போதைப்பொருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போதைப்பொருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 செப்டம்பர், 2026

கோவையில் போதை மாத்திரைகள் & கஞ்சா பறிமுதல்" ; 2 வாலிபர்களைப் பிடித்துப் கைது செய்த போலீசார்!

கோவையில் போதை மாத்திரைகள் & கஞ்சா பறிமுதல்" ; 2 வாலிபர்களைப் பிடித்துப் கைது செய்த போலீசார்!

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற அம்பலம் : 400 'டைடால்' மாத்திரைகள் மற்றும் மொபைல்கள் பறிமுதல்!

 கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே நரசிம்மநாயக்கன்பாளையத்தில் சட்ட விரோதமாகப் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞர்களைப் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் கையும், களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நமச்சிவாயம் போதைப் பொருட்கள் விற்பனை குறித்து ரகசியத் தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் அடிப்படையில், நரசிம்மநாயக்கன்பாளையம் பகவான் கார்டன் பகுதியில் உள்ள செல்வமாரியம்மன் கோவில் அருகே உள்ள வாட்டர் டேங்க் பகுதியில் போலீசார் தீவிரக் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குச் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று இருந்த இரு வாலிபர்கள், போலீசாரைக் கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். சுதாரித்துக் கொண்ட காவல் துறையினர் அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினர்.

பிடிபட்ட நபர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், நரசிம்மநாயக்கன்பாளையம், குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தஆனந்தகுமார் (23), புதுப்பாளையம் ரோடு, அங்காளம்மன் நகரைச் சேர்ந்த கௌசிகன் (26) எனத் தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களைச் சோதனை செய்த போது, ஆனந்தகுமாரின் பேண்ட் பாக்கெட்டில் ஜிப்லாக் கவரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 400 ஆரஞ்சு நிற 'டைடால்' (Tydol) போதை மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. அதேபோல, கௌசிகனின் பாக்கெட்டில் 120 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவை வாங்கி வந்து, தங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும், அப்பகுதியில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் அதிக விலைக்குச் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது அம்பலமானது.

இதை அடுத்து, 400 டைடால் மாத்திரைகள், 120 கிராம் கஞ்சா மற்றும் அவர்களிடம் இருந்த Vivo Y39, Samsung ஆகிய 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போதைப்பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

செவ்வாய், 8 செப்டம்பர், 2026

"கோவையில் 11 to 11 பாரில் மதுப்பிரியர்கள் பயங்கர மோதல்" ; பீர் பாட்டில்களால் தாக்கி முரட்டு சண்டை: செல்போன் வீடியோ இணையத்தில் வைரல்!

"கோவையில் 11 to 11 பாரில் மதுப்பிரியர்கள் பயங்கர மோதல்" ; பீர் பாட்டில்களால் தாக்கி முரட்டு சண்டை: செல்போன் வீடியோ இணையத்தில் வைரல்!

தண்ணீர் பந்தல் சாலையில் அரங்கேறிய நடுரோட்டு அதிரடி: பொதுமக்கள் அச்சம், சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறி!

​ கோவை, பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில் இயங்கி வரும் '11 to 11' பாரில் மதுப்பிரியர்களுக்கு இடையே ஏற்பட்ட திடீர் தகராறு, ஒருவரையொருவர் கொடூரமாகத் தாக்கி கொள்ளும் வன்முறையாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, பீளமேடு பகுதிக்குட்பட்ட தண்ணீர் பந்தல் சாலையில் பிரபல ‘11 to 11’ மதுபானக் கூடம் (Bar) செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு மது அருந்த வந்த சில நபர்களுக்கு இடையே எதிர்பாராத விதமாக வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது.

​மது போதை தலைக்கேறிய நிலையில், தகராறு முற்றிப் பாரின் உள்ளேயும், வெளியேயும் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

 ஆத்திரம் அடைந்த நபர்கள் அங்கு இருந்த நாற்காலிகள் மற்றும் பாட்டில்களைக் கொண்டு ஒருவரையொருவர் கொடூரமாகத் தாக்கி உள்ளனர்.

பாரில் இருந்த மற்ற வாடிக்கையாளர்களும்,  அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த பயங்கர மோதலை அங்கு இருந்த நபர் ஒருவர் தனது மொபைல் போனில் படம் பிடித்து உள்ளார்.

​தற்போது அந்தச் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

 அந்த வீடியோவில், மதுப்பிரியர்கள் ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கும் கொடூரக் காட்சிகள் பதிவாகி உள்ளன.

​ இதுபோன்ற சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட மதுபானக் கூடத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

 கோவை, விமான நிலையம் அருகில் அமோகமாக நடக்கும் 24 மணி நேரத் தடையற்ற மது விற்பனை" ; அரசு மூடிய டாஸ்மாக் முன்பு பெட்டிக்கடையில் ரகசிய அரங்கேற்றம் - அதிர்ச்சியை ஏற்படுத்தும் செல்போன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல்!

கோவை, விமான நிலையம் அருகில் அமோகமாக நடக்கும் 24 மணி நேரத் தடையற்ற மது விற்பனை" ; அரசு மூடிய டாஸ்மாக் முன்பு பெட்டிக்கடையில் ரகசிய அரங்கேற்றம் - அதிர்ச்சியை ஏற்படுத்தும் செல்போன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல்!

குட்கா, கூலி முதல் அனைத்து மதுபானங்களும் தாராளம்!

 கோவையின் முக்கியப் பகுதியான சித்திரா விமான நிலையம் அருகில், அவிநாசி சாலையில் அரசு முத்திரையுடன் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையின் முன்புறம் உள்ள பெட்டிக் கடை ஒன்றில், எந்த நேரக் கட்டுப்பாடும் இல்லாமல் 24 மணி நேரமும் அனைத்து வகையான மதுபானங்களும் சட்ட விரோதமாக விற்கப்பட்டு வருவது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை விமான நிலையப் பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் இயங்கி வந்த அரசு டாஸ்மாக் மதுக்கடை முன்பு அரசாங்கத்தால் அதிகாரப் பூர்வமாக மூடப்பட்டது. ஆனால், பொதுமக்கள் மற்றும் காவல்துறை நடமாட்டம் அதிகமுள்ள அவிநாசி சாலை சித்திரா விமான நிலையம் அருகிலேயே, அந்த மூடப்பட்ட கடையின் முன்புறம் அமைந்து உள்ள ஒரு பெட்டிக்கடை சட்டவிரோத மது விற்பனையின் கூடாரமாக மாறிவிட்டது.

பகல், இரவு பாராமல் 24 மணி நேரமும் அங்கு அனைத்து விதமான வெளிமாநில மற்றும் பிராண்டட் மதுபானங்கள் ரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டுப் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்து உள்ளன.

மதுபானங்களுடன் நின்று விடாமல், தமிழக அரசால் கடுமையான சட்டங்களின் கீழ் தடை செய்யப்பட்டு உள்ள குட்கா, ஹான்ஸ், சருதா, பான் மசாலா மற்றும் 'கூலி' போன்ற பல்வேறு ஆபத்தான போதை மற்றும் புகையிலைப் பொருட்களும் இந்தப் பெட்டிக் கடையில் தாராளமாக விற்பனை செய்யப்படும் செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 பள்ளி, கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் இந்தப் பகுதிக்கு வந்து எளிதில் போதைப் பொருட்களை வாங்கிச் செல்வது அப்பகுதி சமூக ஆர்வலர்களைக் கவலை அடையச் செய்து உள்ளது.

சமூக விரோதச் செயல்களுக்கு வழிவகுக்கும் இந்தச் சட்டவிரோத மது மற்றும் போதைப்பொருள் விற்பனை குறித்துப் பொதுமக்கள் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்து உள்ளன.

எனவே,  காவல்துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் உடனடியாகத் சித்திரா விமான நிலையம் அருகிலுள்ள அப்பெட்டிக் கடையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு, அங்கு நடக்கும் சட்டவிரோத விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

வியாழன், 3 செப்டம்பர், 2026

 "நாய்கள் செய்த அதிசயம்" ; நள்ளிரவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற போதை இளைஞர் கைதான அதிர்ச்சி சம்பவம் !

"நாய்கள் செய்த அதிசயம்" ; நள்ளிரவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற போதை இளைஞர் கைதான அதிர்ச்சி சம்பவம் !

பெட்டிக்கடை தீ வைப்பு வழக்கை விசாரிக்கச் சென்ற போது சிக்கிய சி.சி.டி.வி: துடியலூரில் நள்ளிரவில் பரபரப்பு!

​ கோவை, அருகே நள்ளிரவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற கஞ்சா போதை ஆசாமியிடம் இருந்து, அங்கு இருந்த வளர்ப்பு நாய்கள் சண்டையிட்டுக் கடித்துப் பெண்ணைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான மற்றும் அதிர்ச்சிகரமான சி.சி.டி.வி காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, அருகே பெட்டிக்கடை ஒன்றுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டதாகத் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி (CCTV) கேமரா காட்சிகளைக் கைப்பற்றிக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

​அப்போது சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது, பெட்டிக்கடை தீ வைப்பு சம்பவத்தையும் தாண்டி அதிர்ச்சி அளிக்கும் வேறொரு கொடூரச் சம்பவம் கேமராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

இன்று அதிகாலை 2 மணி அளவில், சாலையோரமாக அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அமர்ந்து இருந்தார். அப்போது, கஞ்சா மற்றும் மது போதையில் அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவரை அங்கு இருந்த 2 நாய்கள் இடை விடாது குரைத்துத் தொடர்ந்து சென்று உள்ளன.

​அப்போது அந்த பெண்ணிடம் அந்த இளைஞர், "இது உங்க நாயா பாரு... பின்னாடியே வந்துட்டு இருக்கு!" எனக் கேட்டு உள்ளார். அதற்கு அந்தப் பெண், "கல்லை எடுத்து அடிங்க... நாய் ஓடிவிடும், இதுகூட தெரியாதா?" எனக் கூறி உள்ளார்.

 இளைஞரும் கல்லை எடுத்து எறியவே நாய்கள் சில அடி தூரம் சென்று மீண்டும் அவரைப் பார்த்துக் குரைத்துக் கொண்டே நின்றன.

​அந்தச் சமயத்தில், போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அந்த இளைஞர், சாலையோரம் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை திடீரென மானபங்கம் செய்ய முயன்று உள்ளார்.

ஆபத்தை உணர்ந்த அப்பெண் அதிர்ச்சி அடைந்து கூச்சலிடவே, உடனடியாகச் சுதாரித்துக் கொண்ட நாய்கள் பாய்ந்து வந்து அந்த இளைஞரைத் தாக்கத் தொடங்கின. குரைத்துக் கொண்டே இளைஞரின் கால்களைக் கடித்து இழுத்துப் பெண்ணை நெருங்க விடாமல் தடுத்தன.

​நாய்களின் தொடர் தாக்குதலால் நிலைகுலைந்த அந்த இளைஞர், பெண்ணை விட்டு விட்டு அங்கு இருந்து ஓட்டம் பிடித்தார்.

 விடாத நாய்களும் அந்த இளைஞரைப் பின் தொடர்ந்து துரத்திச் சென்றன.

மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்ட இளைஞரிடம் இருந்து நன்றி உள்ள நாய்கள் கடித்துப் பெண்ணைக் காப்பாற்றிய இந்த நெகிழ்ச்சி காட்சி சி.சி.டி.வி யில் தெளிவாகப் பதிவாகி இருந்தது.

​சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் உடனடியாக களமிறங்கிய காவல்துறையினர், இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட இளைஞரை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 போதை ஆசாமி இடம் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை நாய்கள் போராடிக் காப்பாற்றிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

திங்கள், 31 ஆகஸ்ட், 2026

கோவையில் ரூ.10 கோடி மதிப்பிலான 12.80 கிலோ போதைப்பொருள் அதிரடி பறிமுதல்: கேரளாவைச் சேர்ந்த 3 பேர் கைது!

கோவையில் ரூ.10 கோடி மதிப்பிலான 12.80 கிலோ போதைப்பொருள் அதிரடி பறிமுதல்: கேரளாவைச் சேர்ந்த 3 பேர் கைது!

காரின் கதவுகளில் பிரத்யேக ரகசிய அறை அமைத்து கடத்தல்: கேரள போலீசாரின் வரலாற்றுச் சாதனை மெகா வேட்டை

தமிழக எல்லைப் பகுதியான கோவையில் முகாமிட்டு, காரின் கதவுகளுக்குள் ரகசிய அறை அமைத்து கடத்த முயன்ற சுமார் ரூ.10 கோடி சர்வதேச சந்தை மதிப்புடைய 12.80 கிலோ ‘எம்.டி.எம்.ஏ.’  வீரிய ரக போதைப்பொருளைக் கேரள மாநில தனிப்படை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாகக் கேரளாவைச் சேர்ந்த முக்கிய கடத்தல் புள்ளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கேரள காவல் துறையின் வரலாற்றிலேயே ஒரே ஒரு சோதனையில் இவ்வளவு பெரிய அளவில் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் பிடிபட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது 97 கிராம் அளவிலான எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளுடன் சந்தேகத்திற்குரிய நபர்கள் பிடிபட்டனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரிலிருந்து பெரும் அளவில் வீரிய ரக போதைப்பொருள் கடத்தி வரப்பட்டு, தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களின் பல்வேறு நகரங்களில் உள்ள இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து விநியோகிக்கப்பட்டு வரும் அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து, கடத்தல் நெட்வொர்க்கின் வேர்களை அறுத்தெறிய ‘ஆபரேஷன் டூபான்’  மாநில நோடல் அதிகாரி பூட்டா விமலாதித்யா., திருச்சூர் சரக டி.ஐ.ஜி. டி.நாராயணன் மற்றும் மலப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆர்.விஸ்வநாத், உதவி காவல் கண்காணிப்பாளர் சைத்ரா தெரசா ஜான் ஆகிய உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் பிரிவான ‘டான்சாப்’  மற்றும் மஞ்சேரி காவல் நிலைய தனிப்படையினர் தீவிர ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, இந்த சர்வதேச கடத்தல் கும்பலின் முக்கிய நபர்கள் கோவையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்து, அங்கிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை இயக்கி வருவது உறுதி செய்யப்பட்டது.

தகவலறிந்த மஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் டி.ஜி.திலீப் தலைமையிலான தனிப்படை போலீசார் கோவைக்கு விரைந்தனர். கோவையில் குறிப்பிட்ட தங்குமிடத்தை ரகசியமாக முற்றுகையிட்ட போலீசார், அங்கிருந்த 3 பேரை அதிரடியாக மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பந்தல்லூர், மாம்பாவளப்பில் பகுதியைச் சேர்ந்த ஜாபிர் அலி (வயது 32) மஞ்சேரி ஆனைக்கயம், கடவத்துவூட்டைச் சேர்ந்த ஷயீம் அக்பர் (வயது 21), வயநாடு மாவட்டம் மேப்பாடி, கரிம்பயில் பகுதியைச் சேர்ந்த முகம்மது சாஹில் (வயது 34) என்பது தெரியவந்தது.

அவர்கள் பயன்படுத்திய சொகுசு காரை போலீசார் மெட்டல் டிடெக்டர் மற்றும் பிரத்யேக கருவிகள் கொண்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது காரின் நான்கு கதவுகளின் உட்புற பேனல்களிலும்  மிக நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்ட ரகசிய அறைகள் இருப்பது அம்பலமானது.

அந்த அறைகளுக்குள் 100 கிராம் முதல் 500 கிராம் வரை எடையுள்ள காற்றுப்புகாத பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நிலையில் மொத்தம் 12.80 கிலோ கிராம் எடை கொண்ட எம்.டி.எம்.ஏ. படிகங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சர்வதேச கள்ளச்சந்தையில் ரூ.10 கோடிக்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

நாக்பூரில் இவர்களுக்கு போதைப்பொருளை சப்ளை செய்த முக்கிய ஏஜெண்டுகள் யார்? கோவையிலும் கேரளாவிலும் இதனை வாங்கி விநியோகம் செய்யவிருந்த இடைத்தரகர்கள் மற்றும் நெட்வொர்க் தொடர்புகள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சர்வதேச போதைப் பொருட்களை  கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்யும் கும்பலை கேரள மாநில போலீசார் கோவையில் வந்து கைது செய்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.