ஞாயிறு, 22 மார்ச், 2026

அரசு சலுகைகள் இல்லை : தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்த மலை கிராம மக்கள் !!!

SHARE

 அரசு சலுகைகள் இல்லை : தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்த மலை கிராம மக்கள் !!!

ஜவ்வாதுமலை அருகே அடிப்படை வசதிகள் இல்லையென கூறி தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் பேனர் வைத்து உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலையில் உள்ள புங்கம்பட்டு நாடு என்ற ஊராட்சியில் உள்ள பெருமாள் கோவிலூர் என்ற கிராமத்தில் 'தேர்தல் புறக்கணிப்பு' என்ற தலைப்பில் 'தயவு செய்து யாரும் எங்கள் ஊருக்குள் ஓட்டுக் கேட்டு வரவேண்டாம். 80 ஆண்டுகளாக கிராமத்திற்கு எவ்வித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றவில்லை" என்பதை மையப்படுத்தியும் அந்த பேனரில் வாசகங்கள் இடம் பெற்று உள்ளன.

அந்த பேனரில் இடம்பெற்று உள்ள வாசகங்கள் வருமாறு, 

1.தலைமுறை தலைமுறையாக வீடுகட்டி வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.

2. வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும்.

3. குடிநீர் வசதி வேண்டும்.

4. நியாய விலைக் கடை வேண்டும்.

5. வீட்டு பட்டா வழங்கவில்லை.

6. வீட்டுக்கு மின்சார இணைப்பு வழங்கவில்லை

7. சாலை வசதி இல்லை.

8. குடிநீர் வசதி இல்லை.

9. பட்டா இல்லாத காரணத்தால் கூட்டுறவு வங்கியில் கடன் வாங்க முடியவில்லை.

10. விவசாய கடன் வாங்க முடியவில்லை.

11. தொழில் தொடங்க வங்கியில் கடன் வாங்க முடியவில்லை.

12. அரசு வீடு கட்ட தரும் எந்த நலத் திட்டங்களை எங்களுக்கு இல்லை.

எங்கள் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இவற்றை நிறைவேற்றித் தர வேண்டும். நிறைவேற்றித் தரும் வரை தேர்தலைப் புறக்கணிப்போம்! புங்கம்பட்டு நாடு, பெருமாள் கோவிலூர், ஊர் பொதுமக்கள் என்று பேனர் வைத்து உள்ளனர். 

இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் வட்டாட்சியர் நவநீதன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், கிராமிய காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று மலை வாழ் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்து, விரைவில் இதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தின் பேரில், தற்காலிகமாக அப்பகுதி மக்கள், சமாதானம் அடைந்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: