கள்ளக் காதல் விவகாரத்தில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது...
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் குமார் என்ற மாரிமுத்து கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி கற்பகவள்ளி குமாரின் நண்பரான மற்றொரு கட்டிட தொழிலாளி கணேசன் என்பவருக்கும் குமாரின் மனைவி கற்பகவள்ளிக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த குமார் தகராறு செய்து மனைவியை கண்டித்தார். இதனால் கற்பகவள்ளி தனது இரண்டு குழந்தைகளையும் கணவரிடம் விட்டு விட்டு கள்ளக் காதலனுடன் சென்றார்.
பின்னர் அவர் தனது கள்ளக் காதலுடன் கோவை கருமத்தம்பட்டி அருகே சோளக்காட்டு பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். இதை அறிந்த குமார் கடந்த 2014 ம் ஆண்டு மனைவியை தேடி கருமத்தம்பட்டிக்கு சென்றார். அவர் தங்கி இருந்த வீட்டின் கதவை தட்டி உள்ளார். கதவை திறந்த கற்பகவள்ளி வெளியே வந்தார். அவரைப் பார்த்ததும் ஆத்திரத்தில் இருந்த குமார் அவர் மறைத்து வைத்து இருந்த கத்தியால் குத்தினார். இதில் அவர் அலறி துடித்தார். அந்த சத்தம் கேட்டு தடுக்க வந்த கணேசையும் குமார் கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த கற்பகவள்ளி கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கணேசன் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார்.
இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை 5 வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி சிவகுமார் குற்றம் சாட்டப்பட்ட குமாருக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 15,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

0 கருத்துகள்: