திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த விஜய் !!!
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்தார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று (மே 10) காலை 10.00 மணிக்கு நடந்த பதவியேற்பு விழாவில் தமிழ்நாட்டின் 13-வது முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து, என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன், சி.டி.நிர்மல்குமார் உள்பட 9 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக, வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம், பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கம், போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுக்க, போதைப்பொருட்கள் தடுப்புப்படை அலகுகள் உருவாக்கம் ஆகிய மூன்று கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார்.
அதைத் தொடர்ந்து விழா மேடையில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், "தமிழ்நாட்டின் தற்போதைய நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவேன். உடனே எல்லாம் கிடைக்கும் என்று நினைத்துவிட வேண்டாம்; கொஞ்சம் காலம் அவகாசம் கொடுங்கள். பெண்கள் பாதுகாப்புக்கும், போதைப்பொருள் கலாச்சாரத்திற்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுப்பேன்" என்று உறுதிப்பட தெரிவித்து உள்ளார்.
பின்னர் சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதையை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் அறைக்கு சென்று இருக்கையில் அமர்ந்து முறைப்படி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அரசுத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த நிலையில் ஏதேனும் ஒரு தொகுதியில் மட்டுமே எம்எல்ஏ இருக்க முடியும் என்பதால் விஜய், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.
இதற்கான கடிதத்தை சட்டப்பேரவையின் செயலாளர் சீனிவாசனிடம் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கடரமணன் ஆகியோர் வழங்கினர். இதை அடுத்து, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து ஆறு மாத காலத்திற்குள் அந்த தொகுதியில் இடைத்தேர்தலைத் தேர்தல் ஆணையம் நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் இடையே, முதலமைச்சராகப் பொறுப்பேற்று உள்ள விஜய்க்கு இலங்கை அதிபர் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றன.

0 கருத்துகள்: