சமரசம் செய்து வைத்த பாகிஸ்தான் ; 14 நாட்கள் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய டிரம்ப் !!!
பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று ஈரான் மீதான தாக்குதல் இரண்டு வாரம் நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார்.
இஸ்ரேல் - அமெரிக்க கூட்டுப்படைகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக, ஈரானின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்க - இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்துகின்றன. இந்த தாக்குதலில் எண்ணெய் கிணறுகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், மின் நிலையங்கள் என ஈரானின் முக்கிய பகுதிகள் குறிவைக்கப்படுகின்றன.
அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு ஈரான் தரப்பிலும் கடுமையான பதிலடி தாக்குதல் கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தாக்கியது. இந்த தாக்குதல் ஒரு மாதத்தை தாண்டியும் நீடித்து வருகிறது.
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக, கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கிய இடமாக உள்ள ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடியது. உலகின் 20% கச்சா எண்ணெய் போக்குவரத்து இந்த பகுதி வழியாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென ஹார்மூஸ் நீரணையை ஈரான் மூடியதால் மத்திய கிழக்கில் இருந்து தெற்காசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் முழுமையாக தடைபட்டது.
இதன் இடையே, ஹார்மூஸ் நீரிணையை 10 நாட்களுக்குள் திறக்கா விட்டால் ஈரான் மீது கடுமையான தாக்குதலை முன்னெடுப்போம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில், அந்த காலக்கெடு நேற்றுடன் நிறைவு அடைந்தது.
இந்நிலையில், காலக்கெடு நிறைவடைய சில மணி நேரங்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் போர் தொடர்பாக வெளியிட்ட பதிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில், "ஹார்மூஸ் நீரணையை உடனே திறக்கா விட்டால், ஈரான் முற்றிலும் அழிக்கப்படும். ஒரு நகரம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் ஈரான் துடைத்தெறியப்படும்" என தெரிவித்து இருந்தார்.
இதனால், மத்திய கிழக்கில் கடும் பதற்றம் நிலவி வந்தது. ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் போன்று கடுமையான தாக்குதலை அமெரிக்கா முன்னெடுக்குமோ ? என்ற அச்சம் உலகம் முழுவதும் நிலவியது.
இந்த சூழலில், போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபரிடம், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் முன்வைத்த வேண்டுகோளை ஏற்று இரண்டு வாரத்திற்கு போர் நிறுத்தம் செய்வதாக டிரம்ப் தெரிவித்தார். இதை தனது சமூக வலைதளப்பக்கத்திலும் டிரம்ப் உறுதி செய்து உள்ளார்.
அதில், "பாகிஸ்தான் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு வார காலம் போர் நிறுத்தம் செய்யப்படுகிறது. ஹார்மூஸ் நீரணை முழுவதும் திறக்க ஈரான் ஒப்புக்கொண்டு உள்ளதால் இந்த போர் நிறுத்தம் தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது ஒரு இருதரப்பு போர் நிறுத்தமாகவே இருக்கும்" என தெரிவித்து உள்ளார்.
மேலும், போர் நிறுத்தம் தொடர்பாக ஈரானின் 10 கோரிக்கைகளை நாங்கள் பெற்று உள்ளோம். இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தும் போது அதுகுறித்து பேசி முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், போர் நிறுத்தத்திற்கு உதவியதற்காக பாகிஸ்தானுக்கு ஈரான் நன்றி தெரிவித்து உள்ளது. இதன் இடையே, ஈரான்-அமெரிக்கா இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் ஏற்பாடு செய்து உள்ளது. நாளை மறுநாள் (ஏப்ரல் 10) இஸ்லாமாபாத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய கிழக்கில் கடந்த 24 மணிநேரமாக நிலவி வந்த பதற்றம் தற்போது தணிந்து உள்ளது. இதன் இடையே, போர் நிறுத்தம் காரணமாக கச்சா எண்ணெய் விலை கணிசமான குறைந்து உள்ளது.


0 கருத்துகள்: