சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் !!!
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ‘சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு ஏப்.30 ஆம் தேதி முதல் மே 2-ஆம் தேதி வரை சென்னை மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து (கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்) ஏப். 30 ஆம் தேதி 548 பேருந்துகளும், மே 1 ஆம் தேதி 565 பேருந்துகளும், மே 2 ஆம் தேதி 35 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
அதேபோல, சென்னை மாதவரத்தில் இருந்து ஏப். 30ஆம் தேதி 186 பேருந்துகளும், மே 1ஆம் தேதி 174 பேருந்துகளும்; சென்னை அடையாரில் இருந்து ஏப். 30 ஆம் தேதி 55 பேருந்துகளும், மே 1ஆம் தேதி 50 பேருந்துகளும் என தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.
மேலும், சென்னை கோயம்பேட்டில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில், சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு ஏப். 30- மே 2 வரை 11,823 பேருந்துகள் தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு மே 1 அன்று இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும், மதுரை, சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
ஏப்.30 (வியாழக்கிழமை), மே 1 (மே தினம் – வெள்ளிக்கிழமை) மே 2 மற்றும் 3 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) என தொடர் விடுமுறையை முன்னிட்டு, ஏப்.30, மே 1, மே2 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஏப்.30 ஆம் தேதி 475 பேருந்துகளும், மே 1 மற்றும் 2ஆம் தேதி 315 பேருந்துகளும் இயக்கப்படும்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஏப்.30 ஆம் தேதி 85 பேருந்துகளும், மே 1 மற்றும் 2-ஆம் தேதி தலா 14 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
அதேபோல, மே 3 ஆம் தேதியன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 615 சிறப்பு பேருந்துகள் இயக்கிடத் திட்டமிடப்பட்டு உள்ளது. அதில், முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமையன்று 13,103 பயணிகளும்; வெள்ளிக்கிழமையன்று 3,950 பயணிகளும் சனிக்கிழமையன்று 3,134 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று 7,232 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்து உள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு பயணிகள் தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி, தங்களது பயணத்தினை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்: