வாணியம்பாடியில் தேர்தலின் போது மோதல்: த.வெ.க வேட்பாளர், தி.மு.க வினர் மீது வழக்குப் பதிவு !!!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க வினருக்கும் த.வெ.க வினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, த.வெ.க வேட்பாளர் மற்றும் தி.மு.க வினர் மீது வாணியம்பாடி நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. ஒரு சில இடங்களில் சிறுசிறு அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அன்றைய தினம், வாணியம்பாடியில் த.வெ.க வினருக்கும், தி.மு.க வினருக்கும் மோதல் ஏற்பட்டது.
வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட நூருல்லா பேட்டையில் உள்ள இஸ்லாமிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த 114-வது எண் வாக்குப் பதிவு மையத்திற்கு தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சையத் புரஹானுத்தீன் வந்து இருந்தார். அவருடன் தவெக நிர்வாகிகளும் வந்து இருந்தனர்.
அப்போது, வாக்குப் பதிவு மையத்திற்குள் செல்வது தொடர்பாக, வாக்குப் பதிவு மையத்தின் நுழைவு வாயிலில் இருந்த திமுகவினருக்கும், தமிழக வெற்றிக் கழகத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இரு தருப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கலைந்து போகச் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றி கழகத்தின் நகர செயலாளர் ஷேக் அஸ்லம் கொடுத்த புகாரின் பேரில், வாணியம்பாடி தி.மு.க நகர துணை செயலாளர் தென்னரசு உட்பட 10 பேர் மீது வாணியம்பாடி நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
அதேபோல், த.வெ.க வினர் தன்னை சாதி பெயரை சொல்லி திட்டியதாக வாணியம்பாடி தி.மு.க நகர துணை செயலாளர் தென்னரசு, வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சையத் புரஹானுத்தீன், தவெக நகர செயலாளர் ஷேக் அஸ்லம், தவெக மத்திய நகர செயலாளர் அபிஷேக் உட்பட 20 பேர் மீது சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வாணியம்பாடி நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்: