மேற்காசிய போர் நிலைமை கவலை அளிக்கிறது - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை !!!
மேற்காசிய போர் நிலவரம் கவலை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற மக்களவையில் தெரிவித்தார்.
இஸ்ரேல், அமெரிக்கா- ஈரான் இடையே 3 வாரங்களுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இதனால் இந்தியாவில் கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு, மத்திய அரசின் துரித நடவடிக்கையால் சரி செய்யப்பட்டது.
இந்நிலையில், மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நேற்று (மார்ச் 22) ஆலோசனை நடத்தினார். அப்போது, பெட்ரோலியம், எரிவாயு, கச்சா எண்ணெய், உரங்கள் ஆகியவற்றின் கையிருப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, இன்று நாடாளுமன்ற மக்களவையில், மேற்காசிய போர் நிலவரம் குறித்து உரையாற்றினார்.
அப்போது, "மேற்காசிய போர் நிலவரம் கவலை அளிக்கிறது. போர் நடைபெறும் பகுதி இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது. அந்த பகுதியில், 1 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கிறார்கள். எனவே, இந்த விவகாரத்தில் இந்திய நாடாளுமன்றம் ஒற்றுமையுடன் குரல் கொடுத்தாக வேண்டும்.
மேற்காசிய போர், இதுவரை இல்லாத அளவில் இந்தியாவுக்கு சவாலாக உருவெடுத்து உள்ளது. இந்தப் போரில் இந்தியர்கள் சிலர் உயிரிழந்து உள்ளனர். சிலர் காயம் அடைந்து உள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்து வருகிறோம். போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவுவதே நம் நோக்கம். அவர்களைத் தொடர்பு கொள்வதற்காக 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டு உள்ளது.
போர் தொடங்கியதில் இருந்து, வளைகுடா நாடுகளில் இருந்து 3.75 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பி உள்ளனர். போர் நடக்கும் ஈரானில் இருந்து 1,000 பேர் இந்தியா திரும்பினர். அவர்களில் 700 பேர் மருத்துவ மாணவர்கள்.
இந்தியா 60 சதவீத எல்ஜிபி எரிவாயுவை இறக்குமதி செய்கிறது. போர்ச்சூழலுக்கு இடையேயும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி எரிவாயுவை இந்தியா இறக்குமதி செய்து உள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் முன்னுரிமை அளித்து சிலிண்டர் விநியோகம் செய்யப்படுகிறது.
விவசாயிகளுக்கு உதவுவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 6 உரத் தயாரிப்பு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. அதேசமயம், இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளையும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. விவசாயிகளின் நலனை காப்பதில் மத்திய பா.ஜ.க அரசு உறுதியாக உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மரபுசாரா எரிசக்தி துறையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் சூரிய மின்உற்பத்தி 3 ஜிகாவாட் அதிகரித்து உள்ளது. பிரதமரின் சூரியமின் சக்தி திட்டத்தின் கீழ் ஏராளமானோர் பயன்பெற்று உள்ளனர்.
மேற்காசிய போர் விவகாரத்தில் இந்தியா ஒற்றுமையுடன் எதிர்வினையாற்ற வேண்டும். நாம் மிகவும் எச்சரிக்கையாவும் கவனமாகவும் இருக்க வேண்டும்.
மேலும், அத்தியாவசிய பொருட்களை கள்ளச் சந்தையில் பதுக்கி வைப்பதாக புகார்கள் வந்தால், மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பிரதமர் மோடி பேசினார்.

0 கருத்துகள்: