செவ்வாய், 28 ஏப்ரல், 2026

அரசியல் நோக்கங்களுக்கு குழந்தைகள் பயன்படுத்தப்படுவதற்கு கண்டனம்- தேர்தல் ஆணையத்திடம் புகார் !!!

SHARE

 அரசியல் நோக்கங்களுக்கு குழந்தைகள் பயன்படுத்தப்படுவதற்கு கண்டனம்- தேர்தல் ஆணையத்திடம் புகார் !!!

குழந்தைகளை அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுவதை கண்டித்து தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் என்ற தன்னா்வ அமைப்பு புகார் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தேர்தல் சூழலில் குழந்தைகள் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவது குறித்து மிகுந்த கவலை மற்றும் கடும் எதிர்ப்பை தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் பதிவு செய்கிறது.

சமீப காலமாக சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோக்களில் குழந்தைகள் தங்கள் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களை குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கும், அதன் சின்னத்திற்கும் வாக்களிக்குமாறு வற்புறுத்தும் காட்சிகள் வெளியாகி வருகின்றன.

அந்த வீடியோக்களில், குழந்தைகள் அழுவது, உணவு சாப்பிட மறுப்பது, பிடிவாதமாக நடப்பது, உணர்ச்சி ரீதியான அழுத்தம் கொடுப்பது போன்ற செயல்பாடுகள் தென்படுகின்றன.

அந்த வீடியோக்களில் மிகவும் கவலைக்கிடமான, ஆபத்தான கூறுகள் வெளிப்படுகின்றன. அதாவது, குடும்பத்தினருக்கு தீங்கு விளைவிப்பதாக மிரட்டும் பேச்சுகள், குழந்தைகளின் மனநிலையை பாதிக்கும் வகையிலான தூண்டல்கள், குடும்ப அமைதியை சீர்குலைக்கும் அளவிற்கு உணர்ச்சி கட்டுப்பாடின்மை போன்றவை காணப்படுகின்றன. இந்த நிலைமை குழந்தைகளின் மனநலம், பாதுகாப்பு மற்றும் சமூக வளர்ச்சிக்கு நேரடியான அச்சுறுத்தலாகும்.

இது தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு குழந்தை உரிமை கண்காணிப்பகம் புகார் அளித்து உள்ளது. அதில், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டு உள்ளது என்றும், குழந்தைகள் மூலம் வாக்காளர்களை பாதிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, இதுதொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் கோரப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதில், தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரப்பட்டு உள்ளது.

மேலும், கட்சித் தலைவர் சி.ஜோசப் விஜய்க்கு கண்டனக் கடிதமும் அனுப்பப்பட்டு உள்ளது. அதில், குழந்தைகளை உணர்ச்சி ரீதியாக பயன்படுத்துவதற்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

அவருடைய கட்சி நிர்வாகிகளும், ஆதரவாளர்களும் குழந்தைகளை பயன்படுத்தி வீடியோக்கள் உருவாக்குவதை நிறுத்த வேண்டும் என்றும், எமோஷனல் பிளாக் மெயில் கொண்ட ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் வீடியோக்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஏற்கனவே உள்ள வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த செயல்பாடுகள் சிறார் நீதி சட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு மன அழுத்தும் ஏற்படுத்துதல் மற்றும் குழந்தைகளை தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்துதல் ஆகிய குற்றங்களாக கருதப்படக் கூடியவை.

எனவே, ஊடகங்கள், சமூக ஊடகப் பயனர்கள், சமூக அமைப்புகள் தங்கள் சுற்றுப்புறங்களில் நடைபெறும் குழந்தைகள் மீதான தவறான செயல்பாடுகளை கவனமாக கண்காணிக்க வேண்டும்.

குழந்தைகள் உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரியவந்தால் உடனடியாக 1098 என்ற அவசர உதவி எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

அதன் மூலம், குழந்தைகளுக்கு உடனடி ஆலோசனை வழங்க முடியும். மன ரீதியாக ஆதரவு மற்றும் வழிகாட்டுதல்களை அளிக்க முடியும். குடும்ப சூழலில் உருவாகும் பதற்றத்தையும் குறைக்க முடியும்.


குழந்தைகள் அரசியல் கருவிகள் அல்ல. குழந்தைகளின் மனநலம் மற்றும் பாதுகாப்பு எந்த அரசியல் இலக்கிற்கும் மேலானது. சமூகமே இணைந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சியை காப்பது ஒட்டு மொத்த சமூகத்தின் பொறுப்பாகும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: