டிரம்ப் சொல்லி விட்டார் ; இனி ஈரான் எரிசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் - இஸ்ரேல் உறுதி !!!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கோரிக்கைக்கு இணங்க ‘இனி ஈரானின் எரிசக்தித் தளங்கள் மீது தாக்குதல் நடத்தபோவதில்லை’ என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்து உள்ளார்.
மேற்காசியாவில் நிலவும் போரால், கத்தார், குவைத், பெஹ்ரைன் போன்ற மத்திய கிழக்கு நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. உலகின் முக்கிய எரிசக்தி விநியோகஸ்தர்களாக இருக்கும் இந்நாடுகளின் எண்ணெய் வயல்கள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகள் முடக்கப்பட்டு உள்ளன.
இதன் காரணமாக, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து, உலக பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இதன் இடையே, கடந்த மார்ச் 18 அன்று, ஈரானின் எரிசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியது. இதற்கு நாங்கள் பொறுப்பில்லை என்று அமெரிக்கா பின்வாங்கிய நிலையில், இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்டது.
இதற்கு பதில் அடியாக உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு (LNG) நிலையங்களில் ஒன்றான கத்தாரின் ராஸ் லஃபானை ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்கியது. பெரும் சேதத்தை ஏற்படுத்திய இந்த தாக்குதலால், உலகளவில் பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை சுமார் 120 டாலர்களை தொட்டு வர்த்தகமானது.
மேலும், இந்த தாக்குதலால், சுமார் 17 விழுக்காடு எரிவாயு உற்பத்தி தடைபட்டு உள்ளதாக கத்தார் தெரிவித்து உள்ளது. சுமார் 90 விழுக்காடு இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அந்த வகையில், உலக நாடுகளின் பொருளாதாரத்தை அச்சுறுத்திய இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, ஈரானின் எண்ணெய் வயல்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று பெஞ்சமின் நெதன்யாகுவிடம், டிரம்ப் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பெஞ்சமின் நெதன்யாகு,
“அதிபர் டொனால்டு டிரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க, கடலோரத்தில் இருக்கும் ஈரானிய எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தி வைக்கிறது” என்று தெரிவித்து உள்ளார்.
மேலும், யுரேனியத்தை செறிவூட்டும் அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தயாரிக்கும் திறன் ஈரானிடம் இனி இல்லை என்றும் நெதன்யாகு தொலைக்காட்சி உரையில் குறிப்பிட்டு உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சற்று குறைந்து 102.35 டாலராக வர்த்தகமாகிறது. இந்திய கமாடிட்டி சந்தையிலும், கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு ரூ.8,792 ஆக சுமார் 200 ரூபாய் சரிந்து வர்த்தகமாகிறது.
எனினும், ஈரான் மீது நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலுக்கும், மத்திய கிழக்கு நாடுகள் கடுமையான சேதத்தை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் ராணுவ தளங்கள் இங்கு இருந்து செயல்படுவது தான், ஈரானின் இந்த தாக்குதலுக்கு முக்கியக் காரணமாக அமைந்து உள்ளது.
எனவே, கச்சா எண்ணெய் விலை சீராக ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் எளிதாக கடக்க வேண்டும். அது, போர் நிறுத்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்தால் மட்டுமே சாத்தியம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

0 கருத்துகள்: