எல்.பி.ஜி வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை - கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிப்பு !!!
ஈரான் போர் காரணமாக இந்தியாவில் கடுமையான எல்.பி.ஜி தட்டுப்பாடு நிலவுகிறது. முதலில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்திய அரசு தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமான ஒரு எச்சரிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
ஈரானில் கிட்டதட்ட ஒரு மாத காலமாக போர் நீடிப்பதால் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு எல்.பி.ஜி மற்றும் கச்சா எண்ணெய் கொண்டு வரப்படவில்லை. இது இந்தியாவில் கடுமையான எல்.பி.ஜி தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறது. ஆங்காங்கே எல்.பி.ஜி கிடைக்காமல் உணவகங்கள் மூடப்பட்டு விட்டன. பல்வேறு உணவு வகைகள் மற்றும் டீ , காபி உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்து இருக்கிறது.
ஆட்டோக்கள், உற்பத்தி நிறுவனங்கள் என பல்வேறு இடங்களிலும் எல்.பி.ஜி கிடைக்காமல் ஏராளமானவர்கள் திண்டாடுகிறார்கள். இதற்கு இடையே மத்திய அரசு வீட்டு உபயோக பயன்பாட்டு சிலிண்டர் டெலிவரிக்கு தான் முன்னுரிமை கொடுத்து வருவதாக தெரிவித்து வருகிறது. பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம் நம் நாட்டில் போதுமான அளவு சிலிண்டர் இருப்பு இருக்கிறது என தெரிவித்து வருகிறது.
இந்த சூழலில் மிக முக்கியமான ஒரு அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. அதாவது இந்தியாவில் குழாய் வழி இயற்கை எரிவாயு எனப்படும் பி.என்.ஜி (piped natural gas - PNG) இணைப்புக்கு மாறுவதற்கான வசதி உள்ள இடங்களில் இருக்கக் கூடிய குடும்பங்கள் தங்களுடைய எல்.பி.ஜி இணைப்பை பி.என்.ஜி இணைப்புக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில் எங்கெல்லாம் பி.என்.ஜி இணைப்புக்கு மாறுவதற்கான வசதி இருக்கிறதோ அவர்கள் எல்லாம் அதற்கு கட்டாயம் மாற வேண்டும். அவ்வாறு மாறாமல் மறுக்கும் குடும்பங்களின் எல்.பி.ஜி இணைப்பை துண்டித்து விடுவோம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஒரே விதமான எரிபொருளை சார்ந்து இருப்பதை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
இதன்படி குழாய் வழி இயற்கை எரிவாயு அதாவது பி.என்.ஜி இணைப்புக்கு மாறுவதற்கான சாத்தியமும் வசதியும் உங்களுடைய வீட்டில் இருக்கிறது எனும் போது நீங்கள் அதற்கு கட்டாயம் மாற வேண்டும் . இல்லை எனக்கு எல்.பி.ஜி தான் வேண்டும் எனக் கூறினால் உங்களுடைய எல்பிஜி இணைப்பை நிறுத்தி விடுவார்கள். எல்.பி.ஜி தட்டுப்பாடு நீடிப்பதால் மத்திய அரசு இயன்ற அளவு வீட்டு பயன்பாட்டிற்கும் குழாய் வழி இயற்கை எரிவாயு விநியோகத்தை வழங்குவதற்கு முடிவு செய்து இருக்கிறது.

0 கருத்துகள்: