செவ்வாய், 12 மே, 2026

திருப்பத்தூர் எம்.எல்.ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை - உயர்நீதிமன்றம் !!!

SHARE

 திருப்பத்தூர் எம்.எல்.ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை - உயர்நீதிமன்றம் !!!

தபால் வாக்குகள் மாறியதாக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் புகார் அளித்து இருப்பதால் த.வெ.க சார்பில் திருப்பத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற சீனிவாச சேதுபதி சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்த கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து இடைக்கால உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17 ஆவது சட்டமன்ற தேர்தலில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் ஒரு வாக்கு வித்தியாசத்தில், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் தோல்வி அடைந்தார். அவர் பெற்ற மொத்த வாக்கு 83,374.

இதை அடுத்து, 'திருப்பத்தூர் தொகுதியில் இருந்த தபால் வாக்கு ஒன்று வேலூர் அருகே உள்ள திருப்பத்தூர் தொகுதி எண் 50-க்கு தவறுதலாக சென்று விட்டது. அந்த வாக்கை சிவகங்கை அருகே உள்ள திருப்பத்தூர் தொகுதி 185 இல் சேர்க்க வேண்டும்' என தி.மு.க வேட்பாளர் பெரியகருப்பன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

வாக்கு மாறி உள்ளதாக புகார் அளித்தும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், தபால் வாக்குகளை மீட்க வேண்டும். வாக்கு எண்ணிக்கைத் தொடர்பான காணொலி காட்சிகளை பாதுகாப்பாக வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும், அதுவரை வெற்றி பெற்றவர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக ஞாயிற்றுக்கிழமை (மே 10) அன்று விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், பெரிய கருப்பனின் புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, பெரியகருப்பன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "தபால் வாக்கு இடம் மாறியது குறித்து தேர்தல் ஆணையம் தெளிவாக பதிலளிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் அலட்சியத்தால் ஒருவரின் வெற்றி பறிக்கப்பட்டு உள்ளது. அதற்கு தேர்தல் ஆணையம் தான் பொறுப்பேற்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "தபால் வாக்கு மாற்றப்பட்டது குறித்து எந்த புகாரும் வரவில்லை. எண்ணிக்கைக்கு முன், தபால் வாக்குகள் கிடைத்தால் மட்டுமே அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய பின் கால தாமதமாக தபால் வாக்கு கிடைத்தால், அது கணக்கில் எடுத்துக் கொள்ள கூடாது என தேர்தல் விதிகளில் கூறப்பட்டு உள்ளது" என அறிக்கை தாக்கல் செய்தார். இதனை அடுத்து விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் எல். விக்டோரியா கெளரி, என். செந்தில் குமார் அமர்வு இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதில், "பெரியகருப்பன் அளித்த புகாருக்கு போதுமான ஆதாரம் உள்ளது. அதனால், நீதிமன்ற மறு உத்தரவு வரும் வரை சட்டமன்றத்தில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு, நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு உள்ளிட்ட எதிலும் திருப்பத்தூர் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி கலந்து கொள்ள தடை விதிக்கப்படுகிறது. சீனிவாச சேதுபதியின் தேர்தல் வெற்றியை நீதிமன்றம் ரத்து செய்யவில்லை. அதே சமயம், அவரது தேர்தல் வெற்றியை ஏற்றுக் கொள்வதாகவும் கருதக் கூடாது.

வாக்கு எண்ணிக்கை சுற்று விவரங்கள் மற்றும் மின்னனு வாக்குகள், தபால் வாக்குகள், நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகள், அதன் கவர்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக தேர்தல் ஆணையம் வைத்து இருக்க வேண்டும்.

திருப்பத்தூர் தொகுதி எண் 185-க்கு அதே பெயரில் உள்ள திருப்பத்தூர் தொகுதி எண் 50 இல் இருந்து தபால் வாக்குகள் வந்து இருந்தால் அதை திறக்காமல் பாதுகாத்து வைக்க வேண்டும்.

ஆவணங்களை பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டும் என்ற இந்த உத்தரவால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இது மறு வாக்கு எண்ணிக்கைக்கானது எனவும் கருத கூடாது" என கூறப்பட்டு உள்ளது.

மேலும், "திருப்பத்தூர் தொகுதியில் எத்தனை தபால் வாக்குகள் உள்ளன ? அதில் எத்தனை வாக்குகள் பதிவாகின ? வேறு தொகுதிக்கு எத்தனை வாக்குகள் சென்றன ? என்று தேர்தல் ஆணையம் விசாரணை செய்ய வேண்டும். தபால் வாக்குகள் மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது எடுக்கப்பட்ட காணொலி காட்சிகள் அனைத்தையும் பாதுகாப்பாக வைக்க வேண்டும்" என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 19-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: