அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

"குழந்தையுடன் அன்பாகச் உரையாடிய அமைச்சர் அருண்ராஜ்" ; கோவை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு!

"குழந்தையுடன் அன்பாகச் உரையாடிய அமைச்சர் அருண்ராஜ்" ; கோவை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு!

குழந்தைகள் வார்டில் நெகிழ்ச்சி சம்பவம்: பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் சம்பத் குமாரும் பங்கேற்பு!

 கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ், கோவை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

 அப்போது குழந்தைகள் வார்டில் இருந்த சிறுமி ஒருவர் அமைச்சருடன் சுவாரசியமாக உரையாடிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு அரசியல் மற்றும் அரசு தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகச் கோவைக்கு வருகை தந்து இருந்தனர்.

இந்நிகழ்வுகளின் இடையே, கோவை அரசு தலைமை மருத்துவமனைக்குத் திடீரெனச் சென்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், அங்கு இருந்த வார்டுகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை வசதிகளை நேரில் ஆய்வு செய்தார். அவருடன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் மற்றும் மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

மருத்துவமனையின் குழந்தைகள் நல வார்டை ஆய்வு செய்ய அமைச்சர் சென்ற போது, அங்குச் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிறுமி ஒருவரிடம் நலம் விசாரித்தார். அப்போது அச்சிறுமி எவ்வித தயக்கமுமின்றி, அமைச்சரிடம் மிகவும் மழலை மொழியில் உற்சாகமாகப் பேசினார்.

சிறுமியின் பேச்சைக் கேட்டுப் புன்னகைத்த அமைச்சர், அவருக்கு அளித்துவரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததுடன், அச்சிறுமிக்கு ஆறுதலும் அன்பும் தெரிவித்தார்.

 அமைச்சரும் சிறுமியும் அன்போடு பேசிக்கொண்ட இந்த அழகான தருணம் அங்கு இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் கவனத்தையும் ஈர்த்தது.

சனி, 12 செப்டம்பர், 2026

லண்டனில் அஜித் குமாரின் கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய் !

லண்டனில் அஜித் குமாரின் கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய் !

 போட்டி நடக்கும் இடத்திற்கு வந்த முதல்வர் ஜோசப் விஜய் அங்கு பந்தயத்திற்கு தயாராக இருந்த அஜித் குமாரை நோக்கி ஓடிச் சென்று கட்டித் தழுவினார். இருவரும் பரஸ்பரம் முத்தமிட்டு தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர்.

இங்கிலாந்தில் நடைபெறும் லீ மான்ஸ் கோப்பை தொடரில், நடிகரும் ரேசருமான அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கொடி அசைத்து இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டிற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலகளாவிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், செப்டம்பர் 10-ஆம் தேதி, இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றார்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, இங்கிலாந்தின் நார்தாம்ப்டன்ஷையரில் உள்ள உலகப் புகழ் பெற்ற சில்வர்ஸ்டோன் ஓடுதளத்திற்கு (Silverstone Circuit) சென்ற முதலமைச்சர் விஜய், உலகப்புகழ் பெற்ற லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார். லீ மான்ஸ் கோப்பை நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று இந்த சர்வதேச நிகழ்வில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

போட்டி நடக்கும் இடத்திற்கு வந்த முதல்வர் ஜோசப் விஜய் அங்கு பந்தயத்திற்கு தயாராக இருந்த அஜித் குமாரை நோக்கி ஓடிச்சென்று கட்டித் தழுவினார். இருவரும் பரஸ்பரம் முத்தமிட்டு தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர். பின்னர் போட்டியில் பங்கேற்கும் சக வீரர்கள் ஒவ்வொருவரையும் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு, அஜித் குமார் அறிமுகம் செய்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து, அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அவருடயை காரில் அமர்ந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் இந்திய நேரப்படி, இரவு 9.40 மணிக்கு லீமான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த லீ மான்ஸ் கோப்பை தொடரில் அஜித் குமார் தவிர்த்து, இந்தியாவின் முன்னணி ஃபார்முலா 1 வீரர்களான நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா பட்டேல் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

மேலும் முன்னதாக சில்வர்ஸ்டோன் மைதானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அஜித் குமார், தமது அழைப்பை ஏற்று இங்கு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

தமிழ்த் திரைத்துறையில் பல ஆண்டுகளாக தல - தளபதி என்று கொண்டாடப்பட்ட, கோடிக் கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஜோசப் விஜய்யும், அஜித் குமாரும் லண்டனில் சந்தித்துக் கொண்டது, ஒட்டுமொத்த ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

வெள்ளி, 11 செப்டம்பர், 2026

 "10 ஆண்டுகாலக் கோரிக்கைக்கு விடிவு காலம்" ; தமிழக அரசுக்கு அரசுப் போக்குவரத்து ரேவா சங்க ஓய்வூதியதாரர்கள் நெகிழ்ச்சி நன்றி!

"10 ஆண்டுகாலக் கோரிக்கைக்கு விடிவு காலம்" ; தமிழக அரசுக்கு அரசுப் போக்குவரத்து ரேவா சங்க ஓய்வூதியதாரர்கள் நெகிழ்ச்சி நன்றி!

வால்பாறையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்: ஓய்வூதியதாரர்களின் வாழ்வாதாரம் பாதுகாப்பு!

​அரசுப் போக்குவரத்து இயக்கக ஓய்வூதியதாரர்களின் 10 ஆண்டு காலக் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற்ற ரேவா சங்க ஆலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர்களின் நலன்களுக்காக ரேவா சங்கத்தினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

 இந்நிலையில், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தி ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு (DA Hike) மற்றும் நிலுவைத் தொகையான அரியர்ஸ் (Arrears) வழங்கிட வேண்டும் என ரேவா சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கடந்த ஆட்சி காலத்தில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

​இருப்பினும், முந்தைய ஆட்சியாளர்களால் இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இழுபறியாகவே நீடித்து வந்ததால், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெரும் பொருளாதார நெருக்கடிக்கும் சிரமத்திற்கும் ஆளாகி வந்தனர்.

இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்திற்குப் பின் பொறுப்பேற்று உள்ள புதிய தமிழக அரசின் கவனத்திற்கு ரேவா சங்கத்தின் மாநில நிர்வாகிகள் இக்கோரிக்கைகளை நேரில் கொண்டு சென்று தீவிரமாக வலியுறுத்தினர்.

 ஓய்வூதியதாரர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்த தமிழக அரசு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட சுமார் 10 ஆண்டு கால பணப் பலன்களை வழங்க முன்வந்தது.

​இதன் மூலம் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தனியார் அரங்கில் ரேவா சங்கத்தின் வால்பாறை கிளை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 வால்பாறை கிளைச் சங்கத் தலைவர் நாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், ஓய்வூதியதாரர்களின் 10 ஆண்டு கால நீண்ட காலக் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வந்த தமிழக அரசுக்கும், இதற்குத் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு தீர்வு காணத் துணை புரிந்த ரேவா சங்க மாநில நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துச் சிறப்பாய்த் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


​இக்கூட்டத்தில் ரேவா சங்கச் செயலாளர் பிரேம்குமார், பொருளாளர் கருணாநிதி, துணைத் தலைவர்கள் சந்திரன், கல்யாணராஜ், ராமன், துணைச் செயலாளர்கள் தங்கராஜ், ஜெபக்கனி, செல்வக்குமார், சின்னச்சாமி, மத்திய சங்க நிர்வாகிகள் சின்னப்பன், மாரியப்பன் உள்ளிட்ட திரளான நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அரசு அலுவலகங்களுக்குத் தொடர் வெடிகுண்டு மிரட்டல் ; அமெரிக்காவில் பணியாற்றிய நெல்லை என்ஜினீயர் கைது!

அரசு அலுவலகங்களுக்குத் தொடர் வெடிகுண்டு மிரட்டல் ; அமெரிக்காவில் பணியாற்றிய நெல்லை என்ஜினீயர் கைது!

விசாரணை முடிந்த பின் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைப்பு!

 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்குத் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த அமெரிக்காவில் பணியாற்றிய என்ஜினீயரைக் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை முடிந்த பின்பு சிறையில் அடைப்பு

கோவை மாநகரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம், முதன்மைத் தபால் நிலையம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்குக் கடந்த சில நாட்களாக மின்னஞ்சல் மூலமாகத் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன.

ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு மற்றும் மோப்ப நாய் படை போலீசார் அங்குச் சென்று தீவிர சோதனை மேற் கொண்ட போது, அது வெறும் போலி மிரட்டல் (Hoax Threat) என்பது தெரியவந்தது. இது குறித்துக் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மிரட்டல் விடுத்த மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இதே பாணியில் தமிழகம் முழுவதும் உள்ள பல முக்கிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இது தொடர்பாகச் சென்னை பெருநகர சைபர் கிரைம் போலீசார் தீவிர தொழில்நுட்ப விசாரணை மேற்கொண்டனர்.

அதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சரத் சுப்பிரமணியம் சங்கர் என்பதும், இவர் அமெரிக்காவில் மென்பொருள் என்ஜினீயராக (Software Engineer) பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

 இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து அண்மையில் சென்னை திரும்பிய சரத் சுப்பிரமணியம் சங்கரைச் சென்னை போலீசார் கையும், களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

கோவை மாநகரில் மட்டும் இவருக்கு எதிராகத் தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக 3 சைபர் கிரைம் வழக்குகள் நிலுவையில் இருந்தன.

இதனைத் தொடர்ந்து, சென்னைக்குச் சென்ற கோவை மாநகர சைபர் கிரைம் தனிப்படை போலீசார், சரத் சுப்பிரமணியம் சங்கரை முறைப்படி கைது செய்தனர். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, நீதிபதியின் உத்தரவின் பேரில் சென்னை மத்திய சிறையில் அடைத்தனர்.

 இச்சம்பவம் அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதலமைச்சரின் புகைப்படத்தை பார்த்து கையெடுத்து கும்பிட்ட மூதாட்டி வைரலாகும் காட்சி!

முதலமைச்சரின் புகைப்படத்தை பார்த்து கையெடுத்து கும்பிட்ட மூதாட்டி வைரலாகும் காட்சி!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி த.வெ.க சார்பில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் காலையில் விலையில்லா விருந்தகம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சேத்துப்பட்டு நகர தவெக சார்பில் நடைபெற்ற விலையில்லா விருந்தகத்திற்கு வந்திருந்த வயதான மூதாட்டி ஒருவர், அங்கு வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சரின் உருவப்படத்தை பார்த்து கையெடுத்து கும்பிட்டு வணக்கம் செலுத்தியுள்ளார்.

மூதாட்டியின் இந்த செயல் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், அந்தக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

புதன், 9 செப்டம்பர், 2026

"விமான நிலையப் பின்பகுதியில் கெமிக்கல் கழிவுகள் வீச்சு" ; வழுக்கி விழுந்து படுகாயமடையும் வாகன ஓட்டிகள் -கோவையில் பரபரப்பு!

"விமான நிலையப் பின்பகுதியில் கெமிக்கல் கழிவுகள் வீச்சு" ; வழுக்கி விழுந்து படுகாயமடையும் வாகன ஓட்டிகள் -கோவையில் பரபரப்பு!

இரசாயனத்தை அப்புறப்படுத்தவும், வீசிச் சென்ற மர்ம நபர்களைக் கைது செய்யவும் பொதுமக்கள் கொந்தளிப்பு!

​கோவை சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் உள்ள மண் சாலையில் மர்ம நபர்கள் கழிவு கெமிக்கல் பாக்கெட்டுகளை வீசிச் சென்றதால், அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வழுக்கி விழுந்து படுகாயம் அடைந்து வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தினசரி பயன்படுத்தும் மண் சாலை உள்ளது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், அப்பகுதியில் ஆபத்தான கெமிக்கல் பாக்கெட்டுகளைச் சாலையில் கொட்டி விட்டுத் தப்பிச் சென்று உள்ளனர்.

​அந்தப் பாக்கெட்டுகளில் இருந்து இரசாயனக் திரவம் கசிந்து சாலை முழுவதிலும் பரவியதால், மண் சாலை முற்றிலும் வழவழப்பாக மாறி உள்ளது.

இந்நிலையில் அவ்வழியாகச் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து சென்ற பொதுமக்கள் பலர், சாலையில் கெமிக்கல் கொட்டப்பட்டு இருப்பதை அறியாமல் சென்று திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து வழுக்கி விழுந்தனர். இதில் பலருக்குக் கை, கால்களில் படுகாயங்கள் ஏற்பட்டு உள்ளன.

​தொடர்ந்து அடுத்தடுத்து வாகனங்கள் வழுக்கி விழுவதைக் கண்ட அப்பகுதி வாசிகள் உடனடியாக ஓடிவந்து காயம் அடைந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

 ஆபத்தான முறையில் கெமிக்கலைச் சாலையில் கொட்டிச் சென்ற நபரைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

​மேலும், அந்த மண் சாலையில் பரவி உள்ள இரசாயனக் கழிவுகளைத் மாநகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 நகரின் பாதுகாப்பு மண்டலமான விமான நிலையப் பகுதியிலேயே கெமிக்கல் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் போதை மாத்திரைகள் & கஞ்சா பறிமுதல்" ; 2 வாலிபர்களைப் பிடித்துப் கைது செய்த போலீசார்!

கோவையில் போதை மாத்திரைகள் & கஞ்சா பறிமுதல்" ; 2 வாலிபர்களைப் பிடித்துப் கைது செய்த போலீசார்!

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற அம்பலம் : 400 'டைடால்' மாத்திரைகள் மற்றும் மொபைல்கள் பறிமுதல்!

 கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே நரசிம்மநாயக்கன்பாளையத்தில் சட்ட விரோதமாகப் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞர்களைப் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் கையும், களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நமச்சிவாயம் போதைப் பொருட்கள் விற்பனை குறித்து ரகசியத் தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் அடிப்படையில், நரசிம்மநாயக்கன்பாளையம் பகவான் கார்டன் பகுதியில் உள்ள செல்வமாரியம்மன் கோவில் அருகே உள்ள வாட்டர் டேங்க் பகுதியில் போலீசார் தீவிரக் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குச் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று இருந்த இரு வாலிபர்கள், போலீசாரைக் கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். சுதாரித்துக் கொண்ட காவல் துறையினர் அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினர்.

பிடிபட்ட நபர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், நரசிம்மநாயக்கன்பாளையம், குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தஆனந்தகுமார் (23), புதுப்பாளையம் ரோடு, அங்காளம்மன் நகரைச் சேர்ந்த கௌசிகன் (26) எனத் தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களைச் சோதனை செய்த போது, ஆனந்தகுமாரின் பேண்ட் பாக்கெட்டில் ஜிப்லாக் கவரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 400 ஆரஞ்சு நிற 'டைடால்' (Tydol) போதை மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. அதேபோல, கௌசிகனின் பாக்கெட்டில் 120 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவை வாங்கி வந்து, தங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும், அப்பகுதியில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் அதிக விலைக்குச் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது அம்பலமானது.

இதை அடுத்து, 400 டைடால் மாத்திரைகள், 120 கிராம் கஞ்சா மற்றும் அவர்களிடம் இருந்த Vivo Y39, Samsung ஆகிய 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போதைப்பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதாள சாக்கடை குழியில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த இளம் பெண்!" - ஜே.சி.பி இயந்திரம் மூலம் அதிரடி மீட்பு: கோவையில் பரபரப்பு வீடியோ!

பாதாள சாக்கடை குழியில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த இளம் பெண்!" - ஜே.சி.பி இயந்திரம் மூலம் அதிரடி மீட்பு: கோவையில் பரபரப்பு வீடியோ!

வடவள்ளி மருதமலை சாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: உயிர்த்தப்பிய அதிர்ஷ்டசாலி!

 கோவை, வடவள்ளி, மருதமலை சாலையில் பாதாள சாக்கடை பணிக்காகத் தோண்டப்பட்ட பெரிய குழிக்குள் இருசக்கர வாகனத்துடன் இளம் பெண் ஒருவர் தவறி விழுந்த நிலையில், ஜேசிபி (JCB) இயந்திர உதவியுடன் மீட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வடவள்ளி மருதமலை சாலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காகப் பல்வேறு இடங்களில் குழிகள் தோண்டப்பட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.

 இந்நிலையில், அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் இளம் பெண் ஒருவர் சென்று கொண்டு இருந்தார்.

​போதுமான பாதுகாப்பு எச்சரிக்கைக் பலகைகளோ அல்லது தடுப்புகளோ முறையாக அமைக்கப்படாததால், எதிர்பாராத விதமாக அந்த இளம் பெண் தனது இருசக்கர வாகனத்துடன் சாலையில் தோண்டப்பட்டு இருந்த ஆழமான பாதாள சாக்கடை குழிக்குள் தலைகுப்புற விழுந்தார்.

 திடீரென நடந்த இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

குழிக்குள் விழுந்த இளம் பெண் வெளியே வர முடியாமல் தவித்ததைக் கண்ட அப்பகுதி பொதுமக்களும், மீட்புப் பணியாளர்களும் உடனடியாக அங்குத் திரண்டனர்.

​தொடர்ந்து, அருகில் அந்தப் பணிக்காக நின்று இருந்த ஜேசிபி (JCB) இயந்திரத்தின் உதவியுடன் அப்பெண்ணைப் பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். 

 நல்வாய்ப்பாகப் பெரிய காயங்கள் ஏதுமின்றி அப்பெண் உயிர் தப்பினார்.

நகரின் முக்கியப் பகுதியான மருதமலை சாலையில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளோ, ஒளிரும் பட்டைகளோ இன்றி ஆபத்தான முறையில் தோண்டப்பட்டு உள்ள குழிகளால் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.


​இரவு நேரங்களில் இதுபோன்று குழிகள் தெரிவதில்லை எனவும், மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு முக்கியக் காரணம் எனவும் கூறி அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் ஆத்திரம் வெளிப்படுத்தி உள்ளனர். மேலும், இது தொடர்பான செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 "ஒரு பக்கமாகச் சாய்ந்தபடி சீறிப் பாய்ந்த தமிழக அரசுப் பேருந்து" ; நெஞ்சைப் பதறவைக்கும் கேரள நபரின் வைரல் வீடியோ!

"ஒரு பக்கமாகச் சாய்ந்தபடி சீறிப் பாய்ந்த தமிழக அரசுப் பேருந்து" ; நெஞ்சைப் பதறவைக்கும் கேரள நபரின் வைரல் வீடியோ!

பொள்ளாச்சியில் இருந்து மன்னார்காட் செல்லும் பஸ்சுக்கு என்ன ஆச்சு? ஆபத்தான பயணத்தால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள்!

​கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து ஆனைக்கட்டி வழியாகக் கேரள மாநிலம் மன்னார்காட் செல்லும் தமிழக அரசுப் பேருந்து ஒன்று, ஒரு புறமாக ஆபத்தான முறையில் சாய்ந்தபடியே அதிவேகமாகச் சென்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து கேரளா மாநிலம் மன்னார்காட்டிற்கு ஆனைக்கட்டி வழியாகத் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து (TNSTC) ஒன்று இயங்கி வருகிறது.

​இந்நிலையில், ஆனைக்கட்டி பாதையில் கோவை நோக்கிச் சென்று கொண்டு இருந்த இந்தப் பேருந்து, சமநிலையை இழந்து இடது அல்லது வலது புறமாக ஆபத்தான முறையில் சாய்ந்தபடியும், சாலையின் ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டும் சென்று உள்ளது. பேருந்தில் பயணிகள் இருந்த நிலையிலும், ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் அதிவேகமாகச் செலுத்தி உள்ளார்.

அந்தச் சமயத்தில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், இந்த ஆபத்தான பயணத் தனது செல்போனில் வீடியோவாகப் படம்பிடித்து உள்ளார்.

அவர் தனது வீடியோவில் பேசும்போது ....

 "ஆனைக்கட்டியில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் வழியில் தான் இந்தப் பேருந்தைப் பார்த்தேன். பேருந்து மிகவும் அதிவேகமாகச் சென்று கொண்டு இருக்கிறது. ஆனால், பஸ்ஸுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல, ஒரு பக்கமாக முற்றிலும் சாய்ந்து போய்க் கொண்டு இருக்கிறது. இந்த ஆபத்தான நிலையிலும் பஸ் தொடர்ந்து ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. எனக்கு அவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது, எங்குமே வண்டியை நிறுத்தி என்ன பிரச்சனை என்று கூடப் பார்க்கவில்லை" எனப் புலம்பியபடி பதிவிட்டு உள்ளார்.

இந்த நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போலப் பரவி, பொதுமக்கள் இடையே பெரும் பேசுபொருளாக மாறி உள்ளது.

​பேருந்தின் 'ஏர் ஸ்ப்ரிங்'  பழுது காரணமாகவோ அல்லது 'சாஃப்ட் ஆக்சில்' முறிவு காரணமாகவோ பேருந்து இவ்வாறு சாய்ந்து இருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. பயணிகளின் உயிரோடு விளையாடும் வகையில் பழுதுடைந்த நிலையிலும் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மற்றும் பராமரிப்பைப் புறக்கணித்த போக்குவரத்து அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 "பள்ளி கட்டிடம் முடிகிறதுக்கு முன்னாடியே வகுப்புகளா ?" - மாணவி தலையில் விழுந்த 'பால் சீலிங்': பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தால் கோவையில் பரபரப்பு!

"பள்ளி கட்டிடம் முடிகிறதுக்கு முன்னாடியே வகுப்புகளா ?" - மாணவி தலையில் விழுந்த 'பால் சீலிங்': பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தால் கோவையில் பரபரப்பு!

உரிய சான்றிதழ் இல்லாமல் இயங்கிய டேக் அக்ஷயா அகாடமி சி.பி.எஸ்.சி பள்ளி - பெற்றோர் முற்றுகையால் பரபரப்பு!

 கோவை, துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள தனியார் சி.பி.எஸ்.சி பள்ளியில், பணிகள் நிறைவடையாத புதிய கட்டிடத்தில் மாணவியை அமர வைத்ததில் 'பால் சீலிங்' (False Ceiling) பெயர்ந்து தலையில் விழுந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

 இதைக் கண்டித்து நூற்றுக் கணக்கான பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை, துடியலூர் அடுத்த பன்னீர்மடை பகுதியில் பிரபல ‘டேக் அக்ஷயா அகாடமி’ (TAG Akshaya Academy) சி.பி.எஸ்.சி பள்ளி இயங்கி வருகிறது. கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்குப் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது இயங்கி வரும் பள்ளி வளாகத்தின் அருகே சுமார் 30,000 சதுர அடியில், 3 தளங்களுடன் கூடிய புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. நீரோடைப் பள்ளத்தின் ஓரத்தில், சுற்றுச்சுவர் கூட முழுமையாகக் கட்டப்படாத இந்த புதிய கட்டிடத்தில், விஜயதசமி சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் கேஜி மாணவர்களை அமர வைத்து வகுப்புகள் நடத்தப்பட்டு உள்ளன.

இதைக் கண்டித்துப் கடந்த வாரம் பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, பழைய கட்டிடத்திற்கு மாணவர்களை மாற்றுவதாகவும் 3 நாட்களில் பணிகளை முடிப்பதாகவும் நிர்வாகம் உறுதி அளித்தது. ஆனால், பணிகள் முடியாத நிலையிலேயே மீண்டும் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களை அந்த ஆபத்தான புதிய கட்டிடத்திற்கு மாற்றி உள்ளனர்.

இந்நிலையில், நேற்று புதிய கட்டிடத்தில் கழிவறைக்குச் சென்ற மாணவி ஒருவரின் தலையில், மேல் இருந்த பால் சீலிங் (False Ceiling) திடீரென கழன்று விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அம்மாணவி காயமின்றித் தப்பினார்.

இந்தத் தகவல் பரவியதும் ஆத்திரம் அடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள், இன்று காலை பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு முதன்மை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, பெற்றோர்கள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியதால் நிர்வாகத்தினர் பதிலளிக்க முடியாமல் திணறினர்.

கட்டிட அனுமதி (Building Approval) மற்றும் பணி நிறைவு சான்றிதழ் (Completion Certificate) பெறாமலேயே மாணவர்களை ஆபத்தான கட்டிடத்தில் அமர வைத்து உள்ளனர்.

வகுப்பறைகளில் உடையும் நிலையில் உள்ள டைல்ஸ்கள், இயங்காத மின்விசிறிகள் மற்றும் சிமெண்ட் தூசியால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படுகிறது.

முழு கட்டிடத்திற்கும் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளதால், நீண்ட வரிசையில் நின்று மதிய உணவைக் கூடச் சாப்பிட முடியாமல் குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.

ஆய்வகம் (Lab), கணினி மையம், நூலகம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. ஆனால் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்திக் கொண்டே செல்கின்றனர்.

தட்டிக் கேட்டால் 'டிசி' (TC) வாங்கிக் கொண்டு வெளியேறுங்கள் எனப் பள்ளி நிர்வாகம் மிரட்டுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தடாகம் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி தலைமையிலான போலீசார், பெற்றோர்களுடன் இணைந்து புதிய கட்டிட நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் பள்ளி நிர்வாகத்திடம், "அனைத்துப் பணிகளையும் 10 நாட்களுக்குள் முழுமையாக முடித்து, முறையான பணி நிறைவுச் சான்றிதழ் பெற்ற பின்னரே புதிய கட்டிடத்தில் வகுப்புகளைத் தொடங்க வேண்டும். அதுவரை பழைய கட்டிடத்திலேயே மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த வேண்டும்" என உத்தரவிட்டார்.

காவல்துறையின் இந்த உறுதியான நடவடிக்கையைத் தொடர்ந்து பெற்றோர்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

 இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் பெரும் பரபரப்பு நிலவியது.

செவ்வாய், 8 செப்டம்பர், 2026

 "பாரதியார் பல்கலைக் கழகத்தில் சர்வ சாதாரணமாக உலா வரும் காட்டுப் பன்றிகள்" ; பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் அதிர்ச்சி வீடியோ!

"பாரதியார் பல்கலைக் கழகத்தில் சர்வ சாதாரணமாக உலா வரும் காட்டுப் பன்றிகள்" ; பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் அதிர்ச்சி வீடியோ!

தண்ணீர், உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறும் வனவிலங்குகள்: மாணவர்களுக்கு வனத்துறை தீவிர எச்சரிக்கை!

​ கோவை, பாரதியார் பல்கலைக் கழக வளாகத்திற்குள் காட்டுப் பன்றி ஒன்று சர்வ சாதாரணமாக உலா வந்து, பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பழங்களை உண்ணும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, மருதமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள அமைதியான சூழலில் பாரதியார் பல்கலைக் கழகம் அமைந்து உள்ளது. அடர்ந்த மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருப்பதால், பல்கலைக் கழக வளாகத்திற்குள் சர்வ சாதாரணமாக மான், முயல், காட்டுப்பன்றி, யானைகள் மற்றும் சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது நுழைவது வழக்கமாகும்.

​தற்போது கோடை மழை போதிய அளவு பெய்யாததால், அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால், உணவையும் தண்ணீரையும் தேடி வனவிலங்குகள் இரவு நேரங்களிலும், ஆள் நடமாட்டம் குறைந்த நேரங்களிலும் வன எல்லையை விட்டு வெளியேறி பல்கலைக் கழக வளாகத்திற்குள் படையெடுத்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று மாலை சுமார் 7 மணி அளவில் பாரதியார் பல்கலைக் கழக வளாகத்திற்குள் நுழைந்த காட்டுப்பன்றி ஒன்று, அங்கு கொட்டப்பட்டு இருந்த பிளாஸ்டிக் கழிவுகளையும், அழுகிய பழங்களையும் சர்வ சாதாரணமாகத் தேடி உண்ணும் காட்சிகள் பதிவாகி உள்ளன. வனவிலங்குகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பது அவற்றின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால், இது இயற்கை ஆர்வலர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வளாகத்திற்குள் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதைக் கருத்தில் கொண்டு, வனத்துறையினர் மற்றும் பல்கலைக் கழக நிர்வாகம் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

​பல்கலைக் கழக விடுதிகளில் தங்கி உள்ள மாணவ, மாணவிகள் இரவு நேரங்களில் தேவையற்ற முறையில் வெளியே சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.

​இரவு நேரக் காவல் பணியில் ஈடுபடும் பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

​வளாகத்திற்குள் வனவிலங்குகளைக் கண்டால் அருகில் செல்லவோ, அவற்றுக்கு உணவு வழங்கவோ கூடாது.

​மேலும், பல்கலைக் கழக வளாகத்தில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்படுவதைத் தடுத்து, வனவிலங்குகள் உள்ளே நுழைவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பேராசிரியர்களும் மாணவர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

"கோவையில் 11 to 11 பாரில் மதுப்பிரியர்கள் பயங்கர மோதல்" ; பீர் பாட்டில்களால் தாக்கி முரட்டு சண்டை: செல்போன் வீடியோ இணையத்தில் வைரல்!

"கோவையில் 11 to 11 பாரில் மதுப்பிரியர்கள் பயங்கர மோதல்" ; பீர் பாட்டில்களால் தாக்கி முரட்டு சண்டை: செல்போன் வீடியோ இணையத்தில் வைரல்!

தண்ணீர் பந்தல் சாலையில் அரங்கேறிய நடுரோட்டு அதிரடி: பொதுமக்கள் அச்சம், சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறி!

​ கோவை, பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில் இயங்கி வரும் '11 to 11' பாரில் மதுப்பிரியர்களுக்கு இடையே ஏற்பட்ட திடீர் தகராறு, ஒருவரையொருவர் கொடூரமாகத் தாக்கி கொள்ளும் வன்முறையாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, பீளமேடு பகுதிக்குட்பட்ட தண்ணீர் பந்தல் சாலையில் பிரபல ‘11 to 11’ மதுபானக் கூடம் (Bar) செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு மது அருந்த வந்த சில நபர்களுக்கு இடையே எதிர்பாராத விதமாக வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது.

​மது போதை தலைக்கேறிய நிலையில், தகராறு முற்றிப் பாரின் உள்ளேயும், வெளியேயும் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

 ஆத்திரம் அடைந்த நபர்கள் அங்கு இருந்த நாற்காலிகள் மற்றும் பாட்டில்களைக் கொண்டு ஒருவரையொருவர் கொடூரமாகத் தாக்கி உள்ளனர்.

பாரில் இருந்த மற்ற வாடிக்கையாளர்களும்,  அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த பயங்கர மோதலை அங்கு இருந்த நபர் ஒருவர் தனது மொபைல் போனில் படம் பிடித்து உள்ளார்.

​தற்போது அந்தச் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

 அந்த வீடியோவில், மதுப்பிரியர்கள் ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கும் கொடூரக் காட்சிகள் பதிவாகி உள்ளன.

​ இதுபோன்ற சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட மதுபானக் கூடத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

திங்கள், 7 செப்டம்பர், 2026

 "காலில் இரும்புக் கம்பியுடன் தவித்த பெண் யானை" - ட்ரோன் மூலம் கண்காணித்து வனத்துறை அதிரடி சிகிச்சை!

"காலில் இரும்புக் கம்பியுடன் தவித்த பெண் யானை" - ட்ரோன் மூலம் கண்காணித்து வனத்துறை அதிரடி சிகிச்சை!

சிறுமுகை காப்பக்காடு பகுதியில் கும்கிகள், 5 மருத்துவர்கள் உதவியுடன் மீட்பு : மயக்க ஊசி செலுத்திப் புதுவாழ்வு!

கோவை மாவட்டம், சிறுமுகை வனப்பகுதியில் காலில் ஆழமாக இரும்புக் கம்பி சிக்கி வலியால் தவித்துக் கொண்டு இருந்த பெண் யானையை, வனத்துறையினர் மற்றும் சிறப்பு மருத்துவக் குழுவினர் ட்ரோன் மூலம் கண்காணித்து வெற்றிகரமாக மயக்க ஊசி செலுத்திச் சிகிச்சை அளித்துக் காப்பாற்றி உள்ளனர். 

கோவை, வனக்கோட்டத்திற்கு உட்பட்ட சிறுமுகை வனச்சரகத்தைச் சேர்ந்த பெத்திக்குட்டை, உளியூர் காப்பக்காடு பகுதியில் கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி வனப் பணியாளர்கள் வழக்கம் போல் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அங்கு சுற்றித் திரிந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்கப் பெண் யானை ஒன்று நடப்பதற்குச் சிரமப்பட்டு மெதுவாக நடந்து செல்வதைக் கவனித்தனர். உன்னிப்பாகப் பார்த்த போது, அந்த யானையின் இடது முன்னங்காலில் தடிமனான இரும்புக் கம்பி ஒன்று ஆழமாகச் சிக்கி, அது காயத்தை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்தது. இது குறித்து வனப்பணியாளர்கள் உடனடியாகக் கோவை மாவட்ட வன அலுவலருக்கு (DFO) விரிவான தகவல் அளித்தனர்.

காயம் அடைந்த யானைக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க வனத்துறை உயர் அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெறப்பட்டது. கோவை மாவட்ட வன அலுவலர் தலைமையில், சிறுமுகை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர்கள், 60-க்கும் மேற்பட்ட வனப் பணியாளர்கள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் கொண்ட சிறப்பு மீட்புக் குழு அமைக்கப்பட்டது.

யானைக்குப் பாதுகாப்பாகச் சிகிச்சை அளிப்பதற்காக ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்களைச் சேர்ந்த 5 கால்நடை மருத்துவக் குழுவினரும், யானைப் பாகன்களும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

அடர்ந்த வனப்பகுதிக்குள் காயம் அடைந்த யானை எங்குச் செல்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய நவீன ட்ரோன் (Drone) கேமராக்கள் வான்வழியாகப் பயன்படுத்தப்பட்டன. யானையின் நடமாட்டத்தைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்த குழுவினர், அதற்குச் சிகிச்சை அளிக்கச் சரியான வாய்ப்புக்காகக் காத்து இருந்தனர்.

சரியான சூழல் அமைந்ததும், நேற்று அடர்ந்த வனப்பகுதிக்கு உள்ளேயே வைத்து அனுபவம் வாய்ந்த கால்நடை மருத்துவர்கள் லாவகமாக யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.

மயக்க ஊசி செலுத்தப்பட்டு யானை நிலைகுலைந்து சாய்ந்ததும், சுற்றிலும் பாதுகாப்பை ஏற்படுத்திய மருத்துவக் குழுவினர், யானையின் இடது முன்னங்காலில் ஆழமாகப் பதிந்து இருந்த இரும்புக் கம்பியைச் கவனமாக வெளியே எடுத்தனர். பின்னர் காயம் அடைந்த பகுதிக்குக் கிருமிநாசினி மற்றும் தீவிர நிவாரண மருந்துகளை அளித்துச் சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சை முழுமையாக முடிந்த பிறகு, யானைக்கு மயக்கம் தெளிவிப்பதற்கான மாற்று மருந்து செலுத்தப்பட்டது. சில நிமிடங்களிலேயே மயக்கம் தெளிந்து இயல்பு நிலைக்குத் திரும்பிய அந்தப் பெண் யானை, ஆரோக்கியத்துடன் மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் நடந்து சென்றது.

 வனத்துறையினரின் இந்தச் சமயோசிதமான மற்றும் துரிதமான மீட்பு நடவடிக்கை வன உயிரின ஆர்வலர்கள் இடையே பெரும் பாராட்டைப் பெற்று உள்ளது.

 "சைக்கிளில் சென்றவரை துரத்திய தெரு நாய்கள்" - கோவையில் நடுக்கத்தை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சி : நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி ?

"சைக்கிளில் சென்றவரை துரத்திய தெரு நாய்கள்" - கோவையில் நடுக்கத்தை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சி : நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி ?

சிறுமியை துரத்திய மற்றொரு அதிர்ச்சி சம்பவம்: ஆட்சியரிடம் மனு அளித்த சமூக ஆர்வலர் நூர் அகமது!

​ கோவை மாநகராட்சிப் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லையால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்தில் உறைந்து உள்ள நிலையில், சைக்கிளில் சென்றவரை தெருநாய்கள் துரத்தும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி இணையத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகின்றன.

கோவை, சுந்தராபுரம், மதுக்கரை சாலை அஷ்டலட்சுமி நகர் பகுதியில் நேற்று மாலை நபர் ஒருவர் தனது சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு கூட்டமாக நின்று இருந்த தெருநாய்கள் திடீரென ஆக்ரோஷமாகக் குரைத்தவாறு அவரை நோக்கிப் பாய்ந்து கடிக்கத் துரத்தின.

​நாய்களிடம் கடிபடாமல் இருக்க அவர் சைக்கிளை வேகமாகக் மிதித்துத் தப்பிச் செல்லும் நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் (CCTV) பதிவாகி உள்ளது. 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதன் இடையே, இதே பகுதியில் நாய் துரத்தியதால் 8 வயது சிறுமி ஒருவர் கூச்சலிட்டபடி இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற மற்றொரு சம்பவமும் அரங்கேறி உள்ளது.

இது குறித்துச் சமூக ஆர்வலர் நூர் அகமது கூறுகையில்:

 "அஷ்டலட்சுமி நகரில் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தேன். அப்போது 8 வயது மதிக்கத்தக்கச் சிறுமி ஒருவரைத் தெருநாய்கள் கூட்டமாகத் துரத்தி உள்ளன. அந்தப் பயத்தில் அச்சிறுமி இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகத் தப்பிச் சென்று உள்ளார். நல்லவேளையாக எதிரே வேறு எந்த வாகனங்களும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு அச்சிறுமி உயிர் தப்பினார்" எனக் கூறினார்.

கோவை மாநகரில் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் நூர் அகமது நேரில் மனு ஒன்றை அளித்து உள்ளார்.

​அதில், "பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி உடனடியாகக் களமிறங்க வேண்டும். மேலும், பொதுமக்கள் வளர்ப்பு நாய்களை வெளியே அழைத்து வரும்போது அவற்றுக்குக் கட்டாயம் 'வாய்க்கவசம்' (Muzzle) அணிய வேண்டும்; மீறினால் கடும் அபராதம் விதிக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.

​மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு தெருநாய்களைப் பிடித்துக் கட்டுப்படுத்தத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுந்தராபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முதன்மையான எதிர்பார்ப்பாக உள்ளது.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

 கோவை, விமான நிலையம் அருகில் அமோகமாக நடக்கும் 24 மணி நேரத் தடையற்ற மது விற்பனை" ; அரசு மூடிய டாஸ்மாக் முன்பு பெட்டிக்கடையில் ரகசிய அரங்கேற்றம் - அதிர்ச்சியை ஏற்படுத்தும் செல்போன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல்!

கோவை, விமான நிலையம் அருகில் அமோகமாக நடக்கும் 24 மணி நேரத் தடையற்ற மது விற்பனை" ; அரசு மூடிய டாஸ்மாக் முன்பு பெட்டிக்கடையில் ரகசிய அரங்கேற்றம் - அதிர்ச்சியை ஏற்படுத்தும் செல்போன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல்!

குட்கா, கூலி முதல் அனைத்து மதுபானங்களும் தாராளம்!

 கோவையின் முக்கியப் பகுதியான சித்திரா விமான நிலையம் அருகில், அவிநாசி சாலையில் அரசு முத்திரையுடன் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையின் முன்புறம் உள்ள பெட்டிக் கடை ஒன்றில், எந்த நேரக் கட்டுப்பாடும் இல்லாமல் 24 மணி நேரமும் அனைத்து வகையான மதுபானங்களும் சட்ட விரோதமாக விற்கப்பட்டு வருவது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை விமான நிலையப் பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் இயங்கி வந்த அரசு டாஸ்மாக் மதுக்கடை முன்பு அரசாங்கத்தால் அதிகாரப் பூர்வமாக மூடப்பட்டது. ஆனால், பொதுமக்கள் மற்றும் காவல்துறை நடமாட்டம் அதிகமுள்ள அவிநாசி சாலை சித்திரா விமான நிலையம் அருகிலேயே, அந்த மூடப்பட்ட கடையின் முன்புறம் அமைந்து உள்ள ஒரு பெட்டிக்கடை சட்டவிரோத மது விற்பனையின் கூடாரமாக மாறிவிட்டது.

பகல், இரவு பாராமல் 24 மணி நேரமும் அங்கு அனைத்து விதமான வெளிமாநில மற்றும் பிராண்டட் மதுபானங்கள் ரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டுப் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்து உள்ளன.

மதுபானங்களுடன் நின்று விடாமல், தமிழக அரசால் கடுமையான சட்டங்களின் கீழ் தடை செய்யப்பட்டு உள்ள குட்கா, ஹான்ஸ், சருதா, பான் மசாலா மற்றும் 'கூலி' போன்ற பல்வேறு ஆபத்தான போதை மற்றும் புகையிலைப் பொருட்களும் இந்தப் பெட்டிக் கடையில் தாராளமாக விற்பனை செய்யப்படும் செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 பள்ளி, கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் இந்தப் பகுதிக்கு வந்து எளிதில் போதைப் பொருட்களை வாங்கிச் செல்வது அப்பகுதி சமூக ஆர்வலர்களைக் கவலை அடையச் செய்து உள்ளது.

சமூக விரோதச் செயல்களுக்கு வழிவகுக்கும் இந்தச் சட்டவிரோத மது மற்றும் போதைப்பொருள் விற்பனை குறித்துப் பொதுமக்கள் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்து உள்ளன.

எனவே,  காவல்துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் உடனடியாகத் சித்திரா விமான நிலையம் அருகிலுள்ள அப்பெட்டிக் கடையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு, அங்கு நடக்கும் சட்டவிரோத விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

 "காவல் துறையின் உண்மையான வலிமை மக்கள் நம்பிக்கையில் தான் உள்ளது" - தமிழ்நாடு காவல் தினத்தில் கோவை மாநகரக் காவல் ஆணையர் நெகிழ்ச்சி உரை!

"காவல் துறையின் உண்மையான வலிமை மக்கள் நம்பிக்கையில் தான் உள்ளது" - தமிழ்நாடு காவல் தினத்தில் கோவை மாநகரக் காவல் ஆணையர் நெகிழ்ச்சி உரை!

சர் ராபர்ட் பீலின் கோட்பாடு, சைபர் குற்றங்கள் சவால் & காவல் குடும்பங்களின் தியாகம் குறித்து உருக்கமான வாழ்த்துச் செய்தி!

 மெட்ராஸ் மாவட்டக் காவல் சட்டம் அமலுக்கு வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளான இன்று (செப்டம்பர் 6) தமிழ்நாடு காவல் தினத்தைக் கொண்டாடும் வகையில், கோவை மாநகரக் காவல் ஆணையர் தனது நெகிழ்ச்சியான வாழ்த்துச் செய்தியையும், காவலர்களுக்குச் சிறப்பு வழிகாட்டுதல்களையும் வழங்கிச் சிறப்பித்து உள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாடு காவல் தினம்:

1859 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 அன்று அமலுக்கு வந்த மெட்ராஸ் மாவட்டக் காவல் சட்டம் (Madras District Police Act), நமது மாநிலத்தில் நவீன காவல் நிர்வாகத்தின் மிக முக்கிய வரலாற்று மைல்கல்லாக அமைந்தது.

​அந்த வரலாற்றுப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, இன்று தமிழ்நாடு காவல்துறை தொழில்நுட்பம், தொழில்முறை திறன் (Professionalism) மற்றும் மனிதநேயத்துடன் மக்களின் பாதுகாப்பிற்காகச் சிறப்பாகப் பணியாற்றி வருவதைச் சுட்டிக்காட்டிய காவல் ஆணையர், அதிகாரிகள், காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குத் தனது தமிழ்நாடு காவல் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

"காவல்துறை என்பது ஒரு வேலை அல்ல ; அது ஒரு சேவை!":

நவீன காவல் துறையின் தந்தை சர் ராபர்ட் பீலின் (Sir Robert Peel) பொன்மொழியை மேற்கோள் காட்டிப் பேசிய காவல் ஆணையர்:

​*"குற்றம் நடைபெற்ற பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, குற்றம் நடைபெறாமல் தடுப்பதே காவல் துறையின் முதன்மையான நோக்கமாகும். காவல் துறையின் உண்மையான வலிமை அதிகாரத்தில் இல்லை; மக்கள் நம் மீது வைத்து இருக்கும் நம்பிக்கையிலும் வழங்கும் ஒத்துழைப்பிலும் தான் உள்ளது.

காவல்துறை என்பது வெறும் வேலை அல்ல;

 அது ஒரு பொறுப்பு, ஒரு சேவை, ஒரு தியாகம். மக்கள் அச்சத்தில் இருக்கும் நேரத்தில் நம்மை நாடி வரும் போது அவர்களுக்குத் தேவையானது ஒரு பாதுகாப்பான கரம், நம்பிக்கையான வார்த்தை மற்றும் நேர்மையான நடவடிக்கை ஆகும். சட்டத்தை அமல்படுத்துவது மட்டுமல்ல, சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்குவதும் நமது கடமை"* எனக் குறிப்பிட்டார்.

பெண்கள் பாதுகாப்பு & நவீன சவால்கள்:

குறிப்பாகப் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்களின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய ஆணையர், தொழில்நுட்பம் வளர்ந்து வரும் சூழலில் சைபர் குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் போன்ற புதிய சவால்களை எதிர்கொள்ளக் காவல்துறை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

காவல் குடும்பங்களின் தியாகமும் தியாகிகள் நினைவும்:

இரவு பகலாகப் பணியாற்றும் ஒவ்வொரு காவலரின் பின்னாலும் இருக்கும் குடும்பங்களின் தியாகத்தை நன்றியுடன் நினைவுகூர்ந்த அவர், கடமையில் உயிர்நீத்த காவல் தியாகிகளுக்குத் தனது வீரவணக்கத்தையும் மரியாதையையும் செலுத்தினார்.

​கோவை மாநகரக் காவல்துறையைத் திறமையான, வெளிப்படையான, பொறுப்பான மற்றும் மக்கள் நட்பான (People-Friendly Police) காவல்துறையாக மேலும் உயர்த்த அனைத்துக் காவலர்களும் நேர்மை, ஒழுக்கம் மற்றும் மனிதநேயத்துடன் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் எனத் தனது உ உரையை நிறைவு செய்தார்.

சனி, 5 செப்டம்பர், 2026

 "மாநகர ஆணையருக்கு சல்யூட் அடித்த காவலரின் செல்லக் குழந்தை" ; கோவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

"மாநகர ஆணையருக்கு சல்யூட் அடித்த காவலரின் செல்லக் குழந்தை" ; கோவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

ஜி.ஆர்.டி பள்ளி அருகே 'சிங்கப்படை பிங்க் பூத்' திறப்பு விழா: இணையத்தில் வைரலாகும் அழகிய தருணம்!

 கோவை, அவிநாசி சாலையில் உள்ள ஜி.ஆர்.டி பள்ளி அருகே பெண்களின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட 'சிங்கப்படை பிங்க் பூத்' (Singappadai Pink Booth) திறப்பு விழாவின் போது, கோவை மாநகரக் காவல் ஆணையருக்குக் காவலர் ஒருவரின் பிஞ்சுக் பெண் குழந்தை கம்பீரமாகச் சல்யூட் அடித்த காட்சி அங்கு திரண்டு இருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

கோவை மாநகரில் பெண்கள், மாணவிகள் மற்றும் பணிக்குச் செல்லும் மகளிரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், முக்கியப் பகுதிகளில் மாநகரக் காவல் துறை சார்பில் 'சிங்கப்படை பிங்க் பூத்' மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி.ஆர்.டி பள்ளி அருகே புதிதாக அமைக்கப்பட்ட 'சிங்கப்படை பிங்க் பூத்' திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கோவை மாநகரக் காவல் ஆணையர் கலந்து கொண்டு புதிய பிங்க் பூத் மையத்தைத் திறந்து வைத்தார்.

நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பிஞ்சுக் பெண் குழந்தையின் சல்யூட்:

விழா நிகழ்வின் போது, அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த பெண் காவலர் ஒருவரின் சிறிய குழந்தை, சீருடையில் இருந்த கோவை மாநகரக் காவல் ஆணையரைக் கண்டதும், சிறிதும் தயக்கமின்றி மிடுக்காக நின்று அவருக்குத் தனது பிஞ்சுக் கரங்களால் கம்பீரமாகச் சல்யூட் (Salute) அடித்தது.

காவலரின் குழந்தையின் இந்த எதிர்பாராத மரியாதையைக் கண்டு நெகிழ்ந்து போன மாநகரக் காவல் ஆணையர், உடனடியாக அக்குழந்தையைப் சல்யூட் (Salute) அடித்தது. புன்னகையோடு மகிழ்ச்சியை கொண்டார்.

இந்த அழகிய மற்றும் உணர்ச்சிப் பூர்வமான தருணம் புகைப்படமாகவும் வீடியோவாகவும் சமூக வலைதளங்களில் பரவி, நெட்டிசன்களின் பாராட்டுகளைப் பெற்று மிக வேகமாக வைரலாகி வருகிறது.

தி.மு.க முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை !

தி.மு.க முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை !

சொத்துக் குவிப்பு வழக்கு மற்றும் முறைகேடு புகார்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

தலைநகர் சென்னையில் உள்ள அடையார் மற்றும் திருவான்மியூர் பகுதிகள், திருச்சி மற்றும் கோவை உள்ளிட்ட 10 இடங்களில் இந்த சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கோவையில் உள்ள TVH அடுக்குமாடி குடியிருப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த TVH நிறுவனத்தை கே.என்.நேருவின் சகோதரர் மணிவண்ணன் நடத்தி வரும் நிலையில், அங்கு முக்கிய ஆவணங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதேபோல, நேருவின் மற்றொரு சகோதரரான ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை விரிவுபடுத்தியுள்ளது.

காலை முதலே தொடரும் இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சோதனை நிறைவடையும் போது கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[9/5, 3:08 PM] ஞானம் மகன்: "கோவையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி" - திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீடுகள், டி.வி.எச் (TVH) அலுவலகத்தில் தீவிர சோதனை!

சென்னை, திருச்சி, கோவை என 19 இடங்களில் ரெய்டு: டெண்டர் முறைகேடு, சொத்துக் குவிப்பு புகார்களில் பாயும் லஞ்ச ஒழிப்புத்துறை!

 தி.மு.க மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்களின் வீடுகள், அலுவலகங்கள் என மாநிலம் முழுவதும் 19-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராகக் கே.என். நேரு பொறுப்பு வகித்த காலத்தில், பல்வேறு திட்டங்களுக்கான டெண்டர் ஒதுக்கீடு, ஆள் சேர்ப்பு மற்றும் அதிகாரிகள் இடமாற்றத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், ஒப்பந்ததாரர்களிடம் கட்சி நிதி மற்றும் கமிஷன் என்ற பெயரில் முறைகேடுகள் நடைபெற்றதாகச் சுமத்தப்பட்ட புகார்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, இன்று காலை 6 மணி முதல் திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேருவின் இல்லம், சென்னை அடையாறு, திருவான்மியூர், மயிலாப்பூர், ஆல்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் கோவை என மொத்தம் 19-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கி உள்ளனர்.

குறிப்பாக, கோவையில் உள்ள பிரபல டி.வி.எச் (TVH) அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் கட்டுமான நிறுவன அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த டி.வி.எச் நிறுவனத்தைக் கே.என். நேருவின் சகோதரர் மணிவண்ணன் நடத்தி வரும் நிலையில், இங்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குழுவாக வந்து சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

 நிறுவனத்தின் முக்கிய ஆவணங்கள், வங்கி நிதிப் பரிவர்த்தனைப் பதிவேடுகள் மற்றும் சொத்து ஆவணங்களைச் சரிபார்த்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல, கே.என். நேருவின் மற்றொரு சகோதரரான ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனை விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

காலை முதலே பரவலாக நடைபெற்று வரும் இந்தச் சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் சொத்து தொடர்பான கணிசமான சான்றுகள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 சோதனை நிறைவடையும் தருவாயில், கைப்பற்றப்பட்ட ரொக்கம் மற்றும் ஆவணங்கள் குறித்த முழு விவரங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரப் பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி, 4 செப்டம்பர், 2026

 "கோயிலுக்குள் மொபைல் தடைக்கு எதிர்ப்பு" ; சிவசேனா கட்சி கண்டனம் - அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும் என எச்சரிக்கை!

"கோயிலுக்குள் மொபைல் தடைக்கு எதிர்ப்பு" ; சிவசேனா கட்சி கண்டனம் - அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும் என எச்சரிக்கை!


"நாளை கோயிலுக்கு வராதீர்கள் என்பார்கள்": மேட்டூர் அணை திறப்புச் செலவுக்கும் திருமுருக தினேஷ் கடும் எதிர்ப்பு!

 கோயில்களுக்குள் ஸ்மார்ட்ஃபோன் கொண்டுவரத் தடை விதித்து உள்ள இந்து சமய அறநிலையத் துறையின் உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இதுபோன்ற கட்டுப்பாடுகளால் பக்தர்கள் கோயிலுக்கு வருவது பெருமளவு குறையும் என்றும் சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் திருமுருக தினேஷ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் திருமுருக தினேஷ் பேசுகையில்:

"இந்து சமய அறநிலையத் துறை கோயில்களுக்குள் ஸ்மார்ட்ஃபோன்களைக் கொண்டுவரக் கூடாது என அறிவித்துள்ளது ஏற்கத்தக்கதல்ல. மதுரை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்லக் கூடாது என்று கூறப்படவில்லை, மாறாகச் சமூக வலைதளங்களுக்காக 'ரீல்ஸ்' (Reels) மற்றும் புகைப்படங்கள் எடுப்பதை மட்டுமே தடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது.

ரீல்ஸ் எடுப்பதைத் தடுப்பதற்காகவே பிரத்யேக சிறப்பு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், உண்மை நிலை என்னவென்றால் அந்தச் சிறப்பு கண்காணிப்பாளர்களுக்குக் கூட அரசு முறைப்படி சரிவரச் சம்பளம் வழங்குவதில்லை" என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், *"தற்போது பெரும்பாலான கோயில்களில் நன்கொடை செலுத்துவது, அன்னதான நிதி வழங்குவது மற்றும் சிறப்பு பூஜைகளுக்கான கட்டணங்களை பக்தர்கள் தங்கள் ஸ்மார்ட்ஃபோன் மூலம் 'கியூ ஆர் கோட்' (QR Code) முறையிலேயே செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதை முற்றிலும் தடை செய்தால், பக்தர்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது தடைபட்டு அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருமான இழப்பு ஏற்படும். எனவே, செல்போன் தடையை அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்"* என வலியுறுத்தினார்.

"தமிழக அரசு மக்களுக்கு நல்லது செய்வதாகக் கூறிக் கொண்டு தொடர்ந்து பல்வேறு இடையூறுகளையே ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் மேட்டூர் அணையைத் திறப்பதற்குக் கூட மக்களின் வரிப்பணத்தை மிக ஆடம்பரமாகச் செலவு செய்து உள்ளனர். இதற்குச் சிவசேனா சார்பில் மாபெரும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  

ஏற்கனவே இருக்கும் திட்டங்களைக் கைவிட்டுவிட்டுப் புதிய திட்டங்களை அரசு கொண்டு வர வேண்டும். கோயில் ஊழியர்களுக்கு முறையான சம்பளத்தை முதலில் வழங்க வேண்டும். இன்று கோயிலுக்கு மொபைல் போன் கொண்டு வராதீர்கள் என்பவர்கள், நாளை கோயிலில் வசூல் இல்லை என்று கூறி கோயிலுக்கே வராதீர்கள் என்று சொல்லும் நிலை வந்து விடக் கூடாது" என எச்சரிக்கை விடுத்தார்.

வியாழன், 3 செப்டம்பர், 2026

 "தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படாததால் அபாயம்" ; கோவை சாய்பாபா கோயில் அருகே சேற்றில் சிக்கிய பேருந்து!

"தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படாததால் அபாயம்" ; கோவை சாய்பாபா கோயில் அருகே சேற்றில் சிக்கிய பேருந்து!

சூயஸ் குடிநீர்த் திட்டக் குழியால் தொடரும் விபத்துக்கள் : அதிகாரிகளின் அலட்சியத்திற்குப் பொதுமக்கள் கண்டனம்!

 கோவை, சாய்பாபா கோயில் பகுதியில் சூயஸ் குடிநீர்த் திட்டப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடப்படாததால், அவ்வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று திடீரெனச் சேற்றுக்குழியில் சிக்கித் தவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகரில் 24 மணி நேரக் குடிநீர் விநியோகத் திட்டத்திற்காகச் சூயஸ் நிறுவனம் சார்பில் பல்வேறு இடங்களில் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், சாய்பாபா கோயில் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர்க் குழாய் பதிப்பதற்காகச் சாலை தோண்டப்பட்டது.  

​பணிகள் முடிந்த பிறகும், தோண்டப்பட்ட குழி முறையான தரத்துடன் மூடப்படாமல் அரைகுறையாக மண் கொட்டி மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 இந்நிலையில், இன்று பயணிகளுடன் அவ்வழியாக வந்த அரசு பேருந்தின் முன்பக்க சக்கரம், எதிர்பாராத விதமாக அந்த அரைகுறை குழியில் இறங்கி ஆழமாகச் சிக்கிக் கொண்டது.  

பேருந்து திடீரென ஒருபக்கமாகச் சாய்ந்து குழிக்குள் சிக்கியதால், பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். 

 ஓட்டுநரின் சாதுரியத்தால் பேருந்து கவிழாமல் நின்றதால், பயணிகள் அனைவரும் எவ்வித காயமுமின்றிப் பத்திரமாகக் கீழே இறக்கப்பட்டனர்.  இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  

இது குறித்து அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் வேதனையுடன் தெரிவிக்கையில்:

"மாநகராட்சி மற்றும் சூயஸ் நிறுவன அதிகாரிகள் தோண்டப்படும் சாலைகளைப் உடனடியாகச் சீரமைப்பதில்லை. லேசான மழை பெய்தாலோ ? அல்லது வாகனங்கள் சென்றாலோ ? மண் உள்வாங்கிப் பெரிய குழி உருவாகிறது.  

​குறிப்பாகச் சாய்பாபா கோயில் போன்ற அதிகப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில், பல மாதங்களாக இந்த குழி சரிவர மூடப்படாமல் மண்ணை மட்டும் மூடி விட்டு அலட்சியமாக விடப்பட்டு உள்ளது.

 பெரிய விபத்து ஏதேனும் நடப்பதற்குள் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுச் சேதம் அடைந்த சாலைகளை முழுமையாகத் தார்ச் சாலையாகச் சீரமைக்க வேண்டும்"* எனக் கோரிக்கை விடுத்து உள்ளனர்.