பணநாயகத்தை வீழ்த்த குதிரையில் வந்த வேட்பாளர் : கோவை தொண்டாமுத்தூரில் வேட்புமனு தாக்கல் !!!
கோவை, தொண்டாமுத்தூரில் குதிரை வேகத்தில் களமிறங்கிய சூர்யா : ஊழல்வாதிகளை விரட்ட 'ஜனநாயகப் போர்' !!!
கோவை, தொண்டாமுத்தூர் தொகுதியின் தேர்தல் களத்தில் இந்து மக்கள் கட்சியின் ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராகக் களம் கண்டு உள்ள சூர்யா, வழக்கமான தேர்தல் வாகனங்களைத் தவிர்த்து, கம்பீரமான குதிரை மீது அமர்ந்து ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் ஆணைக்கிணங்க இந்தத் தேர்தலைச் சந்திப்பதாகக் குறிப்பிட்ட அவர், *"ஊழல்வாதிகளை 'குதிரை வேகத்தில்' துரத்தவே இந்த வித்தியாசமான பாணியைக் கையாண்டதாகத் தெரிவித்தார்.*
அதிகார மையங்களில் நிலவும் பணப் பரிமாற்றங்களையும், அதிகார வர்க்கத்தின் மெத்தனத்தையும் நேரடியாகச் சாடிய அவர், இது வெறும் தேர்தல் மட்டுமல்ல, ஒரு தர்ம யுத்தம் என கூறினார்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் திராவிடக் கட்சிகள் பணத்தை வாரி இறைத்து ஜனநாயகத்தை 'பணநாயகமாக' மாற்றி உள்ளதாகச் சுட்டிக்காட்டிய சூர்யா, வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரம் உச்சத்தை எட்டி உள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
குறிப்பாக, எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சியும் மாறி, மாறி ஊழலில் ஈடுபட்டு வருவதாகவும், வாக்கிற்கு பத்தாயிரம் ரூபாய் வரை பேசப்படுவதாகவும் அவர் பகீர் தகவலை வெளியிட்டார்.
"எங்களிடம் பணம் இல்லை, ஆனால் மக்களின் ஆதரவு இருக்கிறது. மக்கள் பணத்தை வாங்கிக் கொள்ளட்டும், ஆனால் வாக்களிக்கும் போது மாற்றத்திற்காக எங்களுக்கே வாக்களிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
நொய்யல் நதியை இணைப்பது உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவலத்தை மாற்றி, மக்களோடு மக்களாக நின்று பணியாற்றவே தான் போட்டியிடுவதாக அவர் கூறினார்.
சாமானிய மனிதர்கள் அரசியல் களத்தில் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபிப்பதே தனது இலக்கு என்று உறுதியுடன் கூறினார்.

0 கருத்துகள்: