கோடை வெப்பத்தை தணிக்க தர்பூசணி - கோயில் யானை அபிராமி உண்டு மகிழ்ச்சி !!!
உலகப் புகழ்பெற்ற திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தின் சித்திரை பிரம்மோற்சவ தேர்த் திருவிழாவில், கோயில் யானை அபிராமி தர்ப்பூசணி பழம் சாப்பிட்டு கோடை வெப்பத்தை தணித்தது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள திருக்கடையூரில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ்பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. சிவபெருமான் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்ததால் அட்ட வீரட்ட தளங்கள் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இது தேவாரப் பாடல் பெற்ற தலமாகும்.
இந்த ஆலயத்தில் ஆயுள்விருத்தி வேண்டி ஆயூஷ் ஹோமம் செய்து 60 வயது முதல் வயதான தம்பதிகள் திருமணங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம். வருடம் 365 நாட்களும் திருமணங்கள் நடைபெறும் ஒரே தலம் இதுவாகும். இந்த ஆலயத்தின் வரலாற்றை விளக்கும் வகையில், ஆண்டுதோறும், சித்திரை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் எமன் சம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான 8-ஆம் நாள் திருவிழாவான நேற்று தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோவிலில் இருந்து அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி பஞ்ச மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
தேர், நான்கு மாட வீதிகளையும் சுற்றி வலம் வந்து நிலையை அடைந்தது. சிறுமி ஒருவர் அபிராமி அம்மன் வேடமணிந்து வந்தது அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. சுட்டெரிக்கும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் தேரிழுத்த பக்தர்களுக்கு, தேரோடும் நான்கு வீதிகளிலும் பொதுமக்கள் நீர் மோர், தர்பூசணி, குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம்கள் வழங்கப்பட்டன.
இக்கோவிலின் அடையாளமாகவும், மக்களின் செல்லப் பிள்ளையாகவும் திகழும் கோவில் யானை அபிராமி, விழாக்களில் முன்னே செல்வது வழக்கம். நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், தேரோட்டத்தின் போது முன்னே சென்ற யானை அபிராமிக்கு சிறப்பு பராமரிப்பாக தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டன. குளிர்ச்சியூட்டும் தர்பூசணியை யானை அபிராமி மிகுந்த மகிழ்ச்சியுடன் உண்ட காட்சி பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.
பக்தர்களுக்கு இணையாக யானைக்கும் கோடைக்கால சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டது. அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தர்பூசணியை யானை அபிராமி மிகுந்த மகிழ்ச்சியுடன் தும்பிக்கையால் எடுத்து உண்டது. இந்தக் காட்சியை அங்கிருந்த பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் ரசித்ததுடன், தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.

0 கருத்துகள்: