த்தீர்கள். பிரதமர் மோடி அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளார். இந்தியா பெரும் பாதிப்பைச் சந்திக்கப் போகிறது. அப்படி இருக்க அதைப்பற்றி விவாதிப்பதில் அவர்களுக்கு என்ன பிரச்னை ? அதன் பிறகு மற்ற பிரச்னைகள் குறித்து நாம் விவாதம் செய்யலாம்.
மேற்காசியப் போர் விவகாரம் முக்கியமானது இல்லையா ? எரிபொருள் விலை மற்றும் பொருளாதாரச் சீரழிவு விவாதத்திற்கு முக்கியமான விஷயம் இல்லையா ? இவை எல்லாம் பொதுப் பிரச்னைகள். இவற்றையே நாங்கள் முக்கியமானதாக நினைக்கிறோம். அதைப்பற்றி விவாதிக்க விரும்புகிறோம். ஆனால், மக்களின் பிரச்னைகள் பற்றி அவர்கள் விவாதிக்க விரும்பவில்லை. அப்படி செய்தால் பிரதமர் மோடியின் நிலைப்பாடு வெளியே தெரிந்து விடும். அமெரிக்காவால் பிரதமர் மோடி எப்படி சமரசம் செய்யப்படுகிறார், எப்படி மிரட்டப்படுகிறார் என்பது குறித்து விவாதம் நடைபெறும். அதனால் தான் பா.ஜ.க வினர் இதைப்பற்றி விவாதிக்க மறுக்கிறார்கள்.
பிரதமர் எப்படி ?நாடாளுமன்றத்தை விட்டு ஓடினார் என்பதை நீங்கள் பார்த்தீர்கள். அவரால் திரும்பி வர முடியாது" என்று கூறினார்.

0 கருத்துகள்: