சேதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சேதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 செப்டம்பர், 2026

அரசு அலுவலகங்களுக்குத் தொடர் வெடிகுண்டு மிரட்டல் ; அமெரிக்காவில் பணியாற்றிய நெல்லை என்ஜினீயர் கைது!

அரசு அலுவலகங்களுக்குத் தொடர் வெடிகுண்டு மிரட்டல் ; அமெரிக்காவில் பணியாற்றிய நெல்லை என்ஜினீயர் கைது!

விசாரணை முடிந்த பின் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைப்பு!

 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்குத் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த அமெரிக்காவில் பணியாற்றிய என்ஜினீயரைக் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை முடிந்த பின்பு சிறையில் அடைப்பு

கோவை மாநகரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம், முதன்மைத் தபால் நிலையம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்குக் கடந்த சில நாட்களாக மின்னஞ்சல் மூலமாகத் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன.

ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு மற்றும் மோப்ப நாய் படை போலீசார் அங்குச் சென்று தீவிர சோதனை மேற் கொண்ட போது, அது வெறும் போலி மிரட்டல் (Hoax Threat) என்பது தெரியவந்தது. இது குறித்துக் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மிரட்டல் விடுத்த மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இதே பாணியில் தமிழகம் முழுவதும் உள்ள பல முக்கிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இது தொடர்பாகச் சென்னை பெருநகர சைபர் கிரைம் போலீசார் தீவிர தொழில்நுட்ப விசாரணை மேற்கொண்டனர்.

அதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சரத் சுப்பிரமணியம் சங்கர் என்பதும், இவர் அமெரிக்காவில் மென்பொருள் என்ஜினீயராக (Software Engineer) பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

 இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து அண்மையில் சென்னை திரும்பிய சரத் சுப்பிரமணியம் சங்கரைச் சென்னை போலீசார் கையும், களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

கோவை மாநகரில் மட்டும் இவருக்கு எதிராகத் தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக 3 சைபர் கிரைம் வழக்குகள் நிலுவையில் இருந்தன.

இதனைத் தொடர்ந்து, சென்னைக்குச் சென்ற கோவை மாநகர சைபர் கிரைம் தனிப்படை போலீசார், சரத் சுப்பிரமணியம் சங்கரை முறைப்படி கைது செய்தனர். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, நீதிபதியின் உத்தரவின் பேரில் சென்னை மத்திய சிறையில் அடைத்தனர்.

 இச்சம்பவம் அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதன், 9 செப்டம்பர், 2026

"நள்ளிரவில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கிய தகரக் கொட்டகையை நொறுக்கிய ஒற்றை யானை" ; அலறி அடித்து ஓடி உயிர் தப்பிய தொழிலாளர்கள் - கோவையில் பரபரப்பு!

"நள்ளிரவில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கிய தகரக் கொட்டகையை நொறுக்கிய ஒற்றை யானை" ; அலறி அடித்து ஓடி உயிர் தப்பிய தொழிலாளர்கள் - கோவையில் பரபரப்பு!

2 மணி நேரம் போராடி வனத்துறையினர் விரட்டினர்: தொடரும் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அச்சம்!

 கோவை, துடியலூர் அருகே நள்ளிரவில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகையை உடைத்துச் சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை, வனக்கோட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று உணவு தேடி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது.

​கதிர் நாயக்கன்பாளையம் மற்றும் லட்சுமி நகர் (பேஸ் 3) ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்த அந்த யானை, அங்கு இருந்த ஒரு விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு மாடுகளுக்காகச் சேமித்து வைக்கப்பட்டு இருந்த பசுந்தீவனங்களைச் சாப்பிட்டதுடன், அங்கே குரைத்த நாய்களையும் ஆக்ரோஷமாகத் துரத்தியது.

இதனைத் தொடர்ந்து, நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் அருகில் உள்ள கட்டிடக் கட்டுமானப் பணிக்காக வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகையை நோக்கி அந்த ஒற்றை யானை நகர்ந்தது. கொட்டகையின் தகரங்களை உடைத்து நொறுக்கிய யானை, உள்ளே வைக்கப்பட்டு இருந்த அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுச் சேதப்படுத்தியது.

​யானை கொட்டகையைத் தாக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த வடமாநிலத் தொழிலாளர்கள், உயிருக்குப் பயந்து அலறி அடித்தபடி ஓடிச் சென்று அருகில் இருந்த மற்றொரு கட்டிடத்திற்குள் தஞ்சம் புகுந்து உயிர் தப்பினர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாகப் பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள், குடியிருப்புப் பகுதியில் நின்று இருந்த ஒற்றை யானையைக் பட்டாசுகள் வெடித்தும் மேளங்கள் அடித்தும் காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அதிகாலை வேளையில் யானை மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது.

கதிர் நாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளான மணி நகர், கணபதி நகர், கணபதி கார்டன், போஸ்டல் காலனி, ஆர்.வி.நகர், பூச்சியூர், வெற்றிவேலவா நகர், ரேணுகாபுரம் மற்றும் லட்சுமி நகர் ஆகிய இடங்களில் இந்த ஒற்றை யானையின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவில் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

​அதேவேளையில், இரவில் இப்பகுதிகளில் அடிக்கடி அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டு ஏற்படுவதால், இருளில் யானை வருகையைக் கண்காணிக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த பீதியில் உறைந்து உள்ளனர். எனவே, மின்வாரியமும் வனத்துறையும் இணைந்து தகுந்த நடவடிக்கை எடுத்து, அப்பகுதியில் தெருவிளக்குகள் தடையில்லாமல் எரிய வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 "பள்ளி கட்டிடம் முடிகிறதுக்கு முன்னாடியே வகுப்புகளா ?" - மாணவி தலையில் விழுந்த 'பால் சீலிங்': பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தால் கோவையில் பரபரப்பு!

"பள்ளி கட்டிடம் முடிகிறதுக்கு முன்னாடியே வகுப்புகளா ?" - மாணவி தலையில் விழுந்த 'பால் சீலிங்': பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தால் கோவையில் பரபரப்பு!

உரிய சான்றிதழ் இல்லாமல் இயங்கிய டேக் அக்ஷயா அகாடமி சி.பி.எஸ்.சி பள்ளி - பெற்றோர் முற்றுகையால் பரபரப்பு!

 கோவை, துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள தனியார் சி.பி.எஸ்.சி பள்ளியில், பணிகள் நிறைவடையாத புதிய கட்டிடத்தில் மாணவியை அமர வைத்ததில் 'பால் சீலிங்' (False Ceiling) பெயர்ந்து தலையில் விழுந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

 இதைக் கண்டித்து நூற்றுக் கணக்கான பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை, துடியலூர் அடுத்த பன்னீர்மடை பகுதியில் பிரபல ‘டேக் அக்ஷயா அகாடமி’ (TAG Akshaya Academy) சி.பி.எஸ்.சி பள்ளி இயங்கி வருகிறது. கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்குப் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது இயங்கி வரும் பள்ளி வளாகத்தின் அருகே சுமார் 30,000 சதுர அடியில், 3 தளங்களுடன் கூடிய புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. நீரோடைப் பள்ளத்தின் ஓரத்தில், சுற்றுச்சுவர் கூட முழுமையாகக் கட்டப்படாத இந்த புதிய கட்டிடத்தில், விஜயதசமி சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் கேஜி மாணவர்களை அமர வைத்து வகுப்புகள் நடத்தப்பட்டு உள்ளன.

இதைக் கண்டித்துப் கடந்த வாரம் பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, பழைய கட்டிடத்திற்கு மாணவர்களை மாற்றுவதாகவும் 3 நாட்களில் பணிகளை முடிப்பதாகவும் நிர்வாகம் உறுதி அளித்தது. ஆனால், பணிகள் முடியாத நிலையிலேயே மீண்டும் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களை அந்த ஆபத்தான புதிய கட்டிடத்திற்கு மாற்றி உள்ளனர்.

இந்நிலையில், நேற்று புதிய கட்டிடத்தில் கழிவறைக்குச் சென்ற மாணவி ஒருவரின் தலையில், மேல் இருந்த பால் சீலிங் (False Ceiling) திடீரென கழன்று விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அம்மாணவி காயமின்றித் தப்பினார்.

இந்தத் தகவல் பரவியதும் ஆத்திரம் அடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள், இன்று காலை பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு முதன்மை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, பெற்றோர்கள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியதால் நிர்வாகத்தினர் பதிலளிக்க முடியாமல் திணறினர்.

கட்டிட அனுமதி (Building Approval) மற்றும் பணி நிறைவு சான்றிதழ் (Completion Certificate) பெறாமலேயே மாணவர்களை ஆபத்தான கட்டிடத்தில் அமர வைத்து உள்ளனர்.

வகுப்பறைகளில் உடையும் நிலையில் உள்ள டைல்ஸ்கள், இயங்காத மின்விசிறிகள் மற்றும் சிமெண்ட் தூசியால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படுகிறது.

முழு கட்டிடத்திற்கும் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளதால், நீண்ட வரிசையில் நின்று மதிய உணவைக் கூடச் சாப்பிட முடியாமல் குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.

ஆய்வகம் (Lab), கணினி மையம், நூலகம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. ஆனால் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்திக் கொண்டே செல்கின்றனர்.

தட்டிக் கேட்டால் 'டிசி' (TC) வாங்கிக் கொண்டு வெளியேறுங்கள் எனப் பள்ளி நிர்வாகம் மிரட்டுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தடாகம் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி தலைமையிலான போலீசார், பெற்றோர்களுடன் இணைந்து புதிய கட்டிட நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் பள்ளி நிர்வாகத்திடம், "அனைத்துப் பணிகளையும் 10 நாட்களுக்குள் முழுமையாக முடித்து, முறையான பணி நிறைவுச் சான்றிதழ் பெற்ற பின்னரே புதிய கட்டிடத்தில் வகுப்புகளைத் தொடங்க வேண்டும். அதுவரை பழைய கட்டிடத்திலேயே மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த வேண்டும்" என உத்தரவிட்டார்.

காவல்துறையின் இந்த உறுதியான நடவடிக்கையைத் தொடர்ந்து பெற்றோர்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

 இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் பெரும் பரபரப்பு நிலவியது.

வெள்ளி, 4 செப்டம்பர், 2026

 "வெயிலின் கொடுமையால் குட்டையில் இறங்கிய யானைகள்" ; நீராடி மகிழ்ந்த காட்டு யானைகள் - வீடியோ வைரல்!

"வெயிலின் கொடுமையால் குட்டையில் இறங்கிய யானைகள்" ; நீராடி மகிழ்ந்த காட்டு யானைகள் - வீடியோ வைரல்!

பயிர்களைச் சேதப்படுத்திச் சென்றதால் விவசாயிகள் கவலை: வனப்பகுதிக்குள் விரட்டப் பொதுமக்கள் கோரிக்கை!

 கோவை மாவட்டம், காரமடை அருகே நிலவும் கடும் வறட்சி மற்றும் வெயிலின் தாக்கத்தைத் தணிப்பதற்காக, இரு காட்டு யானைகள் குட்டையில் நீண்ட நேரம் நீராடி மகிழ்ந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கோவை மாவட்டம், காரமடையை அடுத்து உள்ள வெள்ளியங்காடு பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள், சிறுத்தைகள், கரடிகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

நடப்பு தென்மேற்குப் பருவமழை கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொய்த்துப் போனதால், வனப்பகுதிக்குள் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, தண்ணீருக்காகவும் உணவிற்காகவும் வனவிலங்குகள் அடிக்கடி அருகில் உள்ள கிராமப்புறங்களுக்குள் ஊடுருவி வருகின்றன.

இந்நிலையில், நேற்று காரமடை வனச்சரகப் பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள், வெள்ளியங்காடு பகுதியில் உள்ள குட்டைக்கு வந்து உள்ளன. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், அந்த யானைகள் குட்டை நீருக்குள் இறங்கி நீண்ட நேரமாகக் குளித்து மகிழ்ந்து உள்ளன.

இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், யானைகளை அங்கு இருந்து விரட்டுவதற்காகச் சப்தமிட்டனர். சப்தம் கேட்டு மெதுவாகக் குட்டையிலிருந்து வெளியேறிய இரு யானைகளும், அருகில் இருந்த விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்திய பின்னரே மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றன.

காட்டு யானைகள் குட்டையில் இறங்கி நீராடிய இந்த அரிதான காட்சியை அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவிட்டு இணையத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இருப்பினும், கிராமப் பகுதிகளுக்கு மிக அருகிலேயே உள்ள குட்டையில் யானைகள் நீண்ட நேரம் முகாமிட்டு இருந்ததால் வெள்ளியங்காடு பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உறைந்து உள்ளனர். எனவே, வனவிலங்குகள் வன எல்லையைத் தாண்டி ஊருக்குள் வராதவாறு வனத்துறையினர் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வியாழன், 3 செப்டம்பர், 2026

 "தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படாததால் அபாயம்" ; கோவை சாய்பாபா கோயில் அருகே சேற்றில் சிக்கிய பேருந்து!

"தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படாததால் அபாயம்" ; கோவை சாய்பாபா கோயில் அருகே சேற்றில் சிக்கிய பேருந்து!

சூயஸ் குடிநீர்த் திட்டக் குழியால் தொடரும் விபத்துக்கள் : அதிகாரிகளின் அலட்சியத்திற்குப் பொதுமக்கள் கண்டனம்!

 கோவை, சாய்பாபா கோயில் பகுதியில் சூயஸ் குடிநீர்த் திட்டப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடப்படாததால், அவ்வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று திடீரெனச் சேற்றுக்குழியில் சிக்கித் தவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகரில் 24 மணி நேரக் குடிநீர் விநியோகத் திட்டத்திற்காகச் சூயஸ் நிறுவனம் சார்பில் பல்வேறு இடங்களில் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், சாய்பாபா கோயில் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர்க் குழாய் பதிப்பதற்காகச் சாலை தோண்டப்பட்டது.  

​பணிகள் முடிந்த பிறகும், தோண்டப்பட்ட குழி முறையான தரத்துடன் மூடப்படாமல் அரைகுறையாக மண் கொட்டி மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 இந்நிலையில், இன்று பயணிகளுடன் அவ்வழியாக வந்த அரசு பேருந்தின் முன்பக்க சக்கரம், எதிர்பாராத விதமாக அந்த அரைகுறை குழியில் இறங்கி ஆழமாகச் சிக்கிக் கொண்டது.  

பேருந்து திடீரென ஒருபக்கமாகச் சாய்ந்து குழிக்குள் சிக்கியதால், பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். 

 ஓட்டுநரின் சாதுரியத்தால் பேருந்து கவிழாமல் நின்றதால், பயணிகள் அனைவரும் எவ்வித காயமுமின்றிப் பத்திரமாகக் கீழே இறக்கப்பட்டனர்.  இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  

இது குறித்து அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் வேதனையுடன் தெரிவிக்கையில்:

"மாநகராட்சி மற்றும் சூயஸ் நிறுவன அதிகாரிகள் தோண்டப்படும் சாலைகளைப் உடனடியாகச் சீரமைப்பதில்லை. லேசான மழை பெய்தாலோ ? அல்லது வாகனங்கள் சென்றாலோ ? மண் உள்வாங்கிப் பெரிய குழி உருவாகிறது.  

​குறிப்பாகச் சாய்பாபா கோயில் போன்ற அதிகப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில், பல மாதங்களாக இந்த குழி சரிவர மூடப்படாமல் மண்ணை மட்டும் மூடி விட்டு அலட்சியமாக விடப்பட்டு உள்ளது.

 பெரிய விபத்து ஏதேனும் நடப்பதற்குள் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுச் சேதம் அடைந்த சாலைகளை முழுமையாகத் தார்ச் சாலையாகச் சீரமைக்க வேண்டும்"* எனக் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 "ஆட்சியர், கமிஷனர் அலுவலகங்கள் அருகேயே இந்த நிலையா ?" - வாரக்கணக்கில் பழுதடைந்து தொங்கும் கண்காணிப்பு கேமராக்கள்!

"ஆட்சியர், கமிஷனர் அலுவலகங்கள் அருகேயே இந்த நிலையா ?" - வாரக்கணக்கில் பழுதடைந்து தொங்கும் கண்காணிப்பு கேமராக்கள்!

பாதுகாப்பான பகுதியிலே  கேமராக்கள் செயலிழப்பு : உடனே சீரமைக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!


 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் அமைந்துள்ள மிக முக்கியமான மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு அருகிலேயே, அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகப் பழுதடைந்து பயன்பாடின்றி தொங்கிக் கொண்டு இருப்பது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகரின் இதயமாகவும், மிக முக்கிய நிர்வாக மையங்களாகவும் விளங்குபவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகரக் காவல் ஆணையர் அலுவலக வளாகங்கள் ஆகும். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் வந்து செல்லும் இந்தப் பகுதியிலும், அதனைச் சுற்றி உள்ள சாலைகளிலும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்காகக் காவல் துறையின் சார்பில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில், இவ்விரு முக்கிய அலுவலகங்களின் மிக அருகிலேயே பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் சில, கடந்த ஒரு வார காலமாக ஒயர்கள் அறுந்தும், திருப்பப்பட்ட நிலையிலும் முற்றிலும் பயனற்றுத் தொங்கிக் கொண்டு இருக்கின்றன.

​குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், போக்குவரத்தைக் கண்காணிக்கவும், விபத்துக்கள் அல்லது அசம்பாவிதங்கள் நடக்கும் போது துப்புதுலக்கவும் மிகவும் உதவிகரமாக இருக்கும் இந்த கேமராக்கள், பாதுகாப்பு மண்டலத்திலேயே பராமரிப்பின்றிச் செயலிழந்து கிடப்பது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்து உள்ளது.

மாநகரின் பிற பகுதிகளில் வழிப்பறி, நகைப் பறிப்பு மற்றும் திருட்டுச் சம்பவங்கள் நடக்கும் போது, சி.சி.டி.வி காட்சிகளை வைதே காவல் துறையினர் குற்றவாளிகளைக் விரைந்து தூக்கி வருகின்றனர். ஆனால், காவல் ஆணையர் அலுவலகத்தின் முன்பு சி.சி.டி.வி கேமராக்கள் இப்படிப் பழுதடைந்து கிடப்பது குற்றவாளிகளுக்குச் சாதகமாக அமைந்துவிடும் எனப் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.


​எனவே, கோவை மாநகரக் காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, பழுதடைந்து தொங்கிக் கொண்டு இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை விரைந்து சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

புதன், 2 செப்டம்பர், 2026

 "மலேசிய சுற்றுலாப் பயணிகள் மீது அரிவாள் வெட்டு... துப்பாக்கி முனையில் மிரட்டல்" ; கோவையில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்!

"மலேசிய சுற்றுலாப் பயணிகள் மீது அரிவாள் வெட்டு... துப்பாக்கி முனையில் மிரட்டல்" ; கோவையில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்!

5 தனிப்படைகள் அமைத்து எஸ்.பி பவன்குமார் தீவிர தேடுதல் வேட்டை: மாவட்ட எல்லைகளில் பலத்த சோதனைகள்!

 கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில், மலேசியாவில் இருந்து வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீது மர்ம நபர்கள் அரிவாளால் வெறித்தனமாகத் தாக்குதல் நடத்தி, துப்பாக்கி முனையில் மிரட்டித் தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மலேசிய நாட்டில் இருந்து தமிழகம் மற்றும் கேரளாவிற்குச் சுற்றுப் பயணமாக 10 பேர் கொண்ட பயணிகள் குழுவினர் 'ஃபோர்ஸ் அர்பானியா' (Force Urbania) வாடகை வேன் மூலம் கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

​கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில் உள்ள கே.ஜி. சாவடி அடுத்த நவக்கரை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேனுக்கு எரினாயில் நிரப்ப ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தினார். அப்போது வேனில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் சிலர் அங்கு இருந்த கழிவறைக்குச் சென்ற போது, அங்கு நின்று இருந்த இரு நபர்களுடன் எதிர்பாராத விதமாக வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

வாக்குவாதம் முற்றவே, இருசக்கர வாகனத்தில் வந்த அந்த இரு மர்ம நபர்கள், ஆத்திரம் அடைந்து 10 மலேசியச் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து இருந்த 'ஃபோர்ஸ் அர்பானியா' வாகனத்திற்கு உள்ளேயே அதிரடியாகப் புகுந்து, தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

​இந்தக் கொடூரத் தாக்குதலில் மலேசியச் சுற்றுலாப் பயணியான லோகநாதன் மற்றும் அவரது மகனான யுகேந்திரன் ஆகிய இருவருக்கும் வயிறு மற்றும் தோள்பட்டை பகுதிகளில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

தாக்குதல் நடத்திய பின், மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பினர். அஞ்சிய ஓட்டுநர் காயம் அடைந்தவர்களுடன் வேனை மதுக்கரை நோக்கி விரைவாகச் செலுத்தினார். ஆனால், விடாமல் பின்தொடர்ந்து துரத்தி வந்த அந்த மர்ம நபர்கள், மதுக்கரை மார்க்கெட் பகுதியில் வைத்து வேன் ஓட்டுநரைச் சூழ்ந்து கத்தி மற்றும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி உள்ளனர்.

​பதற்றமடைந்த ஓட்டுநர் சாலையோரமாக இருந்த பள்ளத்தில் சிக்கி வாகனத்தை நிறுத்தவே, அப்பகுதி பொதுமக்கள் பெருமளவில் கூடினர்.

 பொதுமக்கள் திரள்வதைக் கண்ட அந்த மர்ம நபர்கள் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

ரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடிய லோகநாதன் மற்றும் யுகேந்திரன் ஆகிய இருவரையும் பொதுமக்கள் உடனடியாக மீட்டு, மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுக்கரை காவல்துறையினர் சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளைக் கைப்பற்றி, சாட்சிகளிடம் விசாரணை நடத்தினர்.

​சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்ற கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) பவன்குமார், கள ஆய்வு மேற்கொண்டு மதுக்கரை காவல் நிலையத்தில் தீவிர விசாரணை நடத்தினார்.

 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீது அரிவாள் தாக்குதல் நடத்தி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டித் தப்பியோடிய அந்த இரு மர்ம நபர்களையும் பிடிப்பதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

 கோவை மாவட்ட எல்லைப் பகுதிகள் முழுவதிலும் பலத்த வாகனத் தணிக்கை முடுக்கி விடப்பட்டு உள்ளது.

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

 "எதிர்காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்" ; தடையோட்டப் பயிற்சியுடன் கோவையில் கோலாகலமாகத் தொடங்கியது SSVM 5-வது ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா மாநாடு!

"எதிர்காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்" ; தடையோட்டப் பயிற்சியுடன் கோவையில் கோலாகலமாகத் தொடங்கியது SSVM 5-வது ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா மாநாடு!

விண்வெளி வீரர் பிரசாந்த் நாயர், அபினவ் பிந்த்ரா பங்கேற்பு: மாணவர்களுடன் சவால்களை எதிர்கொள்ளும் அனுபவப் பயணம்!

 எதிர்காலத்தின் சவால்களை மாணவர்கள் மன உறுதியுடன் எதிர்கொள்ளும் வகையில், கோவை SSVM கல்வி நிறுவனங்கள் நடத்தும் 3 நாள் 'ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா' (Transforming India) 5-வது மாநாடு மாணவர்களுக்கான 'தடை ஓட்டப் பயிற்சியுடன்' (Obstacle Course) இன்று உற்சாகமாகத் தொடங்கியது.

உற்சாகமான தடையோட்டப் பயிற்சி:

"எதிர்காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்" (Adapt to the Future) என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டு உள்ள இம்மாநாட்டின் முதல் நாளில், SSVM வேர்ல்ட் ஸ்கூல் மாணவர்கள் பங்கேற்ற 'ஸ்டூடண்ட் பர்ஸ்ட் ஆப்ஸ்டக்கிள் கோர்ஸ்' எனப்படும் சவாலான தடையோட்டப் பயிற்சி நடத்தப்பட்டது.

வெறும் சொற்பொழிவுகளுடன் தொடங்காமல், மாணவர்கள் தங்களது உடல் மற்றும் மன வலிமையைச் சோதிக்கும் வகையில் வளைந்து கொடுத்தும், கம்பிகளைப் பிடித்துத் தொங்கியும் (Monkey bar), தடைகளைத் தாண்டித் தங்களைச் சமன் செய்தும் இந்தப் பயிற்சியில் அசத்தினர்.

 ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக் கொண்டு மாணவர்கள் முன்னேறிய இந்த நிகழ்வு, தைரியம் மற்றும் தன்னம்பிக்கையின் நேரடிப் பாடமாக அமைந்தது.

நிர்வாகக் குழுவினரும் பங்கேற்பு:

SSVM கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர். மணிமேகலை மோகன் கொடியசைத்துத் தொடங்கி வைத்த இந்த நிகழ்வில், அறங்காவலர் எஸ். மோகன்தாஸ், இயக்குனர் ஸ்ரீஷா மோகன்தாஸ், இயக்குனர் நிதின் ஜெய் மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து தடையோட்டச் சவால்களில் பங்கேற்று ஊக்கமளித்தனர்.

இது குறித்து டாக்டர். மணிமேகலை மோகன் பேசுகையில் :-

 "குழந்தைகள் தங்களின் எல்லைகளைத் தாண்டிச் செயல்படுவதை அனுபவபூர்வமாக உணர வேண்டும் என்பதே இதன் நோக்கம். இன்று சவால்களை எப்படித் தாண்டுவது என்று குழந்தைகள் கற்றுக்கொண்டால், நாளை வாழ்க்கை தரும் சவால்களை அவர்கள் வெற்றிகரமாக எதிர்கொள்வார்கள்" எனத் தெரிவித்தார்.

கல்வி இயக்குனர் ஸ்ரீஷா மோகன்தாஸ் கூறுகையில் :-

"இது வெறும் தலைப்பு அல்ல; கடினமான சூழ்நிலைகளில் மன உறுதியோடு தொடர்ந்து முன்னேறும் தைரியத்தைக் கண்டறியும் வாய்ப்பு" என்றார்.

சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு:

செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில் 1,800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், ககன்யான் விண்வெளி வீரர் மற்றும் இந்தியப் படைப்பிரிவு அதிகாரி ஏர் கமாண்டோர் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர்

ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா

இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்

பிரபல பரதநாட்டியக் கலைஞர் மற்றும் நடன இயக்குநர் ருக்மணி விஜயகுமார்

ஆகிய சாதனையாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர். விளையாட்டு, உடல் அசைவுகள், ஒழுக்கம் மற்றும் மன உறுதி ஆகியவற்றை மாணவர்கள் நேரடியாக அனுபவபூர்வமாக உணரும் வகையில் இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

"இளம் பெண்களுக்கு இணையாக மேடையில் ஒய்யார நடை" ; கோவையில் சிந்தி சமூக பெண்களின் 'தீஜ் 2026' ஃபேஷன் ஷோ கலக்கல்!

"இளம் பெண்களுக்கு இணையாக மேடையில் ஒய்யார நடை" ; கோவையில் சிந்தி சமூக பெண்களின் 'தீஜ் 2026' ஃபேஷன் ஷோ கலக்கல்!

ரெட்ரோ டூ மெட்ரோ' தீமில் அசத்திய பாட்டிகள் & இளம் பெண்கள்: ஆர்.எஸ்.புரத்தில் உற்சாகமாகக் கொண்டாட்டம்!

​ கோவையில் நடைபெற்ற 'தீஜ் 2026' விழாவின் முக்கிய நிகழ்வாக அமைந்த ஃபேஷன் ஷோவில், 'ரெட்ரோ டூ மெட்ரோ' (Retro to Metro) எனும் தலைப்பில் இளம் பெண்களுக்கு இணையாக வயதான பெண்களும் மேடையில் ஒய்யார நடை நடந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

​சிந்தி சமூக பெண்களின் 'தீஜ் 2026' விழா:

தமிழகத்தில் பெண்களால் வரலட்சுமி விரதப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுவதைப் போல, சிந்தி சமூகப் பெண்களின் பாரம்பரிய சிறப்பு மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் ‘தீஜ் 2026’ (Teej 2026) திருவிழா கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மிகவும் உற்சாகமாக நடைபெற்றது.

​இந்த விழாவில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சிந்தி சமூகப் பெண்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

​'ரெட்ரோ டூ மெட்ரோ' ஃபேஷன் ஷோ கலக்கல்:

விழாவின் உச்சகட்ட அம்சமாக, சிந்தி சமூக பாரம்பரிய கலாச்சாரத்தைப் போற்றும் வகையிலும் பெண்களின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையிலும் 'ரெட்ரோ டூ மெட்ரோ' என்ற சிறப்பு ஃபேஷன் ஷோ நடைபெற்றது.

​இதில் பழங்கால ஆடை அலங்காரம், பாரம்பரிய அணிகலன்கள் மற்றும் ரெட்ரோ காலத் தோற்றத்தை வெளிப்படுத்திய ‘ரெட்ரோ சுற்றும்’ (Retro Round), இன்றைய நவீன பெண்களின் ஸ்டைல் மற்றும் தன்னம்பிக்கையை பறைசாற்றிய ‘மெட்ரோ சுற்றும்’ (Metro Round) பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

​வயது தடையில்லை என நிரூபித்த பாட்டிகள்:

இந்த ஆடை வடிவமைப்புக் கண்காட்சிப் போட்டியில், இளம் பெண்களுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், வயதான பெண்களும் மிகுந்த உற்சாகத்துடன் மேடையில் தோன்றி ஒய்யார நடை (Ramp Walk) நடந்து அசத்தினர்.

​"வயது என்பது தன்னம்பிக்கைக்கும் திறமைக்கும் ஒருபோதும் தடையில்லை" என்பதை உணர்த்தும் வகையில், அனைத்து வயதுப் பெண்களும் ஒரே மேடையில் ஒன்று கூடித் தங்களது திறமையை வெளிப்படுத்தியது இவ்விழாவின் மிக முக்கியச் சிறப்பம்சமாக அமைந்தது.

சனி, 29 ஆகஸ்ட், 2026

"நவ இந்தியாவில் அடுத்தடுத்து  7 சிலிண்டர்கள்" வெடித்து சிதறிய காட்சிகள் - 40 தகரக் கொட்டகைகள் தீக்கிரை: கோவையில் பயங்கர விபத்து!

"நவ இந்தியாவில் அடுத்தடுத்து 7 சிலிண்டர்கள்" வெடித்து சிதறிய காட்சிகள் - 40 தகரக் கொட்டகைகள் தீக்கிரை: கோவையில் பயங்கர விபத்து!

 "நவ இந்தியாவில் அடுத்தடுத்து  7 சிலிண்டர்கள்" வெடித்து சிதறிய காட்சிகள் - 40 தகரக் கொட்டகைகள் தீக்கிரை: கோவையில் பயங்கர விபத்து!

500 வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி இருந்த பகுதியில் கொழுந்து விட்டு எரிந்த தீ: நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்ப்பு!

 கோவை, நவ இந்தியா பகுதியில் வடமாநிலக் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கி இருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கோவை, நவ இந்தியா பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றின் சார்பில் 40-க்கும் மேற்பட்ட தகரக் கொட்டகைகள் அமைக்கப்பட்டு, அதில் 500-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கிப் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தொழிலாளர்கள் வழக்கம் போல் பணிக்குச் சென்று இருந்த நேரத்தில், ஒரு கொட்டகையில் வைக்கப்பட்டு இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்துச் சிதறியது.

 இந்தத் தீ கணநேரத்தில் அடுத்தடுத்த கொட்டகைகளுக்கும் பரவியதால், அங்கு வைக்கப்பட்டு இருந்த மேலும் 6 சிலிண்டர்கள் வரிசையாக வெடித்துச் சிதறின.

மொத்தம் 7 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்துத் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அப்பகுதி முழுதும் அடர்ந்த புக மண்டலமாகக் காட்சி அளித்தது.

தகவல் அறிந்தவுடன் பீளமேடு மற்றும் கோவை தெற்கு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 4 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 

தகரக் கொட்டகைகளை உடைத்து, பல மணி நேரம் போராட்டத்திற்குப் பின் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விபத்து நடந்த நேரத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்குச் சென்று இருந்ததாலும், அங்கு இருந்த சிலர் உடனடியாக வெளியேறியதாலும் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித உயிர்ச்சேதமும் அல்லது காயமும் ஏற்படவில்லை என காவல் துறையினரும் தீயணைப்புத் துறையினரும் உறுதிப்படுத்தி உள்ளனர்.

ஒரே நேரத்தில் 7 சிலிண்டர்கள் வெடித்துத் தகரக் கொட்டகைகள் முற்றிலும் தீக்கிரையான இந்தச் சம்பவம் கோவை நகர்ப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

 "காம்பவுண்ட் கதவை உடைத்த ஒற்றை யானை"; நள்ளிரவில் வாழைச் செடியை பிடுங்கி சென்று அட்ராசிட்டி:வைரலாகும் சி.சி.டி.வி!

"காம்பவுண்ட் கதவை உடைத்த ஒற்றை யானை"; நள்ளிரவில் வாழைச் செடியை பிடுங்கி சென்று அட்ராசிட்டி:வைரலாகும் சி.சி.டி.வி!

 "காம்பவுண்ட் கதவை உடைத்த ஒற்றை யானை"; நள்ளிரவில் வாழைச் செடியை பிடுங்கி சென்று அட்ராசிட்டி:வைரலாகும் சி.சி.டி.வி!

வாழை மரத்தைச் சேதப்படுத்தி விட்டுத் தப்பியோட்டம்: அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் வலியுறுத்தல்!

 கோவை, துடியலூர் அருகே கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி ஊருக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, வீட்டின் காம்பவுண்ட் கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்ற சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கதவை உடைத்து வீட்டின்ள் நுழைய முயற்சி:


கோவை, துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில், கடந்த சில நாட்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காகக் குடியிருப்புப் பகுதிகளுக்குள் உலா வருவது தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று கதிர் நாயக்கன்பாளையம் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தது. அங்கு இருந்த வீடொன்றின் காம்பவுண்ட் சுவரின் இரும்பு கதவை தனது பலத்தால் உடைத்து, வீட்டு வளாகத்திற்குள் நுழைய முயன்று உள்ளது.

கதவை உடைத்த பிறகு உள்ளே நுழைய முயன்றது. வீட்டின் அருகே நின்று இருந்த வாழை மரத்தைப் பிடுங்கிச் சேதப்படுத்தியதுடன், அதன் இலைகளைத் தின்று பசியாறியது.

 பின்னர் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர்கள் விழித்துக் கொண்டதை உணர்ந்த யானை, மெதுவாக அங்கு இருந்து நகர்ந்து சென்றது.

யானை காம்பவுண்ட் கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைய முயன்ற சம்பவம் பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

யானை நடந்து செல்லும் காட்சி அங்குப் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகளைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ள அப்பகுதி பொதுமக்கள், இரவில் வீட்டை விட்டு வெளியே வரும் போது அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

மேலும் வனத் துறையினரின் இந்த காட்டு யானை அடர்ந்த வனப்பகுதிக்கும் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

புதன், 26 ஆகஸ்ட், 2026

நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

 நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இருந்த 3 வேன்களில் நேபாளம் சென்ற 37 பேர் நிலைமை என்னவென்று தற்போது தெரியவில்லை என்று அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 நேபாளத்திற்கு சுற்றுலா சென்று, அங்கு ஏற்பட்டு உள்ள பெருவெள்ளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்து உள்ளார்.

திபெத் பகுதியில் இருந்து போட்டே கோஷி ஆறு, நேபாளத்தில் உள்ள ராசுவா, தாடிங், நுவாகோட் ஆகிய மாவட்டங்கள் வழியாக பாய்கிறது. அந்த ஆற்றில், உள்ளூர் நேரப்படி இன்று காலை 9 மணிக்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளத்தால் கரையோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. குடியிருப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், பல நீர்மின் உற்பத்தி நிலையங்கள் சேதம் அடைந்து உள்ளன.

இதை அடுத்து, நேபாள பிரதமர் பாலேந்திர ஷா அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டு உள்ளார். அவருடைய உத்தரவுப்படி, நேபாள ராணுவம், ஆயுத காவல் படை, நேபாள காவல் துறை ஆகியவை ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் களமிறங்கி உள்ளன. ராசுவா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, 5 மருத்துவர்கள் உள்பட 16 பேர் கொண்ட மருத்துவக் குழுவினரும் விரைந்து உள்ளனர்.

இந்த திடீர் வெள்ளத்தால் நேபாளத்திற்கு சுற்றுலா வந்த பலர் மாயமாகி இருப்பதாக அந்நாட்டு சுற்றுலா வாரியம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "291 வெளிநாட்டினர், 93 நேபாள நாட்டினர் என மொத்தம் 384 பேர் மாயமாகி உள்ளனர்.

வெளிநாடுகளை சேர்ந்தவர்களில், 105 பேர் இந்தியர்கள், 37 பேர் வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆவர். மற்றவர்கள், அமெரிக்கா, மலேசியா, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 57 தமிழர்கள்

இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 57 பேர் இந்த பெருவெள்ளத்தில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இவர்கள் அனைவரும், கும்பகோணத்தில் செயல்பட்டு வரும் 'சூப்பர் யாத்திரை ஏஜென்சி' மூலம் அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். அவர்கள் திருச்சி, சென்னை, சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், பாண்டிச்சேரி, கும்பகோணம், தஞ்சாவூர், ஓசூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று ஏஜென்சி நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 23 ஆம் தேதி மூன்று வேன்கள் மூலம் அவர்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். நேபாளம் - சீனா எல்லை அருகே சென்று கொண்டு இருந்த போது வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று வேன்களும் சிக்கி உள்ளன.

அதில் ஒரு வேனில் பயணம் செய்த 20 பேர் தப்பித்து கரை ஒதுங்கி உள்ளனர். மீதமுள்ள இரண்டு வேன்களில் பயணம் செய்த 37 பேர் நிலைமை என்னவென்று தற்போது வரை தெரியவில்லை. 15 பேர், அங்கு உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறனர் என்று நேபாள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

20 பேர் பத்திரமாக உள்ளனர்

இந்நிலையில், நேபாளத்திற்கு சென்றவர்களில் 20 பேர் பத்திரமாக இருப்பதாகவும், மற்றவர்களை தேடி வருவதாகவும் அங்கு இருந்து தகவல் வந்து இருப்பதாக டிராவல்ஸ் உரிமையாளர் சாதிக் அலி தெரிவித்தார்.

இதேபோல், நேபாளத்திற்கு சென்றவர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருவதாக வட்டாட்சியர் பூங்கொடி தெரிவித்து உள்ளார்.

கட்டணமில்லா உதவி எண்கள் அறிவிப்பு

இதைத்தொடர்ந்து, நேபாள சுற்றுலா வாரியம், கட்டணமில்லா உதவி எண்களை அறிவித்து உள்ளது. உதவிக்கு 1234 அல்லது ஹாட்லைன் தொலைபேசி எண் 1144 அல்லது சுற்றுலா காவல் துறை எண் 98512 89445 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு உதவி எண்கள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நல ஆணையரகமும் 24 மணி நேர உதவி எண்களை அறிவித்து உள்ளது.

கட்டணமில்லா தொலைபேசி எண்கள்

இந்தியா: 1800 309 3793

வெளிநாட்டில் இருந்து தொடர்புகொள்ள:

+91 8069009901 / 08069009901, மிஸ்டு கால் : +91 8069009900 / 08069009900, தமிழ்நாடு இல்லம் புதுடெல்லி- 92895 16712 (கட்டுப்பாட்டு அறை) ஆகியவை அறிவிக்கப்பட்டு உள்ளன.

மத்திய அரசு அளித்து உள்ள உதவி எண்கள்

+977 985 131 6807, +977 970 910 7500

தமிழர்களை மீட்க நடவடிக்கை- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

இந்நிலையில் நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், 

"நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் காணாமல் போனதாக வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

இந்த பேரிடரில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.

நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில் அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்களோ தொடர்பு கொள்ள ஏதுவாக அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.


மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெற்று, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று குறிப்பிட்டு உள்ளார்.

திங்கள், 24 ஆகஸ்ட், 2026

மின் கம்பத்தில் மோதி காரில் கொழுந்து விட்டு எறிந்த தீ!" - கோவையில் அவினாசிலிங்கம் - GCT சாலையில் அதிர்ச்சி விபத்து!

மின் கம்பத்தில் மோதி காரில் கொழுந்து விட்டு எறிந்த தீ!" - கோவையில் அவினாசிலிங்கம் - GCT சாலையில் அதிர்ச்சி விபத்து!

 "மின் கம்பத்தில் மோதி காரில் கொழுந்து விட்டு எறிந்த தீ!" - கோவையில் அவினாசிலிங்கம் - GCT சாலையில் அதிர்ச்சி விபத்து!

கார் முற்றிலும் எரிந்து சாம்பல்: பெண் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!

 கோவை, அவினாசிலிங்கம் கல்லூரியில் இருந்து GCT கல்லூரி செல்லும் சாலையில் பெண் ஓட்டிச் சென்ற சொகுசு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. காரை ஓட்டிச் சென்ற பெண் அதிர்ஷ்டவசமாக எவ்விதக் காயமுமின்றி உயிர் தப்பினார்.

கோவை வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தா (50). இவர் இன்று பிற்பகல் நேரத்தில் அவினாசிலிங்கம் கல்லூரியில் சாலையில் இருந்து GCT கல்லூரி நோக்கித் தனது காரில் சென்று கொண்டு இருந்தார். ​அப்போது, வெங்கடாபுரம் அருகே கார் வந்த போது எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் காரின் முன்பகுதியில் இருந்து திடீரெனப் புகை வெளியேறி, நொடிப் பொழுதில் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தா, உடனடியாகச் சமயோசிதமாக காரில் இருந்து வெளியே குதித்துத் தப்பினார்.

​தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்துவதற்குள் கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

விபத்து நடந்த நேரம் பிற்பகல் வேளை என்பதால், அந்தச் சாலையில் ஆள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து குறைவாகவே இருந்தது. இதனால் மிகப்பெரிய உயிர்ச்சேதமும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது.

​இச்சம்பவம் குறித்து போக்குவரத்து பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

"3 ரூபாய் சில்லறையால் வந்த வினை" - கோவை ரயில் நிலையம் அருகே மினி பேருந்து மீது போதை ஆசாமி கல்வீச்சு!

"3 ரூபாய் சில்லறையால் வந்த வினை" - கோவை ரயில் நிலையம் அருகே மினி பேருந்து மீது போதை ஆசாமி கல்வீச்சு!

"3 ரூபாய் சில்லறையால் வந்த வினை" - கோவை ரயில் நிலையம் அருகே மினி பேருந்து மீது போதை ஆசாமி கல்வீச்சு!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நிறுத்தாததால் ஆத்திரம்!

 கோவை, ரயில் நிலையம் அருகே 3 ரூபாய் சில்லறை விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், அதே பேருந்தில் பயணித்த மதுபோதை ஆசாமி ஒருவர் மினி பேருந்தின் கண்ணாடியைக் கல்லால் அடித்து நொறுக்கி விட்டுத் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, காந்திபுரம் பகுதியில் இருந்து நேற்றிரவு உக்கடம் நோக்கித் தனியார் மினி பேருந்து ஒன்று 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டு இருந்தது. அப்போது காந்திபுரத்தில் ஏறிய மதுபோதையில் இருந்த பயணி ஒருவர், கோவை ரயில் நிலையத்திற்குத் பயணிக்க ரூ.10 கொடுத்து உள்ளார்.

அதற்கான ரூ.7 பயணக் கட்டணம் போக மீதி ரூ.3 சில்லறையை நடத்துனர் உடனடியாக அவரிடம் திருப்பிக் கொடுத்து உள்ளார்.

பேருந்து ரயில் நிலையம் அருகே வந்த போது, அந்த போதை பயணி "எனக்கு ரூ.3 சில்லறை இன்னும் தரவில்லை" எனக் கூறி நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். நடத்துனர் ஏற்கனவே சில்லறையைக் கொடுத்து விட்டதாகக் கூறியும் கேட்காத அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பேருந்தை நிறுத்தித் தன்னை இறக்கி விடுமாறு கூறி உள்ளார்.

ஆனால், "அங்குப் பேருந்தை நிறுத்த முடியாது, ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த முடியும்" என நடத்துனர் கூறியதால் ஆத்திரம் அடைந்தார்.

ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்றதும் கீழே இறங்கிய அந்த நபர், "எனக்கு 3 ரூபாய் சில்லறை தராவிட்டால் பேருந்தை நகர்த்த விடமாட்டேன்" என மறித்து உள்ளார்.

 ஓட்டுநரும் நடத்துனரும் பேருந்தை நகர்த்த முற்பட்ட போது, திடீரெனச் சாலையோரம் இருந்த பெரிய கல்லை எடுத்து மினி பேருந்தின் பின்பக்கக் கண்ணாடியில் வீசி நொறுக்கி விட்டு அங்கு இருந்து தப்பியோடினார்.

நடத்துனர் அவரைப் பிடிக்க முயன்றும் அவர் தப்பித்து விட்டார். இந்தச் சம்பவத்தால் நடுரோட்டில் பேருந்து நிறுத்தப்பட்டு, அப்பகுதியில் சிறிது நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து மினி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அளித்த புகாரின் பேரில், பந்தய சாலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய போதை ஆசாமியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

திங்கள், 17 ஆகஸ்ட், 2026

வால்பாறை மலைச் சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து : 12 பேர் காயங்களுடன் தப்பினர்!

வால்பாறை மலைச் சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து : 12 பேர் காயங்களுடன் தப்பினர்!

 வால்பாறை மலைச் சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து : 12 பேர் காயங்களுடன் தப்பினர்!

1-வது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்த வேன் : பாம்பன் சுற்றுலா பயணிகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி!

  வால்பாறை மலைச் சாலையில், ராமநாதபுரம் மாவட்டம் பம்பன் பகுதியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் பயணித்த மேக்ஸி கேப் வேன் பிரேக் பிடிக்காமல் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியில் இருந்து 19 பேர் கொண்ட குழுவினர் 4 நாள் பயணமாக வால்பாறைக்குச் சுற்றுலா வந்து இருந்தனர். சுற்றுலா முடிந்து மீண்டும் பொள்ளாச்சி வழியாகச் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டு இருந்த போது, மாலை 5.45 மணி அளவில் கடம்பாறை காவல் எல்லைக்கு உட்பட்ட 1-வது கொண்டை ஊசி வளைவில் (SH-78) வேன் வந்து கொண்டு இருந்தது.

அப்போது, வாகனத்தை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஷேக் அகமது (28) என்பவரது கட்டுப்பாட்டை இழந்து, பிரேக் பிடிக்காததால் வேன் சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆழியார் மற்றும் கடம்பாறை போலீஸார், வனத்துறையினருடன் இணைந்து காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் அனைவரும் சிகிச்சைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 12 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது:

 ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன், பகுதியைச் சேர்ந்த சாமினி (36), கெம்சிலின் (29), எகித் ராணி (58), சூசை வியாகுலம் (62), சந்தியா மேரி (70), ஜான் மேக்லோவின் (45),

கெவின் (51), 9 வயது குழந்தைகள் இரண்டு, 13, 14 வயது குழந்தை ஆகிய நான்கு குழந்தைகள் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த அசோக் குமார்,

நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. விபத்து காரணமாக மலைச் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 வால்பாறை உட்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர் (DSP) மற்றும் காவல் அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 இச்சம்பவம் குறித்துக் கடம்பாறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சனி, 15 ஆகஸ்ட், 2026

ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ திறன் பயிற்சி - தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேச்சு !!!

ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ திறன் பயிற்சி - தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேச்சு !!!

 ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ திறன் பயிற்சி - தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேச்சு !!!

நாட்டின் 80 வது சுதந்திர தின விழாவையொட்டி, டெல்லி செங்கோட்டையில் 13 வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

இந்திய நாட்டின் 80 வது சுதந்திர தின விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சுதந்திர விழா கோலாகலமாக நடைபெற்றது. 

2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய பயணத்தை முன்னெடுத்துச் செல்வதில் இளைஞர்களின் பங்களிப்பை கொண்டாடும் வகையிலும் இந்தாண்டு சுதந்திர தின விழா நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

செங்கோட்டைக்கு வருகைத்தந்த பிரதமர் நரேந்திர மோடியை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். அதன் தொடர்ச்சியாக இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளின் ராணுவ அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றார்.

தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை பிரதமர் மோடி ஏற்றி மரியாதை செலுத்தினார். முன்னதாக வந்தே மாதரம் பாடத்தில் 150 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக முதன் முறையாக சுதந்திர தின விழாவில் வந்தே மாதரம் பாடம் இசைக்கப்பட்டது.

கொடி ஏற்றத்தைத் தொடர்ந்து தேசியக் கீதம் இசைக்கப்பட்டு, இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் மூலம் தேசியக்கொடி பறக்க மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், 2,500 என்.சி.சி உறுப்பினர்கள், எனது பாரத் தன்னார்வலர்கள் மற்றும் 5,000 மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக வந்தே மாதரம் பாடப்பட்டு, தேசிய கீதம் பாடப்பாட்டது.

சுதந்திர தின விழாவில் உரையில் பிரதமர் மோடி, ஐந்து புதிய அணுமின் உலைகள், ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ திறன் பயிற்சி, போட்டித் தேர்வு இளைஞர்கள் இலவச ஆன்லைன் பயிற்சி உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, “இன்று, ஒவ்வொரு இதயமும் 'வந்தே மாதரம்' எனும் தாளத்திற்கு ஏற்பத் துடிக்கிறது. இன்று, ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி உள்ளது. ஒவ்வொருவருக்குள்ளும் மூவர்ணக் கொடி உள்ளது. இந்தச் சுதந்திர தினத்தன்று, அனைத்துச் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். சுதந்திரத்திற்குப் பிறகு, செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து 'வந்தே மாதரம்' முழக்கம் எதிரொலித்த தருணம். இன்று இந்த விழாவில் கலந்து கொண்டு உள்ள அனைவருக்கும் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும்.

2047-ம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற பெரும் கனவை இந்தியா கொண்டு உள்ளது. அந்த முயற்சியில் நாம் உறுதியுடன் இருக்கும். இது நமது துணிச்சலின் அடையாளமாக வெளிப்படுகிறது.

சமீபத்தில், நாட்டின் சில பகுதிகள் வெள்ளம் மற்றும் நிலச் சரிவுகளால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. அவர்களின் துயரத்தில் நாங்கள் ஆழ்ந்த அனுதாபம் கொள்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன். நாங்களும் ஒட்டுமொத்த தேசமும் அவர்களுக்குத் துணையாக நிற்கிறோம்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளில், பாதுகாப்புத் துறை உற்பத்தி நான்கு மடங்காகவும், கதர் மற்றும் கிராமத் தொழில் உற்பத்தி ஐந்து மடங்காகவும், மின்னணு சாதன உற்பத்தி ஏழு மடங்காகவும் அதிகரித்து உள்ளன. அலைபேசி உற்பத்தி 33 சதவீதமும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 100 சதவீதமும் அதிகரித்து உள்ளன. சிறிய கனவுகள் இனி போதுமானதாக இருக்காது. நாம் பெரிய கனவுகளைக் காண வேண்டும்.

ஏனெனில், பெரிய கனவுகள் நமது சிந்தனையை விரிவுபடுத்துவதோடு, நமது தொலைநோக்குப் பார்வையின் எல்லைகளையும் அகலமாக்குகின்றன. நமது உறுதிப்பாடு அசைக்க முடியாததாக இருக்க வேண்டும். அத்தகைய உறுதியான மனநிலை இருக்கும் போது, இடர்பாடுகள் மற்றும் பேரிடர்களுக்கு மத்தியிலும் கூட முன்னேற்றத்திற்கான பாதையை வகுக்கும் ஆற்றல் இயல்பாகவே உருவாகிறது.

கடந்த 12 ஆண்டுகளில் பலத்தரப்பட்ட மக்கள், நாட்டை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல அசைக்க முடியாத உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் சாத்தியமான அனைத்து வழிகளிலும் பாடுபட்டு உள்ளனர். இத்தகைய முயற்சிகளை நான் மரியாதையுடன் அங்கீகரிக்கிறேன்.

நாம் சுயசார்பு கொண்டவர்களாக மாறி, நமது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இன்று, ஒவ்வொரு இந்தியரும் 'மேக் இன் இந்தியா' மற்றும் 'சுதேசி' போன்ற முன்னெடுப்புகளுடன் இணைந்து வருகின்றனர்” எனக் கூறினார்.

மேலும், “ஆற்றல் பாதுகாப்பு என்பது காலத்தின் தேவையாகும். 2047-ம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் அணுசக்தித் திறனை எட்டும் இலக்குடன் நாம் முன்னேறி வருகிறோம். இந்த தசாப்தத்தில் ஐந்து புதிய அணுமின் உலைகளைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர இலக்கு வைத்து உள்ளோம்.

நாடு சுதந்திரம் அடைந்தது, அந்தச் சுதந்திரம் பல கனவுகளுடன் கூடியதாக இருந்தது. இருப்பினும், நம்மால் வேகமெடுக்கவோ அல்லது முன்னேற்றத்திற்கான உத்வேகத்தைப் பெறவோ முடியவில்லை. 'நடப்பது நடக்கட்டும்', 'இப்படியே போகட்டும்', 'எப்படியாவது நடந்துவிடும்', 'அப்போது பார்த்துக்கொள்ளலாம்' என்ற மனப்பான்மையிலேயே நாம் தேங்கி நின்றோம். 2014-ம் ஆண்டு வரை உலகம் நம்மை "பலவீனமான ஐந்து நாடுகள்" என்ற வரிசையில் வைத்துப் பார்க்கும் நிலைக்குத் தள்ளியது.

இத்தகைய சூழலுக்கு மத்தியிலும், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா புதியதொரு உத்வேகத்தைப் பெற்று உள்ளது. நாம் மிக வேகமாக முன்னேறி வருகிறோம். கடந்த 12 ஆண்டுகளில், பாதுகாப்புத் துறை உற்பத்தி கிட்டத்தட்ட நான்கு மடங்காகவும், கதர் மற்றும் கிராமப்புறத் தொழில்களின் உற்பத்தி ஏறக்குறைய ஐந்து மடங்காகவும் அதிகரித்து உள்ளது.

மின்னணு சாதனங்களின் உற்பத்தி கிட்டத்தட்ட ஏழு மடங்கு விரிவடைந்து உள்ளது. நவீன ரயில் பெட்டிகளின் உற்பத்தி 21 மடங்கும், அலைபேசி உற்பத்தி 33 மடங்கும் அதிகரித்து உள்ளன. அதையும் தாண்டி, டிஜிட்டல் தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறைகளிலும் நாம் முத்திரை பதித்து உள்ளோம்.

இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நான்கு மடங்காகவும், காப்புரிமை அங்கீகாரங்கள் நான்கு மடங்காகவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நூறு மடங்காகவும் உயர்ந்து உள்ளன. சாமானிய குடிமக்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதிலும் நாம் அதே தீவிரத்துடன் பணியாற்றி உள்ளோம். முன்பை விட சராசரியாக ஆண்டுக்கு 15 மடங்கு வேகத்தில் குழாய் வழி குடிநீர் இணைப்புகளை வழங்கி உள்ளோம்.

முந்தைய ஆண்டு வேகத்தை விட ஆறு மடங்கு வேகத்தில் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. ஏழைகளுக்கு நான்கு மடங்கு வேகத்தில் கழிப்பறைகளை அமைத்து உள்ளோம். அதே போல், பின் தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு மூன்று மடங்கு வேகத்தில் வீடுகளை வழங்கி உள்ளோம். நிர்வாகத்திலும் நாடு மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்து உள்ளது.

ஆயிரக் கணக்கான விதிமுறை நடைமுறைகள் நீக்கப்பட்டு உள்ளன. மேலும் காலாவதியான நூற்றுக் கணக்கான சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. கடந்த நூற்றாண்டின் சட்டங்களைச் சார்ந்திருப்பதன் மூலம் 21-ம் நூற்றாண்டில் முன்னேறிச் செல்ல முடியாது. நவீன உள்கட்டமைப்பை உருவாக்க மெட்ரோ ரயில் கட்டமைப்புகளை விரிவுபடுத்தினோம் மற்றும் பொதுப் போக்குவரத்து வசதிகளை வலுப்படுத்தினோம். இவை அனைத்தும் கடந்த பத்தாண்டுகளுக்குள் நிகழ்ந்து உள்ளன.

ஆத்மநிர்பர் பாரத் (சுயசார்பு இந்தியா) என்பது மிக அவசியமான ஒன்றாகும். அதனால் தான், இந்தியா இனி பிற நாடுகளைச் சார்ந்து இருக்கக் கூடாது என்றும், நாம் சுயசார்பு கொண்டவர்களாக மாற வேண்டும் என்றும் கடந்த சில ஆண்டுகளாக அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

அதற்காக நமது சொந்தத் திறன்களை நாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப உலகில், 'சிப்'களின் முக்கியத்துவத்தை நாம் நன்கு அறிவோம். மின்னணுப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் அல்லது போக்குவரத்து அமைப்புகள் என எதுவாக இருந்தாலும், சிப்கள் இன்றியமையாதவை. அவை இல்லையென்றால் உலகம் ஸ்தம்பித்து விடும்.

இத்துறையில் இந்தியா சுயசார்பை நோக்கி முன்னேறி உள்ளது. ஏற்கனவே, மூன்று பெரிய செமிகண்டக்டர் ஆலைகள் நிறுவப்பட்டு உள்ளன. மேலும், ஏற்றுமதிக்கான உற்பத்திப் பணிகளும் தொடங்கப்பட்டு விட்டன. வரும் 7 அல்லது 8 ஆண்டுகளில், மேலும் ஐந்து முதல் எட்டு செமிகண்டக்டர் ஆலைகள் மிக விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளன” என்று குறிப்பிட்டார்.

மேலும் பேசுகையில், “கடந்த 12 முதல் 20 ஆண்டுகளில் நாம் பல ஆபத்துகளை எதிர்கொண்டு உள்ளோம். கொரோனா பாதிப்பில் இருந்து நாம் மீண்டு வந்த உடனேயே, உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியப் பகுதிகளில் தாக்குதல் தொடங்கின. ஒரு பதற்றமான சூழல் நிலவியது. எதிர்காலம் குறித்துக் கணிப்பவர்கள் என்னென்னவோ கணிப்புகளைச் சொன்னார்கள். தடுப்பூசிகள் கிடைக்காது என்றும், பெட்ரோல், டீசல் மற்றும் உரங்கள் கிடைக்காது என்றும் வதந்திகளைப் பரப்பி, நாட்டை அச்சத்தில் ஆழ்த்துவதில் சிலர் மகிழ்ச்சி கண்டனர்.

இன்று நம் நாடு கச்சா எண்ணெயைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்குக் காரணம் நமது தவறான சிந்தனைப் போக்கு தான். நமது கடற்கரைப் பகுதியில் 99 சதவீதத்தை அனுமதிக்கப்படாத பகுதியாக நாமே அறிவித்து இருந்தோம் என்பது உங்களுக்கு ஆச்சரியமளிக்கலாம். ஒரு காலத்தில் அனுமதிக்கப்படாத பகுதிகளாக கருதப்பட்ட இடங்கள், இன்று முன்னேற்றத்திற்கான பகுதிகளாக மாறி உள்ளன.

ஃபாஸ்ட் பிரீடர்' அணு தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றதன் மூலம் இந்தியா இந்த ஆண்டு ஒரு முக்கிய மைல்கல்லை எட்டி உள்ளது. இது அணு எரிபொருள் துறையில் தன்னிறைவை அடைவதற்கான ஒரு பெரும் முன்னேற்றமாகும்.

வரும் நாட்களில் ஒரு துடிப்பான 'குடிமைப் பாதுகாப்பு' கட்டமைப்பை உருவாக்க உள்ளோம் என்பதை இன்று செங்கோட்டையில் இருந்து அறிவிக்கிறேன். நவீன அமைப்புகள் குறித்து அவர்களுக்குப் பயிற்சி அளிப்போம். தற்கால நெருக்கடிகளில் இருந்து குடிமக்களைப் பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? சமகாலச் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட, ஒரு பிரம்மாண்டமான மற்றும் நவீன குடிமைப் பாதுகாப்பு தன்னார்வலர் படையை அரசு உருவாக்க உள்ளது.

இளைஞர்களுக்கான நவீன திறன் வளர்ச்சி குறித்து பேசிய அவர், சமீபத்தில் செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் குறித்த உச்சிமாநாடு நடந்தது. செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டு எல்லை வேகமாக விரிவடைந்து வருகிறது. செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.

வரும் ஆண்டில் ஒரு கோடி இளைஞர்களுக்குச் செயற்கை நுண்ணறிவுத் திறன்களில் பயிற்சி அளித்து, அவர்களை இத்துறையில் உலகிற்குத் தலைமை தாங்கும் வகையில் வலுப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது” என அறிவித்தார். மேலும், அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி வழங்கப்படும் என அறிவித்தார்.

வளர்ச்சி அடைந்த இந்தியா எனும் பயணத்தில் இளைஞர்களுக்குப் பெரும் பங்கு உள்ளது. 'விக்சித் பாரத்'-தின் மிகப்பெரிய பயனாளிகள் நாட்டின் இளைஞர்களாகவே இருப்பார்கள். கடந்த 5 முதல் 7 தசாப்தங்களில் சாதிக்க முடியாதவற்றை, வரவிருக்கும் 5 முதல் 7 ஆண்டுகளில் நாம் சாதிக்க வேண்டும். வரும் ஆண்டுகளில், அரசாங்கம் சீர்திருத்தங்களை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.

நக்சலிசம் மற்றும் மாவோயிசம் ஆகியவை லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழித்தன. இவை அரசியலமைப்பையே கேலிக்கு உள்ளாக்கின. இன்று, நக்சல்-மாவோயிச வன்முறை தனது வலிமையை இழந்து, இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது என்று கூறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

அதை முழுமையாக ஒழிக்கும் திசையில் நாம் முன்னேறி வருகிறோம். ஒரு காலத்தில் நக்சல்களின் குண்டுகள் பாய்ந்தும், நிலம் ரத்தத்தால் நனைந்தும் கிடந்த அதே பகுதிகளில், இன்று வளர்ச்சி, நம்பிக்கை மற்றும் கூட்டு முயற்சியின் அடையாளமான மூவர்ணக் கொடி உயரே பறக்கிறது.

நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், ஏதோ ஒரு காரணத்தினால், கடந்த 40 ஆண்டுகளாக இந்த கனவு மீண்டும் அரசியல் சூழலுக்குப் பலியாகி வந்து உள்ளது.

இன்று செங்கோட்டையின் கொத்தளத்தில் மூவர்ணக் கொடியின் கீழ் நின்று, நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் நான் ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன். பெண்களைக் கௌரவிக்கவும், நமது தாய்மார்களும் சகோதரிகளும் சட்டமன்றங்கள் மற்றும் மக்களவையில் 33 சதவீதப் பிரதிநிதித்துவத்தை விரைவில் பெறுவதை உறுதி செய்யவும் முன்வாருங்கள்.

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது வெறும் எண்களைச் சேகரிப்பது மட்டுமல்ல; அதன் மூலம் பெறப்படும் நுணுக்கமான விவரங்களே கொள்கைகளையும் திட்டங்களையும் வடிவமைக்கின்றன. நீங்கள் வழங்கும் தகவல்கள் எவ்வளவு துல்லியமாக இருக்கிறதோ, அந்தளவுக்கு அது நாடு முன்னேற உதவும். எனவே, நாட்டின் இளைஞர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்து துல்லியமான தகவல்களை வழங்க கேட்டுக் கொள்கிறேன்” எனப் பேசினார்.

வியாழன், 13 ஆகஸ்ட், 2026

கோவையில் பரபரப்பு : டவுன்ஹால் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மரம் முறிந்து விழுந்து ஆட்டோ சேதம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பொதுமக்கள் !!!

கோவையில் பரபரப்பு : டவுன்ஹால் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மரம் முறிந்து விழுந்து ஆட்டோ சேதம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பொதுமக்கள் !!!

 கோவையில் பரபரப்பு : டவுன்ஹால் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மரம் முறிந்து விழுந்து ஆட்டோ சேதம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பொதுமக்கள் !!!

 கோவை, டவுன்ஹால் பகுதியில் அமைந்து உள்ள மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் இருந்த பழமையான மரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்ததில், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோ பலத்த சேதமடைந்தது.

கோவை டவுன்ஹால் பகுதியில் மாநகராட்சி பிரதான அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகள் பழமையான மரங்கள் உள்ளன. இந்நிலையில், இன்று பிற்பகல் வேளையில் வளாகத்திற்குள் இருந்த பெரிய மரம் ஒன்றின் ராட்சதக் கிளைகள் திடீரென வேரோடு முறிந்து வெளியே சாலையில் விழுந்தது.

​அப்போது அந்த வழியே சென்று கொண்டு இருந்த மற்றும் அருகில் நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோ ஒன்று, மரத்தின் அடியில் சிக்கி பலத்த சேதம் அடைந்தது.

காலை நேரம் என்பதால் மாநகராட்சி அலுவலகத்திற்குச் பொதுமக்கள் மற்றும் ஊழியர்களின் நடமாட்டம் தொடங்கத் தொடங்கிய நேரத்தில் இச்சம்பவம் நடைபெற்றது.

 இருப்பினும், நல்ல வேளையாக மரம் விழும் சத்தம் கேட்டு ஆட்டோ ஓட்டுநரும், அருகில் இருந்த பொதுமக்களும் உடனடியாகச் விலகி ஓடியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

மரம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், மரம் அறுக்கும் எந்திரங்கள் மூலம் மரக்கிளைகளை வெட்டி அகற்றினர்.

​மழை மற்றும் காற்று காரணமாக மரங்கள் முறிய வாய்ப்பு உள்ளதால், மாநகராட்சி அலுவலக வளாகம் மற்றும் நகரின் பிரதான பகுதிகளில் ஆபத்தான நிலையில் உள்ள காய்ந்த மரக்கிளைகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

புதன், 12 ஆகஸ்ட், 2026

 "உங்களுக்கு மட்டும் தான் அரிசி தருவாங்களா ?" ;  கோவையில் ரேஷன் கடையை உடைத்து அரிசி மூட்டைகளைச் சூறையாடிய ஒற்றை யானை !!!

"உங்களுக்கு மட்டும் தான் அரிசி தருவாங்களா ?" ; கோவையில் ரேஷன் கடையை உடைத்து அரிசி மூட்டைகளைச் சூறையாடிய ஒற்றை யானை !!!

 "உங்களுக்கு மட்டும் தான் அரிசி தருவாங்களா ?" ;  கோவையில் ரேஷன் கடையை உடைத்து அரிசி மூட்டைகளைச் சூறையாடிய ஒற்றை யானை !!!

அதிகாலை 5:15 மணிக்கு நடந்த பரபரப்பு: அச்சத்தில் பொதுமக்கள் - வனத்துறைக்குக் கோரிக்கை !!!

 கோவையை அடுத்த கணுவாய் அருகே உள்ள கதிர் நாயக்கன் பாளையத்தில், CRPF கேம்ப் பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடையை உடைத்து, அங்கு இருந்த அரிசி மூட்டைகளை ஒற்றைக் காட்டு யானை ஒன்று சூறையாடிச் சாப்பிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று அதிகாலை சுமார் 5:15 மணி அளவில் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, CRPF கேம்ப் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு வந்தது. கடையின் கதவை உடைத்து உள்ளே இருந்த அரிசி மூட்டைகளை வெளியே இழுத்துப் போட்டு நிதானமாகச் சாப்பிட்டது.

​இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த குடியிருப்புவாசி ஒருவர், யானை அரிசி மூட்டைகளைச் சூறையாடும் காட்சிகளைத் தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

யானை நுழைந்த இந்த CRPF கேம்ப் சாலையில் தினமும் அதிகாலை வேளையில் ஏராளமான CRPF வீரர்கள், பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். மேலும், விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களுக்கு வேலைக்குச் செல்லும் நேரமும் அதுவே என்பதால், திடீரென காட்டு யானை தாக்கி உயிர்ப்பலி ஏதேனும் ஏற்பட்டு விடுமோ ? என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் ஆழ்ந்து உள்ளனர்.

ரேஷன் கடையில் அரிசி சுவையை ருசித்த இந்த ஒற்றைக் காட்டு யானை, மீண்டும், மீண்டும் இதே பகுதிக்கு வர அதிக வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

​எனவே, வனத்துறையினர் உடனடியாக இப்பகுதியில் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தி, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து உள்ள அந்த ஒற்றைக் காட்டு யானையைத் தீவிரமாகக் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

 "லுங்கி சேலையில் வந்த நடிகை அம்பிகா" - கைத்தறி நெசவாளர்களை ஓவியர்களுடன் ஒப்பிட்டு நெகிழ்ச்சி பேச்சு !!!

"லுங்கி சேலையில் வந்த நடிகை அம்பிகா" - கைத்தறி நெசவாளர்களை ஓவியர்களுடன் ஒப்பிட்டு நெகிழ்ச்சி பேச்சு !!!

 "லுங்கி சேலையில் வந்த நடிகை அம்பிகா" - கைத்தறி நெசவாளர்களை ஓவியர்களுடன் ஒப்பிட்டு நெகிழ்ச்சி பேச்சு !!!

"கைத்தறி நெசவாளர்களுக்கு நாம் செய்யும் சிறந்த உதவி அவர்களின் பொருட்களை வாங்குவதே!"

​ கோவையில் நடைபெற்ற கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பிரபல திரைப்பட நடிகை அம்பிகா, கைத்தறி உடைகளின் முக்கியத்துவம் குறித்துப் சுவாரஸ்யமாகவும் நெகிழ்ச்சியாகவும் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மேடையில் பேசிய நடிகை அம்பிகா பேசும்போது:

​"ஒரு கைத்தறி நெசவு ஆடை அலங்கார நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகிறேன் என்பதால், அதற்குப் பொருத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு லுங்கி மற்றும் ஒரு கேரளா சேலையை (Kerala Saree) புதிதாக வாங்கி, அவற்றை ஒன்றாக இணைத்துத் தைத்து இப்படி ஒரு ஆடையை அணிந்து வந்து உள்ளேன்.

 'லுங்கி டான்ஸ்' ஆடத் தெரிந்த நமக்கு, இப்படி 'லுங்கி சேலை' கட்டுவதில் எந்தத் தவறும் இல்லை கைத்தறி ஆடைகள் மீது இன்றைய கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்க்கும் போது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

​உலகிலேயே மிகச் சிறந்த ஓவியர்கள் யார் ? என்று கேட்டால், அது கைத்தறி நெசவாளர்கள் தான் என்று நான் சொல்வேன். நூல்களால் அவர்கள் நெய்யும் ஒவ்வொரு ஆடையும் ஒரு கலைப்படைப்பு. இன்றைய மக்கள் அனைவரும் கைத்தறி நெசவாளர்களுக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என நினைத்தால், அவர்கள் கஷ்டப்பட்டுத் தயாரித்த கைத்தறிப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். அதுவே அவர்களுக்கு நாம் தரும் மிகப்பெரிய சந்தோஷம்," எனத் தெரிவித்தார்.

பா.ஜ.க - தி.மு.க கூட்டணியை பத்திரிகையாளர்களை உருவாக்குகிறார்கள் ; அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் கிடையாது... வானதி சீனிவாசன் கருத்து !!!

பா.ஜ.க - தி.மு.க கூட்டணியை பத்திரிகையாளர்களை உருவாக்குகிறார்கள் ; அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் கிடையாது... வானதி சீனிவாசன் கருத்து !!!

 பா.ஜ.க - தி.மு.க கூட்டணியை பத்திரிகையாளர்களை உருவாக்குகிறார்கள் ; அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் கிடையாது... வானதி சீனிவாசன் கருத்து !!!

தேசிய கைத்தறி தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ஐடியா மேக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய 9-வது ஆண்டின் 'கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு' (Handloom Fashion Show) இறுதிப்போட்டி, கோவை, கோவை புதூர் பகுதியில் உள்ள வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் விமரிசையாக நடைபெற்றது.

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் பேசும் போது ;

ஆகஸ்ட் 7ஆம் தேதி மத்திய அரசு பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒவ்வொரு வருடமும் தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடுவதற்காக அறிவிப்பு செய்து ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் மிகச் சிறப்பாக தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுவதாக கூறியவர், அந்த வகையிலே கடந்த எட்டு வருடங்களாக கோவை மக்கள் சேவை மையமும், ஐடியா மேக்ஸ் நிறுவனமும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள கல்லூரி மாணவ - மாணவியர்களுக்கு ஹேண்ட் லூம் பேஷன் ஷோ என்ற நிகழ்ச்சியை நடத்திக் கொண்டு உள்ளதாகவும், ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் இதில் போட்டியாளர்களாக பங்கேற்று இருப்பதாகவும், கிட்டத்தட்ட 20,000 மேற்பட்ட மாணவர்கள் தொழில் செய்வதாகவும், ஒவ்வொரு வருடமும் இதில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் நாடு முழுவதும் இருக்கின்ற லீப்பை பற்றி பயன்படுத்துவது அதை அழகாக வெளிப்படுத்துவது அதேபோன்று இந்த நிகழ்ச்சி ஒரு ஆடை அலங்கார அணிவகுப்பு மட்டுமல்லாமல் அவர்களிடம் கைத்தறி தொடர்பான கேள்விகளும் கேட்கப்பட்டு அந்த அறிவும் பரிசோதிக்கப்படுவதாகவும், தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஒன்பதாம் ஆண்டு வெற்றிகரமாக நிகழ்ச்சியை நடத்திக் கொண்டு உள்ளதாகவும், இதன் வாயிலாக கைத்தறி பற்றிய விழிப்புணர்வு மட்டுமல்ல இந்தியா முழுவதும் இருக்கின்ற நம்முடைய பல்வேறு நெசவு மற்றும் நெசவாளர்கள் மீதான பெருமை மற்றும் அவர்கள் மீதான மதிப்பு அதிகரித்துக் கொண்டு உள்ளதாக கூறினார்.

நெசவாளர்கள் இன்று நமது நாட்டின் பாரம்பரிய, சிறப்பை அடிப்படை திறனை இவையெல்லாம் வெளிப்படுத்துகின்ற விதத்தில் அவர்கள் செய்கின்ற ஒவ்வொரு வேலைகளுமே, அடுத்து வரக்கூடிய சமுதாயம் பாராட்டி, நேசிக்கும் என்றால் அவர்களுடைய தொழிலும் மேம்பட வேண்டும் என்பது தான் இந்த நிகழ்ச்சியின் இன்னொரு நோக்கம் என்றார்.

இந்த கல்லூரி மாணவ - மாணவிகள் ஆயிரக்கணக்கான பேர் பங்கேற்று கலந்து கொண்ட போது நம்மளுடைய பகுதி நெசவு மட்டுமல்ல, நாடு முழுவதும் இருக்கின்ற நெசவு தொழிலை பற்றி அந்த அறிவு அவர்களுக்கு கிடைக்கிறது. இதில் கலந்து கொண்ட நிறைய பேர் கைத்தறி தொழிலையும் செய்வதற்கு விருப்பப்படுவதை பார்ப்பதாக கூறியவர், இந்த தொழிலிலும் ஈடுபட்டு வெற்றிகரமாக இருக்கக் கூடிய, பரிசு பெறுபவர்களும் சரி, பங்கேற்பாளர்களும் சரி எங்களிடம் சொல்லும்பொழுது இந்த நிகழ்ச்சியினுடைய வெற்றி என்பது நிரூபணம் ஆகிறது என்றார்.

சட்டமன்றத்தில் நீட் தேர்வு ரத்து குறித்தான தீர்மானம் குறித்த கேள்விக்கு ;

 நீட் தேர்வு என்பது பா.ஜ.க அரசு கொண்டு வரவில்லை, உச்சநீதிமன்ற தீர்ப்பினால் வந்தது. தமிழகத்தில் உண்மையாகவே நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்றால், அதிலும் புதிதாக வந்து இருக்க கூடிய அரசு அவர்கள் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடலாமே தவிர, நீட் தேர்வு ரத்து என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பு மீறுவதாக இருக்கும். அதனால் நீட் தேர்வில் எங்கெங்கெல்லாம் மாணவர்களுக்கு சிரமம் இருக்கிறதோ ? மொழி பிரச்சனை இருக்கிறதோ ? அதை ஒவ்வொன்றாக மத்திய அரசு தீர்த்துக் கொண்டு உள்ளதாக கூறியவர். இந்த முறை கூட நீட் தேர்விற்காக கடந்த ஒரு தேர்வில் அவ்வளவு தூரம் கஷ்டம் என்று வந்தது. அதை புரிந்து கொண்டு இரண்டாவது முறை மிக சிறப்பாகவே தேர்வை நடத்தி உள்ளதாகவும், அதுவும் நல்ல முறையில் மாணவர்கள் தேர்ச்சி அடைந்து உள்ளதாக தெரிவித்தவர், தமிழ்நாட்டில் இருந்து கூட நீட் தேர்வு எழுதுகின்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும், தேர்வு பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததாக கூறினார்.

 பெற்றோர்களும், மாணவர்களும் ஏற்றுக்கொன்றார்கள் அதிலும், தமிழகம் போன்று அதிகமாக கல்வி அறிவு பெற்று இருக்கின்ற மாநிலத்திலும், கூட அரசாங்கம் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு வந்ததற்கு பின்பு தான் அதிகமாக மருத்துவக் கல்லூரிகளில் நுழைந்து இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

 ஏழைக் குழந்தைகள் நீட் தேர்வு வந்த பிறகு தான் அதிகமாக கல்லூரிகளில் செல்வதாகவும், இதற்கு முன்பு பணம் இருப்பவர்கள் மட்டும் தான் போக முடிந்ததாகவும் தெரிவித்தவர், அதனால் நீட் தேர்விற்கு பின்னால் நிறைய மாற்றங்களை சமுதாயம் ஒத்துக் கொண்டு விட்டதாகவும், அரசியலுக்காக வேண்டி என்ன வேண்டுமானாலும் பேசிக்கலாம் என்றார்.

குறைவான மதிப்பெண் இருந்தாலும், பணம் கொடுத்து மருத்துவக் கல்லூரிக்கு செல்லுகின்றது குறித்து சௌமியா அன்புமணி பேசியது குறித்தான கேள்விக்கு;

அவர்கள் எப்படி ? அதை கூறுகிறார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும், பொதுவான மதிப்பெண்கள் எடுத்தவர்கள் அதை மீறி நீட் தேர்வு பெறாமல் செல்வது வாய்ப்பில்லை. மதிப்பெண்களின் அடிப்படையில் அந்தக் குழந்தைகள் வேறு ஏதாவது வாய்ப்பு கிடைத்து சென்று இருந்தால், அந்த இடத்திற்கு நிரப்புவதற்காக குறைத்த மதிப்பெண் எடுத்தவர்கள் வந்து இருக்கலாம், அதனால் அப்படி ஏதேனும் முறைகேடு இருந்தால், அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சரோடு, ஆதாரத்தோடு தெரிவித்தால் அதையும் சரி செய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

த.வெ.க அரசு 3 மாத ஆட்சியின் செயல்பாடு குறித்தான கேள்விக்கு;

இந்த அரசு அது பாட்டுக்கு போய்க் கொண்டு உள்ளது. அவ்வளவு தான். ஏனென்றால் என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தார்கள், தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு, விவசாயிகளுக்கு கொடுத்தார்கள் எதுவுமே நடக்கவில்லை, பட்ஜெட்டில் ஆவது வருமா ? என்று எதிர்பார்த்ததாகவும், கடைசியில் பட்ஜெட்டிலும் ஒன்றுமில்லை காலி என்று கூறி விட்டார்கள். நடக்கிறதுக்கு என்ன இருக்கிறது அது பாட்டுக்கு நடக்கிறது. அவ்வளவு தான் சொல்ல முடியும் என்றார்.

திருப்பூர் மாவட்டத்தில் தாய் மகள் கொலை செய்யப்பட்டது குறித்தான கேள்விக்கு; 

கடந்த மூன்று மாத காலமாக ஆட்சியில் உள்ளதாகவும், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் எங்கேயும் குறையவில்லை, சட்டம் - ஒழுங்கு என்பது மாறவில்லை, அதனால் மாற்றம் என்பது சேரில் அமர்ந்து இருப்பவர்கள் மாறி இருக்கிறார்கள் தவிர, ஆனால் தமிழ்நாட்டில் எந்த நிலைமையும் மாறவில்லை எனவும் கூறினார்.

கருக்கலைப்பிற்கு எதிரான பேரணியில் தமிழக சபாநாயகர் கலந்து கொண்டு இருப்பது குறித்தான கேள்விக்கு;

அவருடைய கிறிஸ்தவ மத நம்பிக்கை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வெளிப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும், அவர் மட்டுமல்ல நேற்று நிதி அமைச்சர் பேசும்போது கூட தமிழ் மொழியை விட எனது கிறிஸ்துவ உயர்ந்தது என்று பேசுவதாகவும், அதனால் கிறிஸ்தவ மத பிடிப்பாளர்கள் அவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற ஒரு நிலைமை இருக்கிறதா ? என்ற சந்தேகம் இருப்பதாகவும், ஏனென்றால் இப்படி பேசுகிறார்கள் அப்புறம் அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள். நமது தமிழ் மொழியை தாண்டி கூட எனது மதத்தை பற்றி தான் பேசுவேன் என அப்படி என்ற மனப்பான்மையில் உள்ளார்களா ? சபாநாயகர் அதற்கு ஆதரவு தெரிவிக்கிறாரா ? 

 கருக்கலைப்பிற்கு அமெரிக்கா நாட்டில் இருக்கின்ற பெண்கள் போராடிக் கொண்டு உள்ளதாகவும், அது அவர்களது அடிப்படை உரிமை, அதில் பார்க்க வேண்டியது அந்தப் பெண்ணினுடைய மனநிலை, அவர்களின் உடல் இதைத் தான் நீதிமன்றத்தில் பார்த்து இருக்கிறோம். அப்படி இருக்கின்ற பொழுது சபாநாயகர் அதில் கலந்து கொள்கிறார். நிதி அமைச்சர் கிறிஸ்தவத்தை பற்றி பேசுகிறார், முதலமைச்சர் ஆதரவு அளிக்கிறார். அப்படி என்றால் அது மற்றவர்கள் மத்தியில் முக்கியமாக வலுவான ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தும் என்றார்.

மத நம்பிக்கை இல்லாமல் எல்லா மதத்தையும் மதிக்கிறோம் என்று சொன்னால் பிரச்சனை இல்லை, ஆனால் தமிழகத்தில் இதுவரைக்கும் இந்து மதத்தை பின்பற்றிய அவர்கள் மட்டுமே பிற்போக்குவாதிகள் அப்படி என்று சொல்லக் கூடிய ஒரு போக்கு இருந்ததாகவும், இப்பொழுது எல்லாம் மத நம்பிக்கையாளர்களும், அவர்கள் மத நம்பிக்கையை பின்பற்றுவதாக தெரிவித்தார்.

கோவை - மதுரை மெட்ரோ திட்டம் ரத்து குறித்தான கேள்விக்கு;

மத்திய அரசு மெட்ரோ கொடுக்கவில்லை என்று சொன்னால் ஏன் கொடுக்கவில்லை ?எதற்காக நிராகரித்தார்கள் ? இந்த முறை போகும்போது சரி செய்தார்களா ? எதுவும் நடக்கவில்லை, இந்த அரசு டி.பி.ஆர்.ஐ சரி செய்து எப்படி நமக்கு மெட்ரோ வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதோ ? அதை உருவாக்க வேண்டும் தவிர, அதற்கான ஆவணங்கள் கொடுக்க வேண்டும் தவிர, திருப்பி, திருப்பி ஒரே மாதிரியான டி.பி.ஆர்.ஐ அனுப்பினால் ஒரே மாதிரியான பதில் தான் திரும்பி வரும்.

அதனால் ஆவணங்களை டி.பி.ஆர்.ஐ சரி செய்வது தான் முக்கியமானது நமது மெட்ரோ திட்டத்தில் இதற்காக ஒரு குழு கமிட்டி கூட அமைத்து மதுரை - கோவை எப்படி ? நேஷனல் பாலிசி ஆப் மெட்ரோவில் நமக்கு அமைவது போன்று தயார் செய்து கொடுத்தால், நிச்சயமாக மத்திய அரசு அது கொடுக்க தயார் என்றார்.

பா.ஜ.க வும் - தி.மு.க வும் நெருங்கி வருவதாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு; 

அரசியல் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் கிடையாது

பா.ஜ.க - தி.மு.க கூட்டணி உருவாகிறதா ? என்ற கேள்விக்கு

அது உருவாகும் பொழுது சொல்லுவார்கள் உருவாவதற்கு முன்னால் நீங்களாகவே உருவாக்கி விடுவீர்கள் போல...அதற்கான சூழல் வரும் பொழுது பார்க்கலாம் என கூறினார்.