ஜனநாயகன்" படத்தைத் திருட்டுத்தனமாக வெளியிட்ட உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது : கோவை காவல்துறை அதிரடி !!!
ராசி டிவி-க்கு 'சீல்': கம்ப்யூட்டர், 5 ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் - டி.வி நிர்வாகி சிறையில் அடைப்பு !!!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள "ஜனநாயகன்" திரைப்படத்தை, தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கு முன்பே சட்டத்திற்குப் புறம்பாக வெளியிட்ட உள்ளூர் கேபிள் டிவி உரிமையாளரை கோவை மாவட்ட காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர்.
கருமத்தம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் "ராசி பிரைம் மூவி" என்ற சேனல் மீது எடுக்கப்பட்டு உள்ள இந்த 'நடவடிக்கை சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய தணிக்கை சான்றுக்காகக் காத்து இருக்கும் "ஜனநாயகன்" திரைப்படம், கடந்த 11-ம் தேதி இணையத்தில் சட்ட விரோதமாகப் பகிரப்பட்ட 'லிங்க்' (Link) மூலம் இந்த உள்ளூர் சேனலில் ஒளிபரப்பப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழக வெற்றி கழகத்தின் கோவை புறநகர் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் மோகனப்பிரியா அளித்த புகாரின் பேரில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின்படி இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.
விசாரணையில், கருமத்தம்பட்டி சோமனூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (44) என்பவர், தனது சேனலில் முறையான அனுமதியின்றி இப்படத்தை வெளியிட்டது உறுதி செய்யப்பட்டது.
இதை அடுத்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் பழனிச்சாமியைக் கைது செய்து நீதிமன்றகத்தில் ஆஜர்ப்பத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்தின் அலுவலகத்திற்கு அதிகாரிகள் 'சீல்' வைத்ததோடு, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் மற்றும் 5 ஹார்ட் டிஸ்க்குகளைப் பறிமுதல் செய்தனர்.

0 கருத்துகள்: