வியாழன், 14 மே, 2026

மதுவிலக்கை அமல்படுத்தி கள்ளுக்கு அனுமதி வழங்க வேண்டும் - ஈ.ஆர்.ஈஸ்வரன் கோரிக்கை !!!

SHARE

 மதுவிலக்கை அமல்படுத்தி கள்ளுக்கு அனுமதி வழங்க வேண்டும் - ஈ.ஆர்.ஈஸ்வரன் கோரிக்கை !!!

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் E.R ஈஸ்வரன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அக்கட்சியின் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,

, புதிதாக அமைந்திருக்கிற தமிழக வெற்றிக்கழக அரசுக்கும் முதல்வராக பொறுப்பேற்றுள்ள கட்சியின் தலைவர் விஜய்க்கும் தங்கள் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் நடந்து முடிந்த தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும் எங்கள் மீது அன்பு கொண்டு வாக்களிக்காமல் இருந்தவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

இந்த தேர்தலில் எங்கள் கட்சி கூட்டணியில் இரண்டு இடங்களில் போட்டியிட்டு பொள்ளாச்சி தொகுதியில் எங்கள் வேட்பாளர் நித்தியானந்தம் வெற்றி பெற்றுள்ளார் சட்டமன்றத்தில் சிறப்பான உரையை அவர் ஆற்றி உள்ளதாக தெரிவித்தார். கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்காக எங்களுடைய குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்றும் எங்கள் கட்சி வளர்ச்சிக்கான இயக்கம் எங்களுடைய அரசியல் என்பது இந்த கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்கு உரியது என்று தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் வேகப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோவைக்கு மெட்ரோ ரயில் உடனடியாக வரவேண்டும் அதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் அவிநாசி சாலை மேம்பாலம் நீலாம்பூர் வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான பணிகள் உடனடியாக துவக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளங்களை சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

அதிமுக விவகாரம் தொடர்பான கேள்விக்கு தேர்தலில் வெற்றி தோல்வி என்பது ஒரு கட்சிக்கு எப்பொழுதும் இயல்பானது தான், தோல்வி வந்தவுடன் அந்த கட்சியில் இருக்கக்கூடிய ஒரு சிலர் அந்த கட்சியை பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை, அவர்கள் எல்லாம் யோசித்துப் பார்க்க வேண்டும் அவர்களெல்லாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பமாக உள்ளது என்று தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜய் முதல் கட்டமாக சில மதுபான கடைகளை மூட உத்தரவிட்டது தொடர்பான கேள்விக்கு அந்த உத்தரவிற்கு வரவேற்பை தெரிவித்துக் கொள்வதாகவும் அதே சமயம் ஒரு கடைகளை மூடினால் அதே பகுதியில் சந்து கடைகள் வருவது வழக்கமாக இருக்கிறது எனவே கவனத்துடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார். சில கடைகளை மூடுவதால் மட்டும் மது பழக்கத்தை குறைத்து விட முடியாது இத்தனை கடைகளை மூடினாலும் மாதக் கடைசியில் அதன் வருமானம் குறைந்து விடாது அப்படி என்றால் விற்பனை குறையவில்லை என்று அர்த்தம் என்று தெரிவித்த அவர் இதற்கான ஒரே தீர்வு மதுவிலக்கு தான். எனவே மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்தி கள்ளுக்கு அனுமதி கொடுத்து விவசாயிகளை வாழ வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: