ஞாயிறு, 22 மார்ச், 2026

செம்மரக் கட்டைகள் கடத்தி சென்ற கார் விபத்து : வனத்துறையிடம் சிக்கிய 2 பேர் காயம் - தப்பி ஓடிய 3 பேர் தீவிரத் தேடுதலில் வனத்துறையினர் !!!

SHARE

 செம்மரக் கட்டைகள் கடத்தி சென்ற கார் விபத்து : வனத்துறையிடம் சிக்கிய 2 பேர் காயம் - தப்பி ஓடிய 3 பேர் தீவிரத் தேடுதலில் வனத்துறையினர் !!!

ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 500 கிலோ செம்மரக் கட்டைகளை தமிழக மற்றும் ஆந்திரா வனத்துறையினர் இணைந்து சினிமா பாணியில் விரட்டி பிடித்தனர்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதி அருகே இன்று காலை, ஆந்திரா வனத் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தமிழக பதிவு எண் கொண்ட ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்று உள்ளனர். ஆனால், ஆந்திரா வனத்துறையிடம் இருந்து தப்பிப்பதற்காக, அவர்கள் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்று உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் அதிவேகமாக சென்ற அந்த காரை துரத்தத் தொடங்கி உள்ளனர்.

இதற்கு இடையே, ஆந்திராவில் இருந்து தமிழக எல்லைக்குள் கார் நுழைந்ததைக் கண்ட வனத்துறையினர், உடனடியாக தமிழக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து உள்ளனர். உடனே உஷாரான தமிழக வனத்துறையினர், சம்பந்தப்பட்ட அந்த கார் வருவதைக் கண்ட உடன், பரதராமி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்த முயற்சி செய்து உள்ளனர். ஆனால், அந்த கார் அங்கு இருந்தும் தப்பிய நிலையில், குடியாத்தம் பகுதியை நோக்கி வேகமாக சென்றது. இதை அடுத்து, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா என இரு மாநில வனத்துறையினரும் இணைந்து சினிமா பாணியில் அந்த காரை துரத்தி சென்றனர்.

ஆனால், குடியாத்தம் அருகே பாக்கம் பகுதியில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த 5-ல் மூன்று பேர் தப்பிச் சென்ற நிலையில், படுகாயங்களுடன் கிடந்த 2 பேரை வனத்துறையினர் மீட்டனர். அதை அடுத்து காயம் அடைந்த அவர்களை சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு இடையே, விபத்துக்கு உள்ளான காரில் இருந்த சுமார் 500 கிலோ செம்மரக் கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பிச் சென்றவர்களை தேடும் பணியும் தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல, அவர்கள் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் ? யாருக்காக செம்மரக் கட்டைகளை கடத்திச் சென்றார்கள் ? பின்னணி என்ன ? என்ற முழுவிவரம் விசாரணைக்கு பிறகே தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும், கடத்தல்காரர்களை துரத்தி வந்த ஆந்திர வனத்துறையினரின் வாகனத்தை கவிழ்க்கும் நோக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் செம்மரக் கட்டைகளை சாலையில் வீசியதாக ஆந்திரா வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: