நிறைமாத கர்ப்பிணியான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது தாக்குதல் - தஞ்சையில் பரபரப்பு !!!
வாக்குப் பதிவை பார்வையிட சென்ற போது, நிறைமாத கர்ப்பிணியான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பாபநாசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - 2026 நேற்று (ஏப்ரல் 23) மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் நடந்து முடிந்து உள்ளது. அத்துடன் வாக்குப் பதிவில் தமிழ்நாடு வரலாற்றுச் சாதனையையும் படைத்து உள்ளது. தமிழ்நாட்டில் 85.15% வாக்குகள் பதிவாகி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அனீஸ் பாத்திமா (வயது 25) போட்டியிடுகிறார். நிறைமாத கர்ப்பிணியான இவர் நேற்று காலை முதல் தனது தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் சென்று வாக்குப் பதிவு நிலவரத்தை கண்காணித்தும், கேட்டறிந்தும் வந்தார்.
அந்த வகையில், நேற்று மாலையில் அம்மாப்பேட்டை அருகே உக்கடை என்ற கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு நடைபெற்றதை பார்வையிடுவதற்காக நேரில் சென்றிந்தார். அப்போது வாக்குப் பதிவு மையத்தில் இருந்த சிலர் அனீஸ் பாத்திமாவை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அத்துடன் அவரை கீழே தள்ளி விட்டதாகவும் கூறப்படுகிறது.
அதில் மயக்கம் அடைந்த வேட்பாளர் அனீஸ் பாத்திமாவை அங்கு இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த தகவலை அறிந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனீஸ் பாத்திமாவின் கணவர் ஷேக் அம்சத் அலி கூறுகையில், "பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளருடன் தொகுதி முழுவதும் சென்று வாக்குப் பதிவு நிலவரத்தைப் பார்வையிட்டு வந்தோம். அப்படி உக்கடையில் உள்ள வாக்குப் பதிவை பார்வையிட சென்ற போது, துண்டு அணிந்து வரக் கூடாது என காவல் துறையினர் தெரிவித்தனர்.
அதனால் துண்டுகளைக் கழற்றிவிட்டு உள்ளே சென்றோம். அங்கு தி.மு.க கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் சின்னமான ஏணி சின்னம் பொறித்த பேட்ஜ் அணிந்து கொண்டு வாக்குப் பதிவு மையத்தில் சிலர் அமர்ந்து இருந்தனர்.
அப்போது அங்கு இருந்த போலீசாரிடம் எங்களை மட்டும் துண்டு அணிந்து வரக் கூடாது என்று கூறினீர்கள். ஆனால் இங்கு ஏணி சின்னம் பேட்ஜ் அணிந்து உள்ளனர் எனக் கேட்ட போது, அங்கு இருந்தவர்கள் எங்களை தரக்குறைவாக பேசினர். அப்போது தலையிட்ட போலீசார், இது தொடர்பாக புகார் ஏதும் கொடுப்பதாக இருந்தால் புகார் மனு எழுதித்தாருங்கள் என்று கூறினர்.
அதே நேரத்தில் நாங்கள் புகார் மனு எழுத முயன்ற போது, அங்கு இருந்த பலர் எனது மனைவியை கீழே தள்ளி விட்டு செங்கற்களால் தாக்கினர். இதில் நிலைகுலைந்து போன எனது மனைவி மயக்கம் அடைந்ததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளோம். தற்போது, தொடர் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்: