புதன், 9 செப்டம்பர், 2026

கோவையில் போதை மாத்திரைகள் & கஞ்சா பறிமுதல்" ; 2 வாலிபர்களைப் பிடித்துப் கைது செய்த போலீசார்!

SHARE

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற அம்பலம் : 400 'டைடால்' மாத்திரைகள் மற்றும் மொபைல்கள் பறிமுதல்!

 கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே நரசிம்மநாயக்கன்பாளையத்தில் சட்ட விரோதமாகப் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞர்களைப் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் கையும், களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நமச்சிவாயம் போதைப் பொருட்கள் விற்பனை குறித்து ரகசியத் தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் அடிப்படையில், நரசிம்மநாயக்கன்பாளையம் பகவான் கார்டன் பகுதியில் உள்ள செல்வமாரியம்மன் கோவில் அருகே உள்ள வாட்டர் டேங்க் பகுதியில் போலீசார் தீவிரக் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குச் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று இருந்த இரு வாலிபர்கள், போலீசாரைக் கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். சுதாரித்துக் கொண்ட காவல் துறையினர் அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினர்.

பிடிபட்ட நபர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், நரசிம்மநாயக்கன்பாளையம், குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தஆனந்தகுமார் (23), புதுப்பாளையம் ரோடு, அங்காளம்மன் நகரைச் சேர்ந்த கௌசிகன் (26) எனத் தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களைச் சோதனை செய்த போது, ஆனந்தகுமாரின் பேண்ட் பாக்கெட்டில் ஜிப்லாக் கவரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 400 ஆரஞ்சு நிற 'டைடால்' (Tydol) போதை மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. அதேபோல, கௌசிகனின் பாக்கெட்டில் 120 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவை வாங்கி வந்து, தங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும், அப்பகுதியில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் அதிக விலைக்குச் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது அம்பலமானது.

இதை அடுத்து, 400 டைடால் மாத்திரைகள், 120 கிராம் கஞ்சா மற்றும் அவர்களிடம் இருந்த Vivo Y39, Samsung ஆகிய 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போதைப்பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: