திங்கள், 30 மார்ச், 2026

காரைக்குடி தொகுதியில் சீமான் வேட்புமனு தாக்கல் !!!

SHARE

 காரைக்குடி தொகுதியில் சீமான் வேட்புமனு தாக்கல் !!!

காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது சொந்த தொகுதியான காரைக்குடியில் இம்முறை களமிறங்கி உள்ளார்.

இந்த சூழலில், காரைக்குடி தொகுதியில் சீமான் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனுத் தாக்கல் செய்த போது சீமானுடன் அவரின் தாய் மற்றும் மனைவி கயல்விழி ஆகியோர் உடன் இருந்தனர்.

காரைக்குடி தொகுதியில் நா.த.க சார்பில் சீமான், அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்று உள்ள அ.ம.மு.க சார்பில் தேர்போகி பாண்டி, த.வெ.க சார்பில் பிரபு ஆகியோர் போட்டியிடுகின்றனர். தி.மு.க கூட்டணியில் இந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,

 “ஆட்சிக்கு வந்தால் ரூ.2 ஆயிரம், ரூ.2,500, ரூ.3,000 தருவதாக தலைவர்கள் வாக்குறுதி அளிக்கின்றனர். படித்து விட்டு வேலையில்லாதவனுக்கு வேலை கொடுப்பதற்கு பதிலாக, ரூ.4 ஆயிரம் தருவதாக சொல்பவர் எப்படி நல்ல தலைவராக இருக்க முடியும்.

டாஸ்மாக் கடையை மூடுவதாக ஒருவருமே வாக்குறுதி அளிக்கவில்லையே. பத்தரை லட்சம் கோடி ரூபாய் கடன் இப்போதே உள்ளது. இப்போது நீங்கள் அளித்து உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற மேலும் பல லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்குவீர்கள். கடன் வாங்கி நிறைவேற்றிய எந்த திட்டமாவது தரமாக உள்ளதா ?.

ஒரு இனத்தின் மகனாக, இலவசங்கள் கொடுப்பதை தன்மானத்துக்கு எதிரானதாக நினைக்கிறேன். நேர்மையான நல்லாட்சியை கொடுப்பதாக சொல்பவர்கள் ஏன் ? இலவசங்களை கொடுக்க வேண்டும்.

மலை, மணல், இயற்கை வளம் எல்லாவற்றையும் சுரண்டி விட்டார்கள், எதிர்காலம் என்னவாகும். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவனுக்கு ரூ.10 லட்சம் கொடுத்து ஊக்கப்படுத்திய அரசு தானே இது.

இவர்கள் கொடுக்கும் இலவசத்துக்கு ஏன் ? கையேந்த வேண்டும். நம் மானமும், வீரமும் மரத்துப் போய் விட்டதா ?. அவர்கள் கைக்காசில் இருந்தா இலவசம் தருகிறார்கள். அனைத்து வரிகளையும், விலைவாசிகளையும் உயர்த்தி தான் இலவசம் கொடுக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்கும் தற்சார்பு நிலையை கூட மக்களுக்கு ஏற்படுத்த முடியவில்லையா ?” என்றார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: